Wednesday, 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 19

                                          வெள்வேலம்.


கும்ப ராசிக்கான கிரகம் மற்றும் நட்சத்திரங்களின் நல்ல கதிர்வீச்சுகளையும் மின்காந்த சக்தியையும் ஈர்த்து, தனக்குள் சேமித்துவைக்கும் வல்லமை கொண்ட தெய்வீக மரம்- வெள்வேலம்.
கும்ப ராசிமண்டலத்தில் பிறந்தவர்களும், சனிக்கிழமை மற்றும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரையிலான தினங்களில் பிறந்தவர்களும் போற்றிக் கொண்டாட வேண்டிய தெய்வ விருட்சம் இது! இவர்கள் இந்த மரத்தைக் கட்டிப் பிடித்தாலோ, இதன் நிழலில் அமர்ந்தாலோ, மரம் சேமித்து வைத்திருக்கும் மின்காந்த அலைகள், அவர்களின் உடலில் மாபெரும் சக்தியை ஏற்படுத்தும் என்கின்றன வானவியல் மற்றும் மூலிகை சாஸ்திரங்கள்.
வேல மரத்தை வெள்வேலம், கருவேலம், குடைவேலம் என்று வகை பிரித்துள்ளனர். இதில் 'பரம்பை’ என்றும் சிறப்பிக்கப்படும் வெள்வேல மரம், பல ஆலயங்களின் ஸ்தல விருட்சமாகவும் திகழ்கிறது. அந்த ஆலயங்களில் குறிப்பிடத்தக்கது சென்னை- திருவேற்காடு ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயம்.
சென்னை- கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலம், முற்காலத்தில் வெள்வேல மரங்கள் சூழ்ந்த பகுதியாகத் திகழ்ந்ததால், வேற்காடு என்று பெயர்பெற்றதாக ஸ்தல புராணம் விவரிக்கிறது.
ததீசி எனும் சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டதாம். இருவருக்குமான சண்டையில், திருமாலின் அனைத்து பாணங்களும் வீணாயின. ததீசியை அவரது சிவ பக்தி காத்தருளியது. இறுதியாக, சக்ராயுதத்தைப் பிரயோகித்தார் திருமால். அதிலிருந்தும் ததீசி தப்பித்தார்! அதையடுத்து, சிவ பூஜையில் ஈடுபட்டார் திருமால். தினமும் 1000 மலர்களால் ஈசனை வழிபடுவது என முடிவு செய்தார்.
ஒரு நாள்... ஒரு பூ குறைந்துபோக, தனது ஒரு கண்ணையே பெயர்த்து ஆயிரமாவது பூவாக சிவனாருக்குச் சமர்ப்பித்தார் திருமால். அந்த நிமிடமே அவருக்குத் திருக்காட்சி தந்தார் சிவனார். இழந்த கண்ணையும், சுதர்சன ஆயுதத்தையும் பெருமாளுக்கு வழங்கியதுடன், அவருக்குக் 'கண்ணன்’ என்றும் பெயர் சூட்டி அருள்புரிந்தார் என்கிறது ஸ்தல புராணம்.
இதைக் கண்ணுற்று மனமுருகிய ஆதிசேஷன், 'எங்கள் திருமால் ரத்தம் சிந்திய இந்தத் திருவிடத்தில், எவரையும் தீண்டமாட்டோம்; எவருக்கும் தீங்கு செய்யமாட்டோம்’ என உறுதி ஏற்றாராம். திருமால் சிவபூஜை செய்த அந்தத் திருவிடம்- திருவேற்காட்டின் ஒரு பகுதியான கண்ணபாளையம்!
அதுமட்டுமா? அகத்தியருக்கு தமது திருமணக்கோலத்தை சிவனார் காட்டியருளிய தலங்களில் ஒன்று; மூர்க்க நாயனார் அவதரித்த பூமி; 12 பாடல்களால் திருஞான சம்பந்தர் பாடித் துதித்த திருவிடம்; சேக்கிழார் போற்றிய திருத்தலம்... எனப் பெருமைகள் பல உண்டு இந்தத் தலத்துக்கு!
கருவறையில், லிங்க ரூபமாகக் காட்சி தருவதுடன், ஸ்ரீவிநாயகர் மற்றும் ஸ்ரீபாலாம்பிகையுடன் அருள்புரிகிறார் ஸ்ரீவேதபுரீஸ்வரர். மூர்க்க நாயனார், சேக்கிழார், கோயிலைக் கட்டிய அநபாய சோழன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளும் இங்கே உள்ளன. சனீஸ்வரர் மற்றும் அருணகிரியார் சந்நிதிகளையும் தரிசிக்கலாம். வெளிப் பிராகாரத்தில், கம்பீரமாக நிற்கிறது வெள்வேல மரம்!
மருத்துவப் பயன்கள் மிகுந்தது வெள்வேலம். இதன் குச்சிகள் பல் துலக்கவும், பற்கள் உறுதிப் படவும் உதவுகின்றன. இதன் இலையை மென்றாலும் பற்கள் உறுதிப்படுமாம். வெள்வேல இலைகளை அரைத்துப் பூசினால், புண்கள் ஆறிவிடும்; வீக்கமும் குறையும்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வெட்டை, வீக்கம் ஆகியவற்றையும் குணப்படுத்த வல்லது, வேல இலை. பல் முளைக்கும்போது குழந்தை களுக்கு பேதி ஏற்படுவதைக் கட்டுப்படுத்த, வேல இலைகளை நீரில் கொதிக்க வைத்துக் கஷாயமாக்கிக் கொடுப்பார்கள்.
விதை பிடிக்காத வேலங்காய்களைப் பறித்து, உலர வைத்துப் பவுடராக்கி, சம அளவு சர்க்கரை யுடன் பாலில் கலந்து சாப்பிட்டால், இந்திரிய கசிவுப் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
அரிப்பு, படை முதலான தோல் நோய்களுக்கு, வேலம் பூக்கள் மருந்தாகப் பயன்படுகின்றன வேலம் பிசினை எடுத்து, நெய்யில் வறுத்துச் சாப்பிட்டால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை நீங்கும்.
அதுமட்டுமா?! வேல விதைகளை அரைத்துத் தேனில் கலந்து, உடைந்த எலும்புகளின் மேல் வைத்துக் கட்டினால், உடைந்த எலும்புகள் விரைவில் ஒன்று சேரும் என்கின்றன மருத்துவ நூல்கள்!
- விருட்சம் வளரும்

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ! - 18

                              

                                        அரச மரம்.

பஞ்ச பூதங்களில், நெருப்புடன் தொடர்புடைய தனுசு ராசிக் காரர்கள், பெரும்பாலும் பயணத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பர். இந்த ராசிக்காரர்களுக்கும், மீன ராசிக்காரர்களுக்கும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்கும், வியாழக்கிழமை மற்றும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கும் உகந்தது அரச மரம்.
இவர்கள், அரச மரத்தை தினமும் அரைமணி நேரம் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தாலோ, அதன் நிழலில் இளைப்பாறினாலோ நற்பலன்களைப் பெறலாம். குழந்தை வரம், திருமண வரம், பண வரவு ஆகிய காரியங்களுக்கு உதவும் கிரகமாக வியாழனைச் சிறப்பிக்கின்றன சாஸ்திரங்கள்.  இந்தக் கிரகத்துக்கும் அரச மரத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு.
அரச மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளைச் சாப்பிட்டால், நல்ல நிவாரணம் பெறலாம். பொதுவாக எல்லா தாவரங்களும், 12 மணி நேரம் ஆக்ஸிஜனையும், 12 மணி நேரம் கார்பன்டைஆக்ஸைடையும் வெளியேற்றுமாம். ஆனால், அரச மரம் மட்டுமே 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை வெளியேற்றக்கூடியது. அதனால்தான் ஆலயங்களைச் சுற்றிலும், சுற்றுப்புறச் சூழலைப் பேணும் பொருட்டு அரச மரங்களைப் பராமரித்து வளர்க்கின்றனர்போலும்!
காவிரி தென்கரைத் தலங்களில் 36-வது தலமான திருவாவடுதுறை ஸ்ரீஒப்பிலாமுலையம்மன் சமேத ஸ்ரீகோமுத்தீஸ்வரர் (ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்) கோயிலின் ஸ்தல விருட்சம்- அரசமரம் (படர் அரசு). பசுக்கள் கூட்ட மாக வந்து இளைப்பாறவும், மேயவும் வசதியான காவிரியாற்றுத்துறைஎன்பதால், திரு ஆ அடு துறை என்று தலப்பெயர் அமைந்ததாம்.
மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவில், திருவாவடு துறை ஆதீன மடமும், ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. அகத்தியர், திருமூலர், போகர், போகரின் சீடர்களில் முக்கியமானவர் களான திருமாளிகைத் தேவர், கருவூர்த் தேவர், கொங்கணர் முதலான நவகோடி சித்தர்களும், இங்கு வந்து இறைவனை வழிபட்டு அட்டமா ஸித்திகளைப் பெற்றதால், இதனை நவகோடி சித்தர்புரம் என்றும் அழைப்பர்.
பசுவாக உருவெடுத்த ஸ்ரீபார்வதிதேவி, திருவா வடுதுறை இறைவனை வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்றாளாம். பூச நன்னாளில், அம்பிகையின் கோ (பசு) உருவை நீக்கி, அவளின் திருவுருவை அணைத்து எழுந்தருளியதால், ஸ்வாமிக்கு 'அணைத்தெழுந்த நாயகர்’ எனும் பெயரும் உண்டு. பிரிந்த தம்பதியர்,  இங்கு வந்து, ஸ்ரீஅணைத்தெழுந்த நாயகரை வழிபட, பிரச்னைகள் நீங்கும்; பிரிந்தவர்கள் சேருவர் என்பது ஐதீகம்.
நான்கு கரங்களுடன், நின்ற கோலத்தில் அருள்கிறாள் அம்பிகை. ஸ்ரீதுணை வந்த விநாயகர், ஸ்ரீஅழகிய பிள்ளையார், ஸ்ரீதட்சிணாமூர்த்தி (அகத்தியரின் வெண்குஷ்டத்தை நீக்கியருளியவர் இவர் என்கிறது ஸ்தல புராணம்) ஆகியோருக்கும் சந்நிதிகள் உண்டு. மேலும், வடக்கு நோக்கியவராக ஸ்ரீதிருநிறைகண்ட விநாயகர் காட்சி தருவது சிறப்பு. இங்குள்ள நந்தி. தஞ்சை பெரியகோயில் நந்தியைவிட பெரியது என்கிறார்கள். மாடுகளுக்கு ஏதேனும் வியாதி வெக்கை வந்தால், உடனே கோயிலுக்கு அழைத்து வந்து, இந்த நந்தியின் முன்னே நிறுத்தி பூஜிக்க, நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை!
அந்தக் காலத்தில் அரச வனமாகத் திகழ்ந்த பகுதியாம் இது. மரங்களின் அரசன் என்பதால், இந்த மரத்துக்கு இப்படியரு பெயர் அமைந்ததாம். ஓர் அரசங்கன்றை நட்டு வளர்த்தால் போதும்... நம் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடம் உண்டு என்கிறது விருட்ச ஆயுர்
வேதம்! இந்த மரத்துக்கு கார்மேகங்களைக் கவரும் வல்லமை உண்டு. எனவே, வேள்விகளில் அரசங்குச்சியை சமித்தாகப் பயன்படுத்துவர்.
'மரங்களில் நான் அரச மரம்’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். காலையில் நீராடியதும் இந்த மரத்தை வலம் வர வேண்டும் என் கிறது மகாபாரதம். மரத்தை வலம் வரும்போது, நம் மீது படுகிற மரத்தின் காற்றால், நோய் நிவாரணம் கிடைக்கும்; ஆயுள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், அரச மரத்தைச் சுற்றி னால், சூலகம் தூண்டப்படும்; ஆண்கள் வலம் வந்தால், சுக்கிலம் தூண்டப்பட்டு, ஜீவ அணுக்கள் அதிகரிக்கும் என்கிறது ஆயுர்வேதம்.
அரசும் வேம்பும் இணைந்து வளரும் போது, அங்கே மின்சக்தி நிலவுவதாகத் தெரிவிக்கிறது அறிவியல். அரசம் பழங்களைப் பவுடராக்கி, மாதவிலக்கு முடிந்ததும், சுமார் 3 கிராம் அளவில், தாய்ப்பாலில் கலந்து சாப்பிட, குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த மரத்தின் பழங்கள், பித்த நோய்களையும் ரத்தக் குறைபாடுகளையும் குணமாக்குமாம். இதன் உலர்ந்த பழங்கள் ஆஸ்துமா, மலச்சிக்கல் ஆகியவற்றை நீக்குகிறது. எலும்பு முறிவு சிகிச்சைக்கு, இளம் மரத்தின் பட்டை பயன்படுகிறது; இது இடுப்பு வலி மற்றும் புண்களையும் குணப்படுத்தும் என்பர்.
அரசஇலைத் துளிரைப் பாலில் அல்லது தண்ணீரில் வேகவைத்து வடிகட்டி, சர்க்கரை கலந்து குடித்தால், மூளைக்குச் சக்தி கிடைக்கும். இலைகளை நிழலில் உலர வைத்து அரைத்து குல்கந்து சேர்த்து, தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும்! அரச இலையையும் வேப்பிலையையும் நன்றாக அரைத்து மூலக் கட்டி மீது பூசினால், வலி குறையும்.
அரச மரத்தின் ஏழு முதிர்ந்த இலைகளை எரித்துத் தண் ணீரில் போட்டு, சிறிது நேரம் கழித்து, வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும். மரத்தின் பட்டையையும் இலைகளையும் தண்ணீரில் கொதிக்கவைத்துத் தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் ஆகியன நீங்கும்; ரத்தம் சுத்தமாகும்!
திருநல்லம், திருப்பரிதிநியமம், திருக்கச்சி, திருப்புட் குழி, திருப்புல்லாணி ஆகிய ஆலயங்களிலும் அரச மரமே ஸ்தல விருட்சமாகப் போற்றப்படுகிறது.
விருட்சம் வளரும்

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 17

                                                                  கருங்காலி.

வான மண்டலத்தில், தேள் வடிவில் காட்சி தரும் நட்சத்திரக் கூட்டத்தை 'விருச்சிகம்' என்பர். இந்த ராசி மண்டலம், உடலில் இனவிருத்தி உறுப்புகளுடனும், பஞ்ச பூதங்களில் நீருடனும் தொடர்புகொண்டது.
விருச்சிக ராசிக்காரர்கள் பயந்த சுபாவமும், நிலையான குணமும் கொண்டவர்கள். செவ்வாய்க்கிழமைகள், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலான நாட்கள், அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு நலம் தரும் விருட்சம்- கருங்காலி. விருச்சிக ராசியின் மின்கதிர் வீச்சுகளைத் தன்னில் சேகரித்துவைத்து, தன்னைத் தொடுவோருக்கும் தனது நிழலில் அமருவோருக்கும் அந்தக் கதிர்வீச்சுகளை மாற்றி விடுகிறது கருங்காலி. செவ்வாய் தோஷத்தை நீக்குவதில் கருங்காலிக்கு முக்கிய இடம் உண்டு. வானியல் சாஸ்திரமும், 'கருங்காலி வகை முள் மரங்கள், தோஷத்தை நீக்கச் சிறந்த மருந்து' என்கிறது.
செவ்வாய் கிரகத்தின் பாதிப்பு, உச்சந்தலை முதல் கழுத்து வரையிலும்... கண் அழற்சி, வீக்கம், ரத்த வாந்தி, பசியின்மை, தொழு நோய், வெண் குஷ்டம், மூலம், சர்க்கரை நோய், தேக பலவீனம் என்று பாதிப்புகளை ஏற்படுத்தும். இவை அனைத்துக்கும் அருமருந்தாக விளங்குகிறது கருங்காலி மரம். இந்த மரத்தை விருட்சமாகக் கொண்ட தலம் திருமாகாளம் எனும் அம்பர் மாகாளம். நன்னிலம் தாலுகா, பூந்தோட்டத்துக்கு அருகில் உள்ள இந்தத் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் ஸ்வாமி- ஸ்ரீமகாகாளநாதர்; அம்பாள் - ஸ்ரீபயக்ஷயாம்பிகை (பயத்தைப் போக்குபவள்). மனிதனது ஆயுள் நீட்டிப்புக்கான தலம் இது. உஜ்ஜயினி மாகாளம், அம்பர் மாகாளம் மற்றும் இரும்பை மாகாளம் ஆகிய தலங்களில், அம்பர் மாகாளத்தைத் தரிசிக்க, அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.
ஸ்வாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பிகை சந்நிதி கொண்டிருக் கிறாள். இங்கு மோட்ச லிங்கம், ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி, ஸ்ரீநீலோத்பலாம்பாள், ஸ்ரீநரமுக விநாயகர், ஸ்ரீநரமுக முருகன் ஆகியோரும் அருள்கின்றனர்.
ஒருமுறை, அம்பல் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரைத் தரிசிக்க வான் வழியே சென்ற துர்வாசரை கண்டு, அவர் மீது மையல் கொண்ட மதலோலை என்பவள், ''எனக்குப் புத்திரப் பேறு அருளுங்கள்' எனப் பிரார்த்தித்தாள். துர்வாசரும் 'அப்படியே ஆகட்டும்' என வரம் தந்தார். மதலோலை வரம்கேட்டது, மதியப்பொழுது. ஆகவே, அவள் கருவுற்ற நேரமும் மதியமானது.
நடுவானில், அம்பன், அம்பாசுரன் எனும் இரண்டு அசுர குணமுள்ள ஆண் குழந்தைகளை ஈன்றெடுத்தாள்!
மகவு ஈன்றதும், தாயின் மார்பகம் சுரந்தது. குழந்தைகளை அள்ளியெடுத்துப் பால் கொடுக்க முனைந்தாள். அந்தக் குழந்தைகள் தாய்ப்பாலுடன், அவளது ரத்தத்தையும் சேர்த்து உறிஞ்சின. தாய் துடித்தாள்! ஆனாலும், தன்னுடைய குழந்தைகள் என்பதால், பொறுத்துக் கொண்டாள். பின்பு, ''நீங்கள் பிரம்மபுரீஸ்வரரை வழிபடுங்கள்!'' என அவர்களுக்கு வழிகாட்டிவிட்டு, அவர்களிடமிருந்து பிரிந்து சென்றாள்.
அதையடுத்து, அம்பனும் அம்பாசுரனும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரை தினமும் வழிபட்டனர். வில், வாள் மற்றும் மல்யுத்தங்களில் தேர்ச்சி பெற்றனர். தங்களது அசுர குணத்தால், கண்ணில் பட்டவரையெல்லாம் அழிக்க முற்பட்டனர். அவர்களது கொடுமையைப் பொறுக்காத தேவர்களும் முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் முறையிட்டனர். அவர்களது துயரம் தீர்க்க முடிவுசெய்த ஈசன், தனது கடைக்கண்ணால் பார்வதியாளைப் பார்த்தார். அதன் பொருளை உணர்ந்த அம்பிகை, மோகினி உருவெடுத்தாள். அவளுடன் மகாவிஷ்ணு வயோதிக உருவத்தில் சென்றார். அம்பலில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்றவர்கள் அங்கே அமர்ந்தனர்.
அங்கே வந்த அனைவரும் மோகினியின் அழகைக் கண்டு வியந்தனர். விஷயமறிந்த அம்பனும் அம்பராசுரனும் பெருமாள் கோயிலுக்கு வந்தனர். மோகினியின் அழகில் மயங்கி, திருமண விருப்பத்தைத் தெரிவித்தனர். ''இருவரையும் மணக்க இயலாது; உங்களில் எனக்குப் பொருத்தமானவர் எவர் என நீங்களே முடிவு செய்யுங்கள்'' என்றாள் மோகினி. அவ்வளவுதான்...
சகோதரர்கள் இருவருக்கும் சண்டை மூண்டது. இறுதியில் அம்பராசுரனைக் கொன்றான் அம்பன். அதன்பின், மோகினியாள் பத்ரகாளியாக உக்கிரத்துடன் தோன் றினாள். உடனே அம்பன், எருமைக் கிடாவாக மாறினான். அப்படி அவன் உருமாறிய இடம், கிடாமங்கலம் (கோயில் திருமாகாளத்துக்குக் கிழக்கே, காரைக்கால் செல்லும் வழியில் உள்ளது) எனப்படுகிறது. அசுரன் அம்பனை, காளிதேவி விரட்டிச் சென்று அழித்த இடம் அம்பகரத்தூர் என்றானது.
அசுரவதம் முடிந்தது என்றாலும், அம்பன்- அம்பராசுரன் இருவரும் காளியின் சிரசிலும் காதிலும் பிரம்மஹத்தியாக இடம்பெற்றதால் காளிதேவி, கோயில் திருமாகாளத்துக்குச் சென்று, லிங்கப் பிரதிஷ்டை செய்து, வில்வத்தால் அர்ச்சித்து பூஜித்து தோஷம் நீங்கப்பெற்றாள். எனவே, பிரம்மஹத்தி தோஷ நிவர்த்திக்கு வழிபட வேண்டிய தலம்- கோயில் திருமாகாளம். அம்பகரத்தூர் சென்று ஸ்ரீகாளியை வணங்கிவிட்டு, கோயில் திருமாகாளம் சென்று வழிபட்டால்தான், பிரார்த்தனை பூர்த்தியடையும் என்பர்.
அஷ்ட நாகங்களுள் ஒன்றான வாசுகியும், இங்கு வந்து வழிபட்டு தோஷநிவர்த்தி அடைந்ததாகச் சொல்கிறது தலபுராணம் ஆக, நாக தோஷம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது கோயில் மாகாளம்.
பெருமைகள் நிறைந்த இந்தக் கோயிலின் விருட்சமான கருங்காலி மரம், செவ்வாய் தோஷத்தை நீக்குவ துடன், கொடிய நோய்களையும் அகற்றி குணமாக்குகிறது.
கருங்காலி மரப்பட்டையை மன நோய், கண் நோய், ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குப் பயன்படுத்துவர். மரத்தின் தூளை ஜுரம், பேதி, வீக்கம், வலி, உடல் பலஹீனம், வெண் குஷ்டம், குஷ்டம், தோல் அரிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை நீங்கத் தருவார்கள்.
சீமைக்காசிக்கட்டி எனும் இதன் பிசினை வெற்றிலைப் பாக்குடன் சேர்த்துச் சாப்பிட, பற்களில் ரத்தக் சசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலை ஆகியன சரியாகுமாம். யுனானி மருத்துவத்தில் கருங்காலி பூக்கள், இலைகள், வேர் அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தருகிறார்கள்.
சங்க இலக்கியத்தில் 'மாரோடம்' எனக் குறிப்பிடப்படுகிறது கருங்காலி. கபிலர் இதை, 'சிறுமாரோடம்' எனக் குறிப்பிட்டுள்ளார். 'செங்கருங்காலிப்பூ' என்று உரையே எழுதியுள்ளார் நச்சினார்க்கினி யர். தழைத்துச் செழித்த கருங்காலியை 'பசு மாரோடம்' என்றும், மலரின் மணத்தை 'நறு மாரோடம்' என்றும், மலரின் அளவைச் 'சிறு மாரோடம்' என்றும் வியந்துள்ளனர் புலவர்கள்.

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! -16

                                                             மகிழ மரம்

வானில் உள்ள ராசி மண்டலங்களில், துலாம் ராசி மண்டலம், சக்தி வாய்ந்தது. இந்த ராசி, சுக்கிர கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று பிறந்தவர்கள், செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் மற்றும் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய மண்டலமும் இதுவே!
இந்த மண்டலத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால் இவர் களுக்கு அலர்ஜி, சளி, மூக்கடைப்பு, ஜுரம், தலைவலி, மூக்கு, தொண்டை மற்றும் பற்களில் பிரச்னை என அடிக்கடி வந்து இம்சை செய்யும். இவர்களது உடல் மற்றும் மனரீதியான நோய்களுக்கும் பிரச்னைகளுக்கும் பலன் தருவதாக விளங்குவது, மகிழ மரம்! கிரக, ராசி, நட்சத்திரத்தின் நன்மை தரும் கதிர்வீச்சுகளை ஈர்த்து, தன்னுள் நிரப்பிக்கொள்கிறது இந்த மரம்.
மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும் தேதிகளில் பிறந்த அன்பர்கள், வீட்டுத்தோட்டத்தில் மகிழ மரத்தை வளர்க்கலாம். தினமும் அரை மணி நேரம் இந்த மரத்தைக் கட்டிப்பிடித்தாலோ அல்லது மர நிழலில் அமர்ந்தாலோ, கிரக தோஷம் விலகும்; தேகத்தில் எதிர்ப்பு சக்தி வளரும்; உடலில் வலிமையும் மனதுள் நிம்மதியும் பெருகும். மகிழ்ச்சியைப் பெருக்கும் இந்த மரத்துக்கு, இதனால்தான் மகிழ மரம் என்று பெயர் அமைந்ததாகவும் சொல்வர்!
பஞ்ச பூதங்களில் துலாம் ராசி, காற்றுடன் தொடர்புகொண்டது. கோவை- கோட்டமேடு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயிலின் ஸ்தல விருட்சம்- மகிழ மரம்.
முதலாம் பராந்தகச் சோழன் (கி.பி. 907 - 948), இந்தக் கோயிலைக் கட்டியிருக்கலாம் என்கின் றனர் வரலாற்று ஆய்வாளர்கள். கி.பி.1300 முதல் 1365-ஆம் வருடம் வரையிலான கால கட்டங்களில், கோயில்கள் பலவும் சிதைக் கப்பட்டனவாம்! இதையடுத்து இந்த ஆலயமும் சிதிலம் அடைந்த நிலையில், வழிபாடுகளும் இன்றிக் காணப்பட்டதாம். பிறகு, விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், சங்குபுஷ்பக் காடுகளாக இருந்த பகுதியை அழித்து, கோட்டை கட்டத் திட்டமிட்டனர். அப்போது, புதருக்குள் மறைந்திருந்த கோயில் தென்படவே... திருப் பணிகள் செய்யப்பட்டு, பொலிவுபடுத்தப் பட்டது இந்த ஆலயம் என்கின்றனர். இதன்பிறகு 17-ஆம் நூற்றாண்டில், மீண்டும் இன்னொரு தாக்குதலுக்கு உள்ளானது கோயில். திரும்பவும் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகச் சொல்கிறது, ஸ்தல வரலாறு.
சோழ மன்னனால் பிரதிஷ்டை செய்யப் பட்டு ஆலயம் அமைக்கப்பட்டதால், இறைவனுக்கு ஸ்ரீசோழீஸ்வரமுடையார் எனும் திருநாமமும் உண்டு. விஜயநகரப் பேரரசுக்குச் சங்க வம்சம் என்றும் பெயர் உண்டு. எனவே, அவர்கள் திருப்பணி செய்த ஆலயம் என்பதை நினைவுபடுத்தும் வகையில், ஸ்வாமிக்கு ஸ்ரீசங்கமீஸ்வரர் எனும் திருநாமமும் அமைந்ததாம்! இதுவே பின்னாளில் ஸ்ரீசங்கமேஸ்வரர் என மருவியதாகச் சொல்வர்.
இத்தனைப் புராதனப் பெருமைகள் கொண்ட ஆலயத்தின் ஸ்தல விருட்சம்- மகிழ மரம். நறுமணம் மிகுந்ததும் அதிக தேனை உள்ளுக் குள் வைத்திருப்பதுமான மகிழம் பூக்களை நுகர்ந்தாலே உற்சாகம் பிறக்கும்; மண்டைச் சளி வெளியேறும்; தலைவலி நீங்கும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்!
மகிழம்பூவிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், காயம் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. காய்ச்சலுக்கு டானிக் போல பயன்படுத்தலாம். இதனைக் கொண்டு வாய் கொப்புளிக்க, பற்களும் ஈறுப் பகுதியும் உறுதிப்படும். மகிழ மரத்தின் வேரை, விழுது போல அரைத்து, வினிகரில் கலந்து, முகத்தில் ஏற்பட்ட வீக்கத்துக்குத் தடவினால், விரைவில் குணம் கிட்டும்.
கண் நோய்க்கான சொட்டுமருந்து தயாரிக்க, மகிழ விதை பயன் படுகிறது. விதையிலிருந்து தயாரிக்கப் படும் மருந்து, வயிறு சம்பந்தமான பிரச்னைகளைக் குணப்படுத்துகிறது. விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், மூட்டு வலி மற்றும் வீக்கத்தைப் போக்குகிறது. விதை களைப் பவுடராக்கி, அதில் தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட... உடலுக்கு வலு கிடைக்கும்; ஆண்மைச் சக்தி அபிவிருத்தியாகும்! மகிழம்பூவில் இருந்து எண் ணெய் எடுத்து, அதனைச் சந்தனமர எண் ணெயுடன் கலந்து வாசனைத் திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இந்துக்களுக்கு மட்டுமின்றி, பௌத்த மற்றும் சமணத்தவர்களுக்கும் புனிதமான மரமாகத் திகழ்கிறது மகிழ மரம்! திருவண்ணாமலை கோயில் ஸ்தல புராணத்தில், மகிழம் என்றால் மங்கலம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. அண்ணா
மலையாரை வழிபட்டு, ஆலயத்தில் உள்ள மகிழ மரத்தடியில் சற்று நேரம் அமர்ந்தால், பாவங்கள் விலகும்; நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை! மகிழ மரத்தைச் சுற்றி வந்து, மரக்கிளையில் தொட்டில் கட்டி வழிபட்டால், ஆண் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மகிழத்துக்கு 'வகுளம்' என்றும் பெயருண்டு; ஈசனுக்கு வகுளவனநாதர் எனும் திருநாமம் உண்டு. கபிலர், தனது பாடல்களில் மகிழ மரத்தை, வகுளம் என்று குறிப்பிட்டிருப்பதாக நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். மகிழத்தை இலஞ்சி, மகிழ் என்றெல்லாம் பிற்கால இலக்கியங்கள் தெரிவிக் கின்றன. ஸ்ரீராமனின் கொப்பூழ்க்கு (தொப்புள்) இந்தப் பூவை உதாரணப்படுத்தியுள்ளார் கம்பர்!
தேர்க்காலின் வடிவமைப்புக்கு இணையாக மகிழ மரத்தை ஒப்பிட்டுப் பாடியுள்ளார் திருத்தக்க தேவர். மகிழம்பூவானது, மரத்திலிருந்து விழுவது அழகு; இதனை சிலந்திப் பூச்சி கீழே விழுவது போல் உள்ளது என விவரிக்கிறார் அவர்!
                                                                                                      - விருட்சம் வளரும்

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ! - 15

                                                              மாமரம்
சிலர், ஏதேனும் நோய்வாய்ப்பட்டு, எப்போதும் மருந்து மாத்திரையுமாக, ஆஸ்பத்திரியும் ஊசியுமாக இருப்பார்கள். அவர்கள் பிறந்த நேரத்தில் ஆட்சி புரிந்த கிரகம், ராசி மற்றும் நட்சத்திர தோஷங்களும், கெட்ட கதிர் வீச்சுகளுமே இதற்குக் காரணம் என்கிறது வானவியல் மூலிகை சாஸ்திரம்!
கன்னி ராசியிலும், புதனின் ஆட்சியிலும், ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலும் பிறந்தவர்கள், பொதுவாக நோயாளிகளாகவும் இரட்டை மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்தக் கிரகம், பஞ்ச பூதங்களில் மண்ணுடன் தொடர்பு கொண்டது. இவற்றின் கெட்ட கதிர்வீச்சுகள் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். இந்தக் கிரக தோஷத்தை நீக்குவதற்கு மாமரம் உதவுகிறது. கன்னி ராசி மற்றும் நட்சத்திர மண்டலத்தின் நல்ல கதிர்வீச்சுகளைத் தன்னுள் நிரப்பிக்கொள்ளும் தன்மை மாமரத்துக்கு உண்டு!
மாமரத்தின் நிழலில் இளைப்பாறுபவர்களுக்கும், தினமும் 30 நிமிடம் மாமரத்தைக் கட்டிப் பிடித்தபடி இருப்பவர்களுக்கும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்கிறது ரெய்கி மருத்துவம். முக்கனிகளில் முதன்மையானதாகத் திகழ்கிறது, மாங்கனி!
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை யில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருவுசாத்தானம் (கோயிலூர்) எனும் அற்புதத் தலம். பாடல்பெற்ற தலம் இது. இங்கே அமைந்துள்ள ஸ்ரீபெரியநாயகி அம்மன் சமேத ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சம் - மாமரம்.
ஊரின் நடுவே, ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது ஆலயம். உள்ளே நுழைந்ததும், மூன்று நிலை கோபுரமும் உண்டு. இதனைச் சிங்களகோபுரம் என்பர். கருவறையில் சுயம்பு மூர்த்தமாக, இடதுபுறம் சற்றே சாய்ந்தும், குனிந்தும் லிங்க ரூபமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீமந்திரபுரீஸ்வரர்.
திருச்சுற்று மாளிகையின் தென்புறம், வடக்கு நோக்கியபடி, அசுரனை மிதித்த கோலத்தில் ஸ்ரீவடபத்ரகாளியும், ராகு மற்றும் கேதுவும் தனித்தனியே வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அடுத்து, ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், ஸ்தல சூதவன விநாயகரும் காட்சி தருகின்றனர். பிராகார மேற்கில், வருணன், ஸ்ரீராமர் பூஜித்த லிங்கங்கள், இந்திரன், பிரம்மன், ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோருக்குச் சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீநடராஜர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபைரவர், சந்திரன், சூரியன், நாயன்மார்கள் அறுபத்து மூவர், சப்தமாதர்கள் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். நவக்கிரக சந்நிதி மட்டும் இல்லை.
தெற்கு நோக்கியபடி, தனிக்கோயிலில் அருள்கிறாள் ஸ்ரீபெரியநாயகி. தென்மேற்கு மூலையில், சூத வனம் இருந்ததன் அடையாளமாக, மாமரங்கள் உள்ளன. சூத வனம் என்றால் மாங்காடு. மாமரங்கள் சூழ்ந்த காட்டில் தோன்றியதால், இங்கேயுள்ள ஸ்ரீவிநாயகருக்கு 'சூதவன விநாயகர்' என்று திருநாமம். இன்னொரு விஷயம்... இரண்டு கைகளில் மாவிலைக் கொத்துக்களையும், துதிக்கையில் மாங்கனியையும் ஏந்தியபடி காட்சி தருகிறார் இந்த விநாயகர்.
இங்கே அருள்பாலிக்கும்... மூன்று திருமுகம் மற்றும் மூன்று திருப்பாதங்களுடன் காட்சி தரும் ஜுரதேவரை வழிபட்டால், தீராத காய்ச்சலும் நீங்கும் என்பது நம்பிக்கை.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான இந்த ஆலயத்துக்கு இலக்குவன், ஜாம்பவான், சுக்ரீவன் ஆகியோர் புடைசூழ ஸ்ரீராமர் வந்து, இலங்கைக்குச் செல்ல, கடலில் பாலம் கட்டுவதற்கு, இறைவனிடம் மந்திராலோசனை பெற்றுச் சென்றார் (இந்தத் தலத்துக்கு அருகில் ஸ்ரீராமர் கோயில், ஜாம்பவான் ஓடை, அனுமன் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்குநல்லான் பட்டணம் என்னும் ஊர்கள் அமைந்துள்ளன). இதனால் ஈசனுக்கு, ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் எனத் திருநாமம் அமைந்ததாம்! கடலில் பாலம் கட்ட உதவியதால், உசாத்தானம் எனப் பெயர் அமைந்தது. அதேபோல், ஸ்ரீராமனுக்கு ஆலோசனை சொல்வதற்காக, தலை சாய்த்துப் பேசினாராம் ஈசன். இன்றளவும் அதே சாய்ந்த திருக்கோலத்தில் காட்சி தந்தருள்கிறார்.
வருண பகவான் சிவ பூஜை செய்து, சாப விமோசனம் பெற்ற தலம் இது. மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை எமன் வீசியபோது, லிங்கத் திருமேனியிலும் விழுந்து தழும்பு ஏற்பட்டது திருக்கடையூரில். அந்தத் தழும்பு நீங்கிய திருத்தலம், திருவுசாத்தானம்.
சிங்கள தேசத்துக்குப் படையெடுத்துச் சென்றான் சோழ மன்னன். அப்போது சோழ வீரன் ஒருவன், 'எங்கள் அரசன் போரில் வென்றால், எனது தலையைப் பலியிடுகிறேன்' என்று ஸ்ரீதுர்கையிடம் பிரார்த்தித்தான். அதன்படி மன்னனும் வெல்ல, வீரன் தனது தலையை ஸ்ரீதுர்கைக் குப் பலி தரும் காட்சி, இந்த ஆலயத்தில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
பிராகாரத்தில், ஸ்தல விருட்சமான மாமரங்கள் இரண்டு உள்ளன. இதயத்துக்கு சக்தி தருவது, உடல் வளர்ச்சியை மேம் படுத்துவது, ஆண்மையைப் பலப்படுத்து வது, ஜீரண சக்தியை வழங்குவது, சிறுநீர்ப்பையின் குறைபாடுகளைப் போக்குவது எனப் பல மருத்துவ குணங்கள் கொண்டது, மாமரம். மாவிலைகளை உலர்த்திப் பவுடராக்கிச் சாப்பிட, பேதித்
தொல்லை நீங்கும். சர்க்கரை நோயாளி களுக்கு அருமருந்து இது! இலை மற்றும் தண்டுப் பகுதியைக் கஷாயமிட்டுச் சாப்பிட, தசைச் சுருக்கங்கள் நீங்கும்; ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். கஷாயத்தைக் கொண்டு வாய் துலக்கி னால், பல்வலி நீங்கும். தொண்டை வறட்சி சரியாகும். மாம்பழ விதைகளில்... வாந்தி, பேதி, மார்பு அழற்சி, தீப்புண்கள் ஆகியவற்றைக் குணப் படுத்தும் தன்மை உள்ளது. அமிலத் தன்மையையும் இது கட்டுப்படுத்தும். தவிர, மாதவிடாய்ப் பிரச்னை, ரத்த மூலம், நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் குழாய்களில் ஏற்படும் ரத்தப்பெருக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமையும் மாமரத்துக்கு உண்டு. கதவு, ஜன்னல், மேஜை ஆகியவை தயாரிக்கவும் மாமரம் பயன்படுகிறது. மாவிலையில் கிருமி நாசினித் தன்மை அதிகம் இருப்பதால், வீட்டு வாசல் மற்றும் பந்தலில் தோரணம் கட்டித் தொங்கவிடுகின்றனர்.
மாமரத்தைத் 'தேமா' எனக் குறிப்பிடுகிறார் கபிலர். தேமா, கலிமா என இரண்டு மாமலர்களைக் குறிஞ்சிப் பாட்டில் விவரிக்கிறார், அவர். 'செங்கொடுவேரி தேமா மணிச்சிகை', 'கரந்தை குளவி கடி கமழ் கலிமா' ஆகிய வரிகளுக்கு, நச்சினார்க்கினியர் 'தேமாம்பூ' என்றும், 'விரை கமழத் தழைத்த மாம்பூ' என்றும் உரை எழுதியுள்ளார்.
காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், கொள்ளிடத்துக்குக் கிழக்கே 6 கி.மீ. தூரத்தில் நல்லூர்ப்பெருமணம் திருவெண் ணீற்று உமையம்மை, மயிலாடுதுறை ஸ்ரீமயூரநாதர், திருவானைக்காவலில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீஆம்ரவனநாதர் ஆகிய ஆலயங்களிலும் மாமரமே ஸ்தல விருட்சமாகப் போற்றப்படுகிறது.
                                                                                                - விருட்சம் வளரும்,

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 14

                                                              பாதிரிமரம்
சூரியனுடன் தொடர்புகொண்டது சிம்ம ராசி. ஞாயிற்றுக் கிழமை மற்றும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான தேதிகளில் பிறந்தவர்கள், மகம், பூரம், உத்திரம் ஆகிய நட்சத்திரக் காரர்கள் இயல்பிலேயே நிலையான குணம் கொண்டவர்களாகவும், பிள்ளைகளின் மீது அதீத பாசம் உள்ளவர்களாகவும் திகழ்வர்.
பஞ்சபூதங்களில், நெருப்புடன் தொடர்புகொண்டது சிம்ம ராசி! இந்த ராசி மண்டல நட்சத்திரக் கூட்டத்தின் கெட்ட கதிர் வீச்சுகளால் பலவகையான நோய்களும் கிரக தோஷங்களும் உண்டாகும் என்பர். அவற்றையெல்லாம் தீர்ப்பதற்கு உதவுகிறது பாதிரி மரம்! முனிவர்களும் தீர்த்தங்கரர்களும் (சமணர்கள்), இந்த மரத்தடியில் தவம் இருந்து, ஞானம் பெற்றுள்ளனர். இந்த மரத்தின் ஒரு பகுதிக்கும் மின்காந்த சக்திக்கும் தொடர்பு உள்ளதாம்!
கொங்கு தேசத்தில் அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானிகூடல், கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர், திருவெஞ்சமாக்கூடல் ஆகியன பாடல்பெற்ற தலங்கள். இவற்றில், அவிநாசி தலத்தின் விருட்சம்- பாதிரி மரம்! கோவையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள அவிநாசியில், அருளும் பொருளும் அள்ளித் தந்து, ஆட்சி செய்து வருகிறார் ஸ்ரீஅவிநாசிலிங்கேஸ்வரர்.
திருப்புக்கொளியூர்- அவிநாசி தலத்தின் பழைய பெயர்! சிவனாரின் அக்னித் தாண்டவத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள், இந்தத் தலத்தில் புகுந்து ஒளிந்து கொண்டதாகவும் (புக்கு ஒளி ஊர்- புக்கொளியூர்), பிறகு இறைவனின் அருளைப் பெற்றதாகவும் சொல்கிறது ஸ்தல புராணம். ஸ்ரீஅவிநாசிலிங்கேஸ்வரர், ஸ்ரீஅவிநாசியப்பர், பிரம்மன் வணங்கியதால் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என இந்தத் தலத்து இறைவனுக்குப் பல திருநாமங்கள் உண்டு!
ஸ்வாமி சந்நிதிக்கு வலப்பக்கத்தில் அம்பாள் ஸ்ரீகருணாம்பிகையின் தரிசனம். அம்பாள் சந்நிதிக்கு நேராக பொள்ளாச்சி நா. மகாலிங்கம் திருப்பணி செய்த அழகிய ராஜகோபுரம் அசத்துகிறது.
ஒருமுறை, திருப்புக்கொளியூருக்கு வந்த சுந்தரர், இங்கு அந்தணர் வாழும் வீதி வழியே சென்றார். அப்போது எதிரெதிரே இருந்த இரண்டு வீடுகளில், ஒரு வீட்டில் இருந்து மங்கல ஒலியும், மற்றொரு வீட்டில் இருந்து அழுகைச் சத்தமும் கேட்டது. தெருவில் உள்ளோர் சுந்தரரை வணங்கி, ''மூன்று வருடங்களுக்கு முன், இந்த இரண்டு வீட்டுப் பிள்ளைகளும் அருகில் உள்ள தாமரைக் குளத்தில் குளித்தனர். அப்போது, அவர்களில் ஒருவனை முதலை ஒன்று பிடித்து விழுங்கிவிட்டது. மற்றொருவன் தப்பித்துவிட்டான். அவனுக்கு, இன்று
உபநயனம். எனவே, அவனது வீட்டிலிருந்து மங்கல ஒலி கேட்கிறது. பிள்ளையை இழந்தவர்கள், 'நம் பிள்ளை உயிரோடு இருந் திருந்தால், அவனுக்கும் இப்படி உபநயனம் செய்திருப்போமே..!' என எண்ணிக் கதறு கின்றனர்'' என்று தெரிவித்தனர்.
அதேநேரம், சுந்தரர் வந்திருக்கும் சேதி அறிந்து, மகனை இழந்த பெற்றோர் ஓடி வந்து அவரை வணங்கினர். தங்களின் துக்கத்தை மறைத்து, இன்முகத்துடன் சுந்தரரை வரவேற்றனர். அவர்களிடம், ''உங்களின் பிள்ளையை முதலை விழுங்கிய குளம் எங்கே உள்ளது?'' என்று கேட்டார் சுந்தரர். அவர்கள் வழிகாட்ட, குளக்கரையை அடைந்தார். அங்கே, 'எற்றார் மறக்கேன்' எனத் துவங்கும் பாடலைப் பாடி, சிவனாரைத் தொழுதார். அவர் நான்காவது பாடலைப் பாடியதும், பெருமழை பொழிந்தது. வறண்டு கிடந்த தாமரைக் குளம் நிரம்பியது; தாமரைப் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பின. குளத்துக்குள் இருந்து ஒரு முதலை வெளியேறி கரையை அடைந்ததும், ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ருத்திரன் தாதுவை உண்டு பண்ண, பிரம்மன் உருவத்தை உண்டாக்க, எமன் அந்த உருவத்துக்கு உயிரைக் கொடுக்க, திருமால் அந்த உடலை வளரச் செய்ய, முதலையானது சிறுவனை உமிழ்ந்து மறைந்தது. தேவர்கள் பூமாரி பொழிய, மக்கள் அதிசயித்தனர்!
பிறகு, அவனையும் பெற்றோரையும் ஆலயத்துக்கு அழைத்துச் சென்ற சுந்தரர், ஸ்ரீஅவிநாசியப்பரையும் ஸ்ரீகருணாம்பிகையையும் வழிபட்டார்; மேளங்கள் முழங்க, அவனுக்கு உபநயனம் செய்துவைத்து, அங்கிருந்து கிளம்பினார்.
கோயிலில் உள்ள தீர்த்தக் கிணற்றில், காசியின் கங்கை உறைந்திருப்பதாக ஐதீகம். அருகிலேயே, ஸ்ரீகாலபைரவரையும் தரிசிக்க லாம்!
இந்தத் தலத்துக்கு வந்த பதஞ்சலி முனிவர், இங்குள்ள கிணற்று நீரை, காசியின் கங்கை என நிரூபிப்பதற்காக, தனது கைத் தண்டத்தை, கிணற்றில் போட்டாராம். பிறகு, சக முனிவர்களுடன் அவர் காசிக்குச் சென்ற போது, கங்கையில் நீராடும் வேளையில், நீரில் மிதந்து வந்து அவரை அடைந்ததாம் அந்தக் கைத்தண்டம்! உடன் வந்திருந்த முனிவர்கள், காசிக்கு நிகரான தலம் அவிநாசி எனச் சிலிர்த்துப் பூரித்தனர். இந்தத் தலத்து இறைவனை மனதாரப் பிரார்த்தித்தால், இழந்த பொன்- பொருள், சந்தோஷம் அனைத்தையும் திரும்பப் பெறலாம் என்பது ஐதீகம்!
அவிநாசி தலத்தின் விருட்சமான பாதிரியும் மகிமைகள் நிறைந்ததுதான்.
சமண மதத்தின் 11-வது தீர்த்தங்கரர், பாதிரி மரத்தடியில்தான் ஞானம் பெற்றார். சரகா, சுஸ்ரதா, வராஹமித்ரா ஆகிய நூல்கள் பாதிரி விருட்சத்தைப் போற்றுகின்றன. இதன் இலைச் சாற்றினைத் தலையில் தேய்த்துக் குளித்தால், உஷ்ணம் குறையும். இதன் பூவை அரைத்துத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், மேக நோய் அகலும்; ஜுரம் நீங்கும்.
தவிர, தொண்டை நோய், பேதி மற்றும் ரத்தப் போக்கு ஆகியவற்றைத் தடுக்கும் சக்தி இதன் பூக்களுக்கு உண்டு. மேலும், பாதிரி மரத்தின் வேரினைக் காயவைத்து, பொடி யாக்கிச் சாப்பிட்டால், மூல நோய், கை-கால் எரிச்சல், சொறி- சிரங்கு ஆகிய பிரச்னைகள் நீங்கும்.
'போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி' எனப் புகழ்கிறார் கபிலர். தேனின் நறுமணம் கமழும் பாதிரி என நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். பாதிரி மலரை புதிய மண்பானையில் போட்டுவைத்து, பிறகு அதை அகற்றிவிட்டுத் தண்ணீரை நிரப்பி வைத்தால், பூவின் மணம் தண்ணீரிலும் நிறைந்திருக்கும் என்கிறது நாலடியார். 'பாதிரிப் பூ வாடிவிடும்; புதிதான பானையும் ஓர் நாள் உடையும். ஆனால், பாதிரிப்பூவின் நறுமணம் மட்டும் அழியவே அழியாது' என நீலகேசி, குண்டலகேசி யிடம் வாதிட்டதாக விவரிக்கிறது இலக்கியம்.
அவிநாசி மட்டுமின்றி திருப்பாதிரிப்புலியூர், திருவலிதா யம், திருஆதனூர், திருநாகை ஆகிய தலங்களிலும் விருட்சமாகத் திகழ்கிறது பாதிரிமரம்.
                                                                                                  - விருட்சம் வளரும்

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 13

                        முருக்கன் எனப்படும் பலாச மரம்
வானத்தில் நண்டு வடிவில் காட்சி தரும் நட்சத்திரக் கூட்டத்தை, கடக ராசி என்பார்கள். இந்த நட்சத்திர மண்டலம், சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இதன் கதிர்வீச்சு, மார்பு மற்றும் நெஞ்சுப்பகுதியில் உள்ள உள் உறுப்புகளைச் சீரமைக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீருடன் தொடர்பு கொண்டது இது!
கடக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோரிடம் அன்பாக இருப்பார்கள்; இவர்களின் குணங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்! கடக ராசி - புனர்பூசம், பூசம் மற்றும் ஆயில்ய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், ஜூன் 21 முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் மற்றும் திங்கட்கிழமை அன்று பிறந்தவர்கள் ஆகியோருக்குப் பயன் தரும் மரம் - முருக்கன் எனப்படும் பலாச மரம்! இந்த மரத்தை, தினமும் அரை மணி நேரம் கட்டிப் பிடித்தாலோ, அல்லது, மர நிழலில் அமர்ந்திருந்தாலோ சந்திர கிரக தோஷம் நீங்கும் என்பர்.
பௌத்தத் துறவிகள், முருக்கன் மரப்பூக்களில் இருந்து காவிநிற ஆடை தயாரித்து, அணிவார்களாம். வட இந்திய மக்கள், ஹோலி முதலான பண்டிகைகளில், இதில் இருந்து பெறப்படும் காவிநிறப் பொடியை ஒருவர்மீது ஒருவர் வீசியும் அப்பியும் குதூகலிப்பார்கள்!
கடக ராசிக்கான விருட்சம் - முருக்கன் எனப்படும் பலாச மரம். இதனைத் தல விருட்சமாகக் கொண்ட தலம், திருநாங்கூரில் உள்ள ஸ்ரீவண்புருஷோத்தமன் ஆலயம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்; 108 திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று.
இந்தத் தலத்து ஸ்வாமியின் திருநாமம் - அயோத்தி ராமர்; வண்புருஷோத்தமராகக் காட்சி தருகிறார். வேறெந்த வைணவத் தலத்திலும், ஸ்ரீவண்புருஷோத்தமன், தனிச்சந்நிதி கொண்டிருக்கவில்லை.
திருநாங்கூரில் இரண்டு வருடங்கள் தங்கி, இறைப்பணி செய்துள்ளார் ஸ்ரீமணவாள மாமுனிகள். கோயிலுக்கு வடக்கே திருப்பாற்கடல் எனும் தீர்த்தம் உள்ளது. ஸ்ரீவண்புருஷோத்தமனுக்குப் பிடித்த மலர் செண்பகப் பூ!
சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாங்கூர். இங்கே, நின்ற கோலத்தில், கிழக்குப் பார்த்தபடி, ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்கிறார் ஸ்ரீவண்புருஷோத்தமர். தேவியின் திருநாமம்- ஸ்ரீபுருஷோத்தம நாயகி; தென்மேற்கு மூலையில், அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசீதை, ஸ்ரீலட்சுமணருடன் ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர், சேனைமுதலியார் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
திவ்ய கவியான பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 108 திருப்பதி அந்தாதியின் பாசுரம் ஒன்றில், 'தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய அழகிய புருஷோத்தமனின் (திருமாலின்) திருப்பதிகளாவன எம்பெருமான் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கம், குளிர்ந்த திருவேங்கடமலை, திருக்குடந்தை, திருமாலிருஞ்சோலை, அழகிய துவாரகை மற்றும் திருவண் புருடோத்தமம்' எனக் குறிப்பிடுகிறார்.
நைமிசாரண்யத்தில் சூத பௌராணிகர், சனகாதி முனிவர்களுக்கு ஸ்ரீபத்ம புராணத்தை எடுத்துரைத்தார். அதில், தீர்த்தம், க்ஷேத்திரம் ஆகியவற்றைக் கூறும்போது, 'பலாச' வன மகாத்மியம் என இந்தத் தலத்தைப் போற்றுகிறார். அதன் ஆறாவது அத்தியாயத்தில், திருநாங்கூர் ஸ்ரீவண்புருஷோத்தம திவ்விய தேச வைபவத்தில், 'புருஷர்களில் உத்தமன் ஸ்ரீராமன். அதிலும் வேண்டியவர்களுக்கு வேண்டியன கொடுப்பவன் ஸ்ரீவண்புருஷோத்தமன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில், இந்தப் பகுதி, பலாச வனமாக இருந்ததாம். அப்போது, வியாக்ரபாத முனிவர், இங்கே பர்ணசாலை அமைத்துத் தங்கி, தவம் இருந்தார். அவருடைய மகன் உபமன்யு. இவனுக்கு மூன்று வயது இருக்கும் வேளையில், புருஷோத்தமபுரத்துக்கு வந்து, பெருமாள் சந்நிதியில் குழந்தையை விட்டுவிட்டு, அர்ச்சனை செய்வதற்குப் பூக்கள் பறிக்கச் சென்றார் வியாக்ரபாதர். அப்போது, குழந்தை திடீரெனப் பசியால் அழ... ஸ்ரீவண்புருஷோத்தமப் பெருமாள் வந்து, குழந்தையை வருடிக் கொடுத்து, சமாதானப்படுத்தி, பிராட்டியாரின் தூண்டுதலால் திருப்பாற்கடலையும் விரஜா நதியையும் வரவழைத்தார். பாற்கடலில் இருந்து பாலை எடுத்து வந்து, விரஜா நீரில் கலந்து, குழந்தைக்குப் புகட்டினாளாம் பிராட்டி; பசி நீங்கியது மட்டுமின்றி, பெருமாளின் அருளையும் பெற்றது, குழந்தை!
'கார்த்திகை சுக்லபட்சம், துவாதசி அருணோதய காலத்தில், திருப்பாற்கடல் வரவழைக்கப்பட்டது. எனவே, அந்த வேளையில், எல்லா புண்ணிய தீர்த்தங்களும் அங்கே கூடுகின்றன. அப்போது திருப்பாற்கடலில் நீராடி, ஸ்ரீவண்புருஷோத்தமனைச் சேவித்தால், தீவினைகள் அகன்று, நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழ்ந்து, முக்தி கிடைக்கவேண்டும்' என திருமாலிடம் உபமன்யு வேண்டினான்; அப்படியே ஆகட்டும் என வரம் தந்தருளினார் திருமால்!
திருநாங்கூர் ஸ்ரீவண்புருஷோத்தமர் கோயிலின் ஸ்தல விருட்சமான முருக்கன் எனும் பலாச மரம், மருத்துவ மகிமைகள் கொண்டது. முருக்கன் மரத்தின் பட்டையை 5 முதல் 12 கிராம் வரை, தினமும் ஒருவேளை பயன் படுத்தினால், பேதி, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை சுருங்கி சிறுத்துப் போதல், மாதவிலக்கு முதலான கோளாறுகள் நீங்கும். முருக்கன் மரத்தின் பிசினை, 250 மி.கி. முதல் ஒரு கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தினால், வாயுத் தொல்லை நீங்கும்; ஜுரத்தைக் கட்டுப்படுத்தும்; புண்களைச் சுத்தப்படுத்திக் குணமாக்கும்; பாம்புக்கடியின் விஷத்தை முறிக்கும்! வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, இந்த மருந்தை ஒரேயரு சொட்டு தருவார்கள்.
தென்னிந்தியாவில் பல ஓட்டல்கள் மற்றும் விருந்து களில் பலாச இலையில் தயாரிக்கப்படும் தட்டுகளைப் பயன்படுத்துவதைக் காணலாம்.
முருக்கன் இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட, வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகள் வெளியேறிவிடும். மேலும் வயிற்றுவலி, மலட்டுத்தன்மை, கர்ப்பப்பை வளர்ச்சியின்மை, ஆண்களுக்குப் போதிய உயிரணுக்கள் இல்லாத நிலை, சிறுநீர் கழிக்கும்போது உண்டாகிற எரிச்சல் ஆகியன குணமாகும்! இந்த இலைகளை இடித்து வெந்நீரில் கலந்து, எலும்பு மூட்டுப் பகுதியில் பற்றுப்போட்டால், வலியும் வீக்கமும் குறையும். இலை களைத் தேங்காய் எண்ணெயில் வறுத்துச் சாப்பிட, பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்குமாம்!
சங்க இலக்கியத்தில் கபிலர், 'பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி' எனப் பாடியுள்ளார். பிற்கால இலக்கியங்களும், புரசு, முருக்கு, புன முருக்கு, புழகு, புன முருங்கை, மலை முருங்கு என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளன. தவ யோகியரின் கைகளில் உள்ள 'தண்டம்' புரச மரத்தில் செய்யப்படுவது வழக்கம்!.
திருத்தலைச்சன்காடு, திருக்கஞ்சனூர், திருப்பார்த்தன்பள்ளி, திருப்பேர்நகர், திருவெள்ளக்குளம் ஆகிய ஆலயங்களிலும், பலாச மரமே தல விருட்சமாக அமைந்துள்ளது!