Friday 27 April 2018

பார்வை அருளும் பரமேஸ்வரன் !


கத்திய முனிவர் வழிபட்ட தால் `அகத்தீஸ்வரர்' எனும் திருப் பெயர் ஏற்று ஈசன் அருள்பாலிக்கும்  எண்ணற்ற சிவத்தலங்கள் தென்ன கத்தில் உண்டு. அவற்றில் ஒன்று பெருங்குடி. 

கல்வெட்டுகளில் இத்தலத்தின் பெயர், ‘பெருமுடி’ என்றே காணப் படுகிறது. இறைவனின் திருப் பெயர் ‘அகத்தீஸ்வரமுடையார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த இறைவனைத் தரிசித்து வழிபட்டால், பார்வை குறைபாடு கள் நீங்கும் என்பது நம்பிக்கை.  
இக்கோயிலில், ஸ்ரீதட்சிணா மூர்த்தி சந்நிதிக்கு அருகிலுள்ள கல்வெட்டு குறிப்பிடும் சம்பவம் ஒன்றும் இந்த நம்பிக்கையை மெய்யென்று நிரூபிக்கிறது !

கூத்தனின் மகளுக்கு அருளிய கூத்தன்! 

முற்காலத்தில் இந்தப் பகுதியில் கூத்தன் என்பவர் வசித்து வந்தார். அகத்தீஸ்வரரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தவர் அவர்.

பக்தர்களைச் சோதித்து ஆட்கொள்வது பரமனின் இயல்பு ஆயிற்றே! கூத்தனுக்கும் ஒரு சோதனை ஏற்பட்டது. ஒருநாள் எதிர்பாராத விதமாக அவருடைய மகள் நல்ல மங்கைக்குப் பார்வை பறிபோனது. அவளுக்குப் பார்வை திரும்ப கிடைக்க வேண் டும் என்பதற்காகப் பல வைத்தியர் களிடம் அழைத்துச் சென்றார் கூத்தன்.  ஆனாலும் பயனில்லாமல் போனது.

பல வருடங்கள் கடந்தன. கி.பி.1268ல் ஹொய்சாள மன்னர் ராமநாதனின் ஆட்சிக் காலத்தில், அகத்தீஸ்வரமுடையாரின் திருக் கோயில் திருப்பணிகள் தொடங் கப்பட்டன. பணிகளில் சில மிச்சமிருந்த நிலையில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், கூத்தன் தன் மகளின் சிகிச்சைக்காக வைத் திருந்த மூன்று கழஞ்சு பொன்னை ஆலயத் திருப்பணிக்கு வழங்கி னார். திருப்பணிகள் பூர்த்தியாகி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து, ஐயன் அகத்தீஸ் வரரின் கருணையால், நல்ல மங்கைக்கு பார்வை கிடைத்தது. அதனால் நெகிழ்ந்துபோன கூத்தன், மறுபடியும் கழஞ்சு பொன்னால் பட்டம் செய்து,  அகத்தீஸ்வரருக்குச் சார்த்தி வழிபட்டார். இதுபற்றிய விவரத்தை கல்வெட்டிலும் பொறித்துவைத்தாராம். 

சுந்தர சோழனின் காலத்தில்... 

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசன் பேட்டைக்கு அடுத்து வலது பக்கமாகச் சென்றால், பெருங்குடி கிராமத்தை அடையலாம். சுற்றிலும் பசுமை போர்த்திக் காட்சி தரும் வயல்வெளிகள் சூழ்ந்த பெருங்குடி கிராமத்தின் வடக்கில் அமைந்திருக்கிறது ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில்.  
தொடக்கக் காலத்தில் காவிரிக் கரையோரம் செங்கற்றளி களாக அமைந்திருந்த நூற்றுக்கணக்கான ஆலயங்கள், சோழர்கள் காலத்தில் கற்றளிகளாக நிர்மாணிக்கப்பட்டன. அவற்றில் இக் கோயிலும் ஒன்று. இங்கு, ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. எனவே, இந்தக் கோயில் சுந்தர சோழர் காலத்தில் கட்டப்பட்டிருக்க லாம் என்று சொல்லப்படுகிறது. கோயில் கருவறை, முகமண்டபம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், அம்பாள் சந்நிதி பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள். 

கோயிலுக்குள் இறைவனைத் தரிசிக்கச் செல்லும்போது முதலில் நம்மைக் கவர்வது மண்டபம்தான். அதன் இடப்புறத்தில் ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீவேங்கடாசலபதி, ஸ்ரீலட்சுமி நாராயணர் திருவுருவங்களும், வலப் பக்கத்தில் ஸ்ரீதெய்வானையுடன் ஸ்ரீமுருகப்பெருமானும் காட்சி தருகின்றனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் போற்றப்பெறும் முருகப்பெருமான் இவர். 

அவருக்கு அருகில் சப்த கன்னியரில் வைஷ்ணவி, பிராம்மி, வாராகி ஆகியோர் மட்டுமே காணப்படுகிறார்கள். முருகனுக்கு நேரெதிரில் ஈசான்ய மூலையில் சனீஸ்வர பகவான் தனியாக எழுந்தருளியிருக்கிறார். இந்தக் கோயில், செவ்வாய் தோஷம் மற்றும் சனி தோஷம் ஆகிய வற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

தலை சாய்ந்த நிலையில் சிவலிங்கம்!

மண்டபத்தைக் கடந்து கருவறைக்குச் செல்கிறோம். பொதுவாகக் கருவறை வாயிலில் இருக்கும் துவாரபாலர்களில் வலப்புறத்தில் உள்ளவரின் திருக்கரத்தில் நரசிம்ம திருமுகம் திகழ்கிறது. வேறெங்கும் இப்படியான துவாரபாலகரைக் காண்பதரிது என்கிறார்கள்.

கருவறையில், வடக்கே சற்று சாய்ந்து தென்கிழக்கை நோக்கிய லிங்க மூர்த்தமாக அருள்கிறார் அகத்தீஸ்வரர். அம்பாள் ஸ்ரீசிவகாமி சுந்தரி தனிச் சந்நிதியில் காட்சி தருகிறாள். இந்த அம்பிகைக்கு அகிலாண்டேஸ்வரி என்ற திருப்பெயரும் வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அம்பாள் சந்நிதியின் இடப்பக்கத்தில் ஸ்ரீநர்த்தன விநாயகரும், வலப் பக்கத்தில் மயில் வாகனத்தில் ஸ்ரீமுருகப் பெருமானும் காட்சி தருகிறார்கள். 

பிராகாரத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோர் அருள்கின்றனர்.  சோழர்காலச் சிற்பத் திறனுக்குச் சாட்சியாகத் திகழ்கின்றன இந்தத் தெய்வமூர்த்தங்கள். குறிப்பாக மாதொருபாகனாம் அர்த்தநாரீசுவரரின் திருவடிவில், திருமுடி தொடங்கி திருவடி வரை அனைத்து அங்கங்களையும் நுட்பமாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள். மட்டுமின்றி, கோயிலின் சுவர்களில் திகழும் குறுஞ்சிற்பங்களும் அற்புதம்; ராமாயணக் காட்சிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஆகியவற்றை நம் கண் முன்னே படம்பிடித்துக் காட்டுகின்றன!

கோயில் தோரணவாயிலில் திகழும் கணபதி- மகாலட்சுமி தேவி  சிற்பம், சுற்றிலும் திகழும் சிவபெருமானின் போர்க்களக் காட்சிகள், சிவன் மற்றும் பார்வதிதேவி வேடர்கள் வடிவில் அருளும் காட்சி, கஜ சம்ஹார திருக்கோலம்... என இறையின் அருள்திறனோடு சிற்பிகளின் கலைத்திறனும் செழித்தோங்கி திகழ்கிறது இந்தக் கோயிலில். கண்களில் பிரச்னை இருப்பவர்கள் பெருங்குடி அகத்தீஸ்வர முடையாரிடம் முறையிடுங்கள். அவர் நமது புறக்கண்களின் குறையைத் தீர்ப்பதோடு, நமது அகக் கண்களையும் திறக்கவைத்து, அற்புதமான எதிர்காலம் அமைய வரம் அருள்வார்.

கண் நோய் தீர்த்த கல்வெட்டு பற்றிய தகவல் ... 

இந்தியக் கல்வெட்டறிக்கை எண் : 394 (1939 - 1940) 


சக் கூலிக்கு இவன் இட்ட பொன் கழஞ்சு முக்கழஞ்சு இப் 
பொன் முக்கழஞ்சும் திருப்பணிக்கு கூ(த்)தன் இட் 
டான் இதுவும் 19 வது மகரநாயற்று நாள் இந்த கூத்தன் 
மகள் நல்லமங்கை சிறு வயஸ்ஸிலே கண் ம(றை)ந்த 
அளவுக்கு இவன் மகள் பின்பு 
கண் விளங்கி ஐந்நாயனாருக்கு இவன் கழஞ்சு 
பொன்னிட்டு பட்டம் பண்ணிச் சாத்தினான்

பக்தர்கள் கவனத்துக்கு... 

ஸ்வாமி: ஸ்ரீஅகத்தீஸ்வரர்

அம்பாள்: 
ஸ்ரீசிவகாமசுந்தரி

வழிபாட்டுச் சிறப்பு: பார்வை குறைபாடு உள்ளவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமி-அம்பாளைத் தரிசித்து வழிபட்டால், விரைவில் குறைபாடுகள் நீங்கும். மேலும் செவ்வாய் தோஷம் மற்றும் சனி தோஷம் நீங்கவும் அருள்வழங்கும் திருத்தலம் இது.

நடை திறந்திருக்கும் நேரம்:
 காலை 8:30 முதல் 11.30 மணி வரை; மாலை 5 முதல் 7:30 மணி வரை.

எப்படிச் செல்வது ?: 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து வயலூர் செல்லும் சாலையில்  9 கி.மீ தொலைவிலுள்ளது சோமரசன் பேட்டை. அங்கிருந்து வலப் புறம் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்.

No comments:

Post a Comment