வானத்தில் நண்டு வடிவில் காட்சி தரும் நட்சத்திரக் கூட்டத்தை, கடக ராசி என்பார்கள். இந்த நட்சத்திர மண்டலம், சந்திர கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இதன் கதிர்வீச்சு, மார்பு மற்றும் நெஞ்சுப்பகுதியில் உள்ள உள் உறுப்புகளைச் சீரமைக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீருடன் தொடர்பு கொண்டது இது!
கடக ராசியில் பிறந்தவர்கள் பெற்றோரிடம் அன்பாக இருப்பார்கள்; இவர்களின் குணங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்! கடக ராசி - புனர்பூசம், பூசம் மற்றும் ஆயில்ய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், ஜூன் 21 முதல் ஜூலை 22-ஆம் தேதி வரை பிறந்தவர்கள் மற்றும் திங்கட்கிழமை அன்று பிறந்தவர்கள் ஆகியோருக்குப் பயன் தரும் மரம் - முருக்கன் எனப்படும் பலாச மரம்! இந்த மரத்தை, தினமும் அரை மணி நேரம் கட்டிப் பிடித்தாலோ, அல்லது, மர நிழலில் அமர்ந்திருந்தாலோ சந்திர கிரக தோஷம் நீங்கும் என்பர்.
பௌத்தத் துறவிகள், முருக்கன் மரப்பூக்களில் இருந்து காவிநிற ஆடை தயாரித்து, அணிவார்களாம். வட இந்திய மக்கள், ஹோலி முதலான பண்டிகைகளில், இதில் இருந்து பெறப்படும் காவிநிறப் பொடியை ஒருவர்மீது ஒருவர் வீசியும் அப்பியும் குதூகலிப்பார்கள்!
கடக ராசிக்கான விருட்சம் - முருக்கன் எனப்படும் பலாச மரம். இதனைத் தல விருட்சமாகக் கொண்ட தலம், திருநாங்கூரில் உள்ள ஸ்ரீவண்புருஷோத்தமன் ஆலயம். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்; 108 திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று.
இந்தத் தலத்து ஸ்வாமியின் திருநாமம் - அயோத்தி ராமர்; வண்புருஷோத்தமராகக் காட்சி தருகிறார். வேறெந்த வைணவத் தலத்திலும், ஸ்ரீவண்புருஷோத்தமன், தனிச்சந்நிதி கொண்டிருக்கவில்லை.
திருநாங்கூரில் இரண்டு வருடங்கள் தங்கி, இறைப்பணி செய்துள்ளார் ஸ்ரீமணவாள மாமுனிகள். கோயிலுக்கு வடக்கே திருப்பாற்கடல் எனும் தீர்த்தம் உள்ளது. ஸ்ரீவண்புருஷோத்தமனுக்குப் பிடித்த மலர் செண்பகப் பூ!
சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாங்கூர். இங்கே, நின்ற கோலத்தில், கிழக்குப் பார்த்தபடி, ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்கிறார் ஸ்ரீவண்புருஷோத்தமர். தேவியின் திருநாமம்- ஸ்ரீபுருஷோத்தம நாயகி; தென்மேற்கு மூலையில், அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீசீதை, ஸ்ரீலட்சுமணருடன் ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீநம்மாழ்வார், ஸ்ரீராமானுஜர், சேனைமுதலியார் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.
திவ்ய கவியான பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், 108 திருப்பதி அந்தாதியின் பாசுரம் ஒன்றில், 'தேவர்களுக்கெல்லாம் தேவனாகிய அழகிய புருஷோத்தமனின் (திருமாலின்) திருப்பதிகளாவன எம்பெருமான் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கம், குளிர்ந்த திருவேங்கடமலை, திருக்குடந்தை, திருமாலிருஞ்சோலை, அழகிய துவாரகை மற்றும் திருவண் புருடோத்தமம்' எனக் குறிப்பிடுகிறார்.
நைமிசாரண்யத்தில் சூத பௌராணிகர், சனகாதி முனிவர்களுக்கு ஸ்ரீபத்ம புராணத்தை எடுத்துரைத்தார். அதில், தீர்த்தம், க்ஷேத்திரம் ஆகியவற்றைக் கூறும்போது, 'பலாச' வன மகாத்மியம் என இந்தத் தலத்தைப் போற்றுகிறார். அதன் ஆறாவது அத்தியாயத்தில், திருநாங்கூர் ஸ்ரீவண்புருஷோத்தம திவ்விய தேச வைபவத்தில், 'புருஷர்களில் உத்தமன் ஸ்ரீராமன். அதிலும் வேண்டியவர்களுக்கு வேண்டியன கொடுப்பவன் ஸ்ரீவண்புருஷோத்தமன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருகாலத்தில், இந்தப் பகுதி, பலாச வனமாக இருந்ததாம். அப்போது, வியாக்ரபாத முனிவர், இங்கே பர்ணசாலை அமைத்துத் தங்கி, தவம் இருந்தார். அவருடைய மகன் உபமன்யு. இவனுக்கு மூன்று வயது இருக்கும் வேளையில், புருஷோத்தமபுரத்துக்கு வந்து, பெருமாள் சந்நிதியில் குழந்தையை விட்டுவிட்டு, அர்ச்சனை செய்வதற்குப் பூக்கள் பறிக்கச் சென்றார் வியாக்ரபாதர். அப்போது, குழந்தை திடீரெனப் பசியால் அழ... ஸ்ரீவண்புருஷோத்தமப் பெருமாள் வந்து, குழந்தையை வருடிக் கொடுத்து, சமாதானப்படுத்தி, பிராட்டியாரின் தூண்டுதலால் திருப்பாற்கடலையும் விரஜா நதியையும் வரவழைத்தார். பாற்கடலில் இருந்து பாலை எடுத்து வந்து, விரஜா நீரில் கலந்து, குழந்தைக்குப் புகட்டினாளாம் பிராட்டி; பசி நீங்கியது மட்டுமின்றி, பெருமாளின் அருளையும் பெற்றது, குழந்தை!
'கார்த்திகை சுக்லபட்சம், துவாதசி அருணோதய காலத்தில், திருப்பாற்கடல் வரவழைக்கப்பட்டது. எனவே, அந்த வேளையில், எல்லா புண்ணிய தீர்த்தங்களும் அங்கே கூடுகின்றன. அப்போது திருப்பாற்கடலில் நீராடி, ஸ்ரீவண்புருஷோத்தமனைச் சேவித்தால், தீவினைகள் அகன்று, நிம்மதியும் சந்தோஷமும் பொங்க வாழ்ந்து, முக்தி கிடைக்கவேண்டும்' என திருமாலிடம் உபமன்யு வேண்டினான்; அப்படியே ஆகட்டும் என வரம் தந்தருளினார் திருமால்!
திருநாங்கூர் ஸ்ரீவண்புருஷோத்தமர் கோயிலின் ஸ்தல விருட்சமான முருக்கன் எனும் பலாச மரம், மருத்துவ மகிமைகள் கொண்டது. முருக்கன் மரத்தின் பட்டையை 5 முதல் 12 கிராம் வரை, தினமும் ஒருவேளை பயன் படுத்தினால், பேதி, வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை சுருங்கி சிறுத்துப் போதல், மாதவிலக்கு முதலான கோளாறுகள் நீங்கும். முருக்கன் மரத்தின் பிசினை, 250 மி.கி. முதல் ஒரு கிராம் வரை மருந்தாகப் பயன்படுத்தினால், வாயுத் தொல்லை நீங்கும்; ஜுரத்தைக் கட்டுப்படுத்தும்; புண்களைச் சுத்தப்படுத்திக் குணமாக்கும்; பாம்புக்கடியின் விஷத்தை முறிக்கும்! வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, இந்த மருந்தை ஒரேயரு சொட்டு தருவார்கள்.
தென்னிந்தியாவில் பல ஓட்டல்கள் மற்றும் விருந்து களில் பலாச இலையில் தயாரிக்கப்படும் தட்டுகளைப் பயன்படுத்துவதைக் காணலாம்.
முருக்கன் இலைச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட, வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகள் வெளியேறிவிடும். மேலும் வயிற்றுவலி, மலட்டுத்தன்மை, கர்ப்பப்பை வளர்ச்சியின்மை, ஆண்களுக்குப் போதிய உயிரணுக்கள் இல்லாத நிலை, சிறுநீர் கழிக்கும்போது உண்டாகிற எரிச்சல் ஆகியன குணமாகும்! இந்த இலைகளை இடித்து வெந்நீரில் கலந்து, எலும்பு மூட்டுப் பகுதியில் பற்றுப்போட்டால், வலியும் வீக்கமும் குறையும். இலை களைத் தேங்காய் எண்ணெயில் வறுத்துச் சாப்பிட, பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்குமாம்!
சங்க இலக்கியத்தில் கபிலர், 'பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி' எனப் பாடியுள்ளார். பிற்கால இலக்கியங்களும், புரசு, முருக்கு, புன முருக்கு, புழகு, புன முருங்கை, மலை முருங்கு என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளன. தவ யோகியரின் கைகளில் உள்ள 'தண்டம்' புரச மரத்தில் செய்யப்படுவது வழக்கம்!.
திருத்தலைச்சன்காடு, திருக்கஞ்சனூர், திருப்பார்த்தன்பள்ளி, திருப்பேர்நகர், திருவெள்ளக்குளம் ஆகிய ஆலயங்களிலும், பலாச மரமே தல விருட்சமாக அமைந்துள்ளது!
|
Wednesday, 4 October 2017
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 13
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 12
பலா மரம் |
முக்கனிகளுள் ஒன்றான பலா, மிதுன ராசிக்காரர்களுக்குப் பலனும் பலமும் தரும் முக்கியமான விருட்சம்! மிதுன ராசி, புதன் கிரகத்துடன் தொடர்புகொண்டது. எனவே, மிதுன ராசிக்காரர்கள், புதன்கிழமை பிறந்தவர்கள் மற்றும் மே 21 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கு அதிக அளவு பலன் தரக்கூடியது பலா மரம். இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் பலா மரத்தை நட்டு வளர்க்கலாம்.
'காழிச் சீராம விண்ணகரம்' எனப் போற்றப்படும் ஸ்ரீபூமி நீளா லோகநாயகி சமேத ஸ்ரீதிரிவிக்கிரம நாராயணப் பெருமாள் தாடாளன் கோயிலின் ஸ்தல விருட்சமாகப் போற்றப்படுகிறது பலா. நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ளது இந்தத் திருக்கோயில்.
திருமாலின் வாமன அவதாரமும் திரிவிக்கிரம அவதாரமும் வேதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை. மகாபலிச் சக்கரவர்த்தியின் கொடுமையைத் தாங்கமுடியாத தேவர்கள், தங்களைக் காப்பாற்றும்படி பெருமாளைச் சரணடைந்தனர். அசுர குரு சுக்ராச்சார்யரின் ஆலோசனைப்படி பல்வேறு யாகங்களும் தவமும் செய்து பலம்பெற்றிருந்த மகாபலியை ஆயுதங்களால் அழிக்கமுடியாது என்பதை அறிந்த திருமால், வாமன அவதாரம் எடுத்தார்.
மிகக் குள்ளமான வாமன வடிவில் வந்த பெருமாள், மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்டார். ''ப்பூ... இத்துனூண்டு உருவம் கொண்ட உனக்கு மூன்றடி மண்தானே வேண்டும். எடுத்துக்கொள்!'' என்று அனுமதித்தான் மகாபலி. சட்டென்று விண்ணளாவ ஓங்கி வளர்ந்த பெருமாள், முதல் அடியாக... இடக்காலைத் தூக்கி விண்ணை அளந்தார். இந்த அழகு ததும்பும் அழகுக் கோலத்தை தாடாளன் கோயிலிலும், 2-வது அடி அளந்த திருக்கோலத்தை காஞ்சிபுரம் (திருஊரகம்) ஸ்ரீஉலகளந்தபெருமாள் கோயிலிலும், மூன்றாவது திருவடிக்கு இடம் எங்கே என்று கேட்கும் திருக்கோலத்தைத் திருக்கோவிலூரிலும் தரிசிக்கலாம்!
சீர்காழி தலத்தில், கைகளில் சங்கு- சக்கரம், மார்பில் பிராட்டி, வனமாலை, சாளக்ராம மாலை, சகஸ்ரநாம மாலை ஆகியவற்றுடன் காட்சி தருகிறார் பெருமாள். அவரது சந்நிதிக்குத் தென்புறம், தனிச் சந்நிதியில், ஸ்ரீலோகநாயகி தாயார் அருள்பாலிக்கிறார். இங்கே, ஸ்ரீஆண்டாளுக்கும் ஸ்ரீகோதண்டபாணியான ஸ்ரீராமருக்கும் தனிச்சந்நிதிகள் அமைந்துள்ளன. இடது கையில் வில்லேந்தி, ஓரடி எடுத்து வைப்பது போன்ற கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீராமர். அவருடன் ஸ்ரீசீதை, ஸ்ரீலட்சுணர் மற்றும் ஸ்ரீஆஞ்சநேயரும் திருக்காட்சி தருகின்றனர்.
- எனும் குறளில், 'மூவுலகு' என்று குறிப்பிடாமல், 'அடியளந்தான் தாஅயது எல்லாம்' எனப் போற்றுகிறார் திருவள்ளுவர். அதேபோல் பரிமேலழகர், 'தன் அடி அளவினால் எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுமையும்' என்கிறார்.
பலாவின் தாயகம் இந்திய தேசம்தான். கிறிஸ்து பிறப்புக்குச் சுமார் 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த கிரேக்க வரலாற்று அறிஞர் தியோபிராஸ்டிஸ் என்பவர், 'இந்தியாவில் உள்ள ரிஷிகள், பலாப்பழத்தை உணவாகச் சாப்பிட்டு வந்தனர்' என்று தனது பயணக்குறிப்பில் தெரிவித்துள்ளார். இத்தனை பழைமை வாய்ந்த பலா, மருத்து வக் குணங்களும் கொண்டது!
பலா இலையைப் பக்குவப் படுத்திச் சாப்பிட்டால் பெரும் வயிறு, படை முதலானவை நீங்கும். இலைக் கொழுந்தை அரைத்துச் சிரங்குகளில் பூசிக்கொள்ள, உடனே குணம் பெறலாம்.
இதன் இலைகளை எரித்து, அந்தச் சாம்பலை ஒரு சிட்டிகை எடுத்து தினமும் காலையில் சாப்பிட்டு வர, அல்சர் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமாகும். நெரிக்கட்டிகள், கழலைக் கட்டிகள்மீது பலாவின் பால், பிசினுடன் சிறிது காடி (வினிகர்) கலந்து பூசினால், தானாகவே பழுத்து உடையும். பலா வேர் மற்றும் இலையைச் சேர்த்து அரைத்து இரண்டு கிராம் தேனில் கலந்து, பெண்கள் சாப்பிட்டுவர, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
பலவு என்றும், வேர்ப் பலா, ஆலடிப்பலா, கோட்டுப் பலா என்றும் சங்க இலக்கியங்களில் பலாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
சீர்காழி தாடாளன் கோயிலில் மட்டுமின்றி, கொல்லிமலை ஸ்ரீஆறுமுகப்பெருமான் ஆலயம், திருச்சி திருமங்கலம் ஸ்ரீசமயா தீஸ்வரர் ஆலயம், குற்றாலம் ஸ்ரீகுரும்பலா ஈசர் கோயில் ஆகிய தலங்களிலும் பலா மரம் தல விருட்சமாகப் போற்றப்படுகிறது.
| |||
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 11
சுக்கிர கிரகத்துடன் தொடர்புகொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கும், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஏப்ரல் 21 முதல் மே 21-ஆம் தேதி வரையிலான நாட்களில் பிறந்தவர்களுக்கும் அதிக அளவு பயன் தரும் மரம் ஏழிலைப்பாலை. ஒரு காம்பில் ஏழு இலைகளுடன் அழகுறக் காட்சி தரும் இந்த மரம், அரிய மருத்துவ குணங்கள் கொண்டது.
சுக்கிர கிரகம் மற்றும் ரிஷப ராசி நட்சத்திரக் கூட்டம் ஆகியவற்றின் நல்ல கதிர்வீச்சுகளைத் தனக்குள் சேமித்து வைத்திருக்கிறது ஏழிலைப்பாலை. இந்த மரத்தை வீடுகளில் வளர்த்தால், நோய்கள் பலவற்றிலும் இருந்து நிவாரணம் பெறலாம்; சுக்கிர தோஷம் நீங்கும் என்கின்றனர் சாஸ்திர வல்லுநர்கள்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களில், வெப்பத்தால் தகிக்கும் நிலப்பகுதி பாலை. இந்தப் பகுதியில் கள்ளியும் பாலை மரமும் மட்டுமே நன்கு வளரும். பாலை மரத்திலும் பல வகைகள் உண்டு. அவற்றில், தெய்வீக மரமாகத் திகழ்வது ஏழிலைப் பாலை. கேரளப் பகுதிகளில், இந்த மரத்தின் கிளையை வெட்டிக்கொண்டு வந்து நட்ட பிறகே, விழாக்களைத் துவங்குவார்களாம்.
திருப்பாலைப்பந்தல், திருக்கழிப்பாலை, திருப்பாலை வனம் முதலான தலங்கள், பாலையின் பெயரால் அமைந்த தலங்களாகும்!
இவற்றுள், ஏழிலைப்பாலையை விருட்சமாகக் கொண்ட திருப்பாலைத்துறை, காவிரியின் தென்கரைத் தலங்களில் ஒன்று. இந்த ஊர், தஞ்சாவூரை அடுத்துள்ள பாபநாசத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கே கோயில்கொண்டிருக்கும் சிவனாரின் திருநாமம்- ஸ்ரீபாலைவனநாதர்; அம்பாளின் திருநாமம் - ஸ்ரீதவள வெண்ணகையாள்.
பாண்டிய மன்னனான மலையத்துவசன் என்பவன், புனித நதியாம் தாமிரபரணியில் நீராடிவிட்டு, கரையில் இருந்த காலவ முனிவரின் குடிலுக்குச் சென்றான். அவனுக்கு நல்லுபதேசங்களை அருளினார் முனிவர்.
ஆனால், அவரது அறிவுரைகளை மன்னன் ஏற்கவில்லை. மாறாக, 'முனிவர்களைவிட அரசர் களே பெரியவர்கள்' என்று வாதிட்டான். கோபம் கொண்ட முனிவர், கரடியாகும்படி மன்னனைச் சபித்தார். அதையறிந்த மன்னனின் மனைவி பத்மாவதி பதறினாள். ஓடோடி வந்து முனிவரின் கால்களில் விழுந்து, தன் கணவனை மன்னிக்கும்படி வேண்டினாள். மனமிரங்கிய முனிவர், அகத்திய முனிவரை வழிபடும்படி அறிவுறுத்தினார்.
கரடி உருவம் கொண்ட மன்னனும் அதன்படியே அகத்திய முனிவரை தரிசித்து வணங்கினான். அவர், ''திருப்பாலைத்துறை வனத்துக்குச் செல்க'' என்று அறிவுறுத்தினார். அதையடுத்து, பாலைத்துறை வனத்துக்கு வந்த கரடி (மன்னன்), பாலைவனநாதரை அனு தினமும் பூஜித்தது. ஒருநாள், அந்தப் பகுதிக்கு வந்த வேடன் ஒருவன், கரடியின் மீது அம்பு தொடுத்தான். தப்பித்து ஓடிய கரடி, காவிரி ஆற்றில் குதிக்க... சாப விமோசனம் கிடைத்தது; மலையத்துவசன் சுய உருவம் பெற்றான் என்கிறது தலபுராணம்.
பாண்டவர்களின் வனவாசத் தின்போது, அர்ஜுனன் பாதாள லோகத்துக்குச் செல்ல வேண்டி யிருந்தது. அவன், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீபாலைவனநாதரை வழி பட்டான். அவனுக்குக் காட்சி தந்த பாலைவனநாதர், பாதாள லோகத்துக்குச் செல்ல வழி காட்டினார். மேலும், வழியில் ஏற்படும் இடர்களைச் சமாளிக்க, அர்ஜுனனுக்கு வில் வித்தை நுணுக்கங்களையும் அருளினாராம். அர்ஜுனனும் இந்தத் தலத்து இறைவனின் திருவருளால் பாதாள லோகம் சென்று, உலூபி எனும் அரசிளங் குமரியை மணந்து வந்ததாக விவரிக்கின்றன புராணங்கள்.
இந்தத் திருத்தலத்தில், ஸ்வாமி சந்நிதிக்கு வலது பக்கத்தில் அம்பாள் சந்நிதி. இத்தகைய அமைப்புடன் திகழும் கோயில்களை, திருமணக்கோலத் திருக்கோ யில்கள் எனப் போற்றுவர். இங்கு வந்து வழிபட, திருமணத் தடை நீங்கி, விரைவில் மணப்பேறு கிடைக்கும்.
இத்தனைச் சிறப்புகள் கொண்ட திருப்பாலைத்துறை தலத்தின் விருட்சமான ஏழிலைப்பாலையை, 'சப்த சாதா' எனக் குறிப்பிடுகிறார் வால்மீகி. வட இந்தியாவில், இதனை 'சப்த பர்னா' என்கின்றனர்.
பெரும்பாலும், நான்கு அல்லது ஐந்து இலைகள் கொண்ட ஏழிலைப்பாலையையே காணமுடியும். புராதனமான ஆலயங்களில், ஏழு இலைகள் கொண்ட ஏழிலைப்பாலையைக் காணலாம். இந்த மரத்திலிருந்து, மாணவர்கள் பயன்படுத்தும் சிலேட்டுகளின் பார்டர் பலகை தயாரிக்கப்படுகிறது.
இதன் இலையை வறுத்துப் பொடித்து, சீழ் வடியும் புண்களின் மேல் வைத்துக் கட்டிவிட்டால், விரைவில் புண்கள் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
இஞ்சிச் சாறுடன் ஏழிலைப்பாலை இலையின் சாற்றையும் கலந்து, குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்குத் தருவார்கள். நீண்ட நாள் வயிற்றுப்போக்கினை, இந்த மரப் பட்டை கட்டுப்படுத்தும்; ரத்த பேதியும் நிற்கும்.
சூலை, குன்மம் முதலானவற்றைக் குணப்படுத்தும் வல்லமை, ஏழிலைப்பாலையின் வேருக்கு உண்டு. இந்த வேரை உலர்த்திப் பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், விரைவாத நோய் குணமாகும். புண்கள் மீதும், மூட்டு வீக்கத்தின்மேலும் ஏழிலைப்பாலை மரத்தின் பாலைப் பூசுவதால் குணம் பெறலாம். இதன் பால், புண்களைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது; கீல் வாதம், காது வலி ஆகியவற்றுக்கு எண்ணெய்யுடன் சேர்த்து உபயோகிக்கலாம்.
அஜீரணம், வயிற்று உப்புசம், வயிற்று வலி போன்றவற்றில் இருந்து குணம்பெற, இந்த மரம் பயன்படுகிறது. தோல் நோய்க்காரர்கள், இதன் இலைகளைக் கஷாயமாக்கிச் சாப்பிடலாம். குளிர் ஜுரம், யானைக்கால் வியாதி போன்றவற்றை குணமாக்கும் சக்தியும் இந்த மரத்துக்கு உண்டு. இந்த மரத்தின் குச்சிகள், மூட்டு வலிக்கு நிவாரணமாகப் பயன்படுகின்றன. இளஞ்செடி பருவத்தில் உள்ள ஏழிலைப் பாலையை எரித்து, அதன் சாம்பலைப் பிளவைக்கட்டிகள் மீது பூசினால், கட்டி விரைவில் பழுத்து, உடையுமாம்!
| |||
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 10
சிவப்புச் சந்தனமரம்
செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டிருப்பதோடு, நட்சத்திர மண்டலத்தின் கதிர் வீச்சுகளைத் தன்னுள் சேமித்துக் கொண்டு, பலவகையிலும் நன்மை அளிக்கும் அற்புத ராசி மேஷம்.
இந்த ராசிக்காரர்களுக்கும், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரையிலான நாட்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த விருட்சம் சிவப்புச் சந்தனமரம். இந்த அன்பர்கள் சிவப்புச் சந்தன மரத்தை (அரசு அனுமதியுடன்) வீட்டிலேயே வளர்த்துப் பயனடையலாம்.
மேஷ ராசிக்காரர்கள், சிவப்புச் சந்தன மரத்தின் அருகில் தினமும் 30 நிமிடங்கள் செலவிட்டால் போதும் (குறிப்பாக, மரத்தைக் கட்டிப்பிடித்தபடி), மரத்தின் மருத்துவக் குணங்கள் அவர்களின் உடலுக்குப் பரிமாற்றம் ஆகும்; இதனால் நோய் எதிர்ப்புச் சக்திகள் அதிகரித்து, நோய்கள் பலவும் குணமாகும். இதையே, 'ரெய்கி' சிகிச்சை முறை என்கின்றனர் மருத்துவர்கள்.
நாகை மாவட்டம் தேரழுந்தூரில் உள்ள ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சமும் சிவப்புச் சந்தனமரம்தான்.
இந்தத் தலத்தின் இன்னொரு சுவாரஸ்யம்... சிவாலயத்தின் எதிரிலேயே பெருமாளும் கோயில் கொண்டிருக்கிறார்!
உபரிசிரவஸ் என்ற மன்னனிடம், பறக்கும் வல்லமை கொண்ட தேர் ஒன்று இருந்தது. இந்தத் தேர் வானில் பறக்கும்போது, அதன் நிழல் பட்டு உயிரினங்கள் கடும் துன்பத்துக்கு உள்ளாயின. உயிர்களின் துன்பம் தீர்க்கவும், கர்வத்துடன் திரியும் மன்னனுக்குப் புத்தி புகட்டவும் திருவுளம் கொண்டார் கண்ணபிரான்.
ஒருநாள், பறக்கும் தேரில் மன்னன் பயணித்துக்கொண்டு இருந்தபோது, தமது திருவடி விரலால் அதை அழுத்தி, பூமியில் புதையச் செய்தார் கண்ணபிரான். தேர் அழுந்திய தலம் என்பதால், இது தேரழுந்தூர் எனப் பெயர் பெற்றதாம்.
ஒருமுறை, உமையவளை நடுவராகக் கொண்டு சிவனாரும் பெருமாளும் சொக்கட்டான் ஆடினார்கள். பகடைக்காய் உருண்டு விழுந்த எண்ணிக்கையில் இருவருக்கும் சந்தேகம் எழ... சிவனாருக்கு எதிராக தீர்ப்பு சொன்னாள் பார்வதிதேவி. இதனால் கோபம் கொண்ட சிவனார், 'பசுவாகக்கடவது' என்று தன் தேவியைச் சபித்தார். 'தன்னால்தானே சகோதரி சாபம் பெற்றாள்' என வருந்திய பெருமாள், மாடு மேய்ப்பவராக அவதரித்து, அந்தப் பசுவைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார். ஆகவே, இந்தத் தலத்துப் பெருமாளுக்கு ஆமருவியப்பன் (நிரை மேய்ப்பவர், பாதுகாப்பாளர்) என்று திருநாமம். தாயார்- ஸ்ரீசெங்கமலத் தாயார்.
சாபம் பெற்ற பார்வதிதேவி, தலங்கள் பலவற்றுக்கும் சென்று ஈசனை வழிபட்டாள். இறுதியாக இந்தத் தலத்துக்கு வந்து, இறைவனின் திருவருளால் சாபவிமோசனம் பெற்று, முன்பு போலவே அழகிய உருவை அடைந்தாளாம். எனவே, இங்கு உறையும் அம்பிகைக்கு ஸ்ரீசௌந்தரநாயகி என்று பெயர்.
மனைவிக்கு சாபம் கொடுத்தாலும், அவளது பிரிவால் தவித்து மருகிய சிவனார், சந்தனாரண்யத்துக்கு வந்து, வேதியர்களுக்கு வேதம் பயிற்றுவித்தாராம். இதனால் அவருக்கு ஸ்ரீவேதபுரீஸ்வரர் என்று திருப்பெயர்.
சிவபெருமானும் பெருமாளும் விளையாடிய சொக்கட்டான் பலகை, வேதபுரீஸ்வரர் கோயில் முன்மண்டப விதானத் தில், 20-க்கு 20 அடி எனும் சதுர அளவில் இன்றைக்கும் காட்சி தருகிறது. காவிரி மற்றும் அகத்தியருக்கு இங்கே சாப விமோசனம் கிடைத்ததால், இருவருக்கும் இங்கு தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.
கற்கசன் எனும் திருடனை, மன்னருக்கு எதிரே நிறுத்துவதற்காகச் சேவகர்கள் இழுத்துச் சென்றனர். அன்று சோமவாரம் (திங்கட்கிழமை) என்பதால், ஸ்ரீவேதபுரீஸ்வரர் ஆலயம் சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடந்துகொண்டிருந்தது. பக்தர் கூட்டம், 'ஹர ஹர' எனும் கோஷத்தை எழுப்பியது. அதில் லயித்த கற்கசன், அப்படியே சமாதி நிலையை அடைந்தான். ஆனால் காவலர்களோ, அவன் நடிப்பதாகக் கருதி, அவனை மிகவும் துன்புறுத்தினர்.
அப்போது, அவனது உயிரைக் கவர்ந்துசெல்ல எம தூதர்களும் வந்துசேர்ந்தனர். ஆனால், அவர்களைத் தடுத்த சிவகணங்கள், ''கற்கசன் சற்று நேரத்துக்கு முன்பு வேதபுரீஸ்வரரைத் தியானித்துப் புண்ணியம் பெற்றான். எனவே, அவனை நாங்கள் கயிலாயம் அழைத்துச் செல்ல உள்ளோம்'' என்று கூறி, கற்கசனை அழைத்துச் சென்றனர். ஆகவே, திங்கட்கிழமை அன்று வேதபுரீஸ்வரரை வணங்கினால், பாவங்கள் நீங்கிப் புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்!
தேரழுந்தூர் ஸ்ரீஆமருவியப்பன், மாசி மாத புனர்வசு நட்சத்திர நாளில் ஸ்ரீராமபிரானாக எழுந்தருள, ஸ்ரீவேதபுரீஸ்வரர் அப்போது காட்சி தரும் மாசி புனர்வசு விழா சிறப்புறக் கொண்டாடப் படுகிறது. சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் அற்புதமான விழா இது.
இவ்வளவு மகத்துவங்கள் கொண்ட தேரழுந்தூர் தலத்தின் விருட்சமாக சிவப்புச் சந்தன மரம் திகழ்வது சிறப்பிலும் சிறப்பு!
சிவப்புச் சந்தன மரத்தின் கட்டையை அரைத்துப் பவுடராக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் தணியும்; சந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொள்ள சூடு தணியும்; வீக்கங்கள், தலைவலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்; மார்பு வலி, இதய படபடப்பு மற்றும் இதய பலவீனம் ஆகியவற்றையும் குணமாக்கும்.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வல்லமை சந்தனத்துக்கு உண்டு. எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இதனைப் பயன்படுத்துகின்றனர். சந்தனம், முகப்பருவைப் போக்குகிறது; ரத்தப் போக்கைத் தடுக்கிறது; வெட்டை மற்றும் மேக நோயில் இருந்தும் நிவாரணம் தருகிறது. சிறுநீரைப் பெருமளவில் வெளியேற்றும் சக்தி, சந்தனத்துக்கு உண்டு!
சிவப்புச் சந்தனக் கட்டையை எலுமிச்சைப் பழச் சாற்றில் அரைத்துப் பூசினால், சொறி, சிரங்கு, புண், தோல் வெடிப்பு, மருக்கள், பருத்தொல்லை ஆகியவை நீங்கும். அழகுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம். சந்தன மர இலைகளை அரைத்து, அதனை நெல்லிக்காய் சாற்றில் கலந்து சாப்பிட, சர்க்கரை நோய் மட்டுப்படுமாம்.
சங்க இலக்கியங்களில், 'ஆரம் காழ்வை கடியிரும் புன்னை' (குறிஞ்சி) எனக் கபிலர், ஆரம் எனப்படும் சந்தன மலரையும் பிற மலர்களுடன் வைத்துக் குறிப் பிடுகிறார். ஆனாலும், ஆரத்தின் மலரில் வாசனை இல்லை; மரத்திலேயே சந்தனத்தின் நறுமணம் கமழ்கிறது.
பட்டினப்பாலை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, சிறு பாணாற்றுப்படை, மலைபடு கடாம் ஆகிய நூல்களில் சந்தன மரம் சிறப்புறக் கூறப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை, ஸ்ரீவாஞ்சியம் ஆகிய தலங்களிலும் சந்தன மரம் தல விருட்சமாக போற்றப்படுகிறது.
|
ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 9
| மூங்கில் மகிமை |
பிற்காலச் சோழர்களின் ஆட்சியின்போது, சோழவள நாட்டில் எண்ணற்ற கோயில்கள் எழுப்பப்பட்டன. அவற்றுள், நாகை மாவட்டம்- கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள ஸ்ரீநாகநாத ஸ்வாமி கோயிலும் ஒன்று. சீர்காழியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலம், கேது பரிகாரத் தலமும்கூட!
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வலி பொறுக் காமல், வாசுகிப் பாம்பு விஷத்தைக் கக்க, தேவ-அசுரர்கள் அலறித் துடித்து, சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தனர். அவர்களைக் காப்பாற்றஎண்ணிய சிவனார், விஷத்தைத் தாமேபருகினார்.
அருகில் இருந்த பார்வதிதேவி பதறியபடி, சிவனாரின் கழுத்தைப் பிடித்துக்கொண்டாள். இதனால் விஷம் சிவனாரின் கண்டத்திலேயே தங்கிவிட, அவருக்கு நீலகண்டர் எனும் திருநாமம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, பாற்கடலில் அமிர்தம் வெளிப்பட... திருமால் மோகினியாக வந்து அந்த அமிர்தத்தை தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அப்போது அசுரன் ஒருவன், அசுரகுரு சுக்ராச்சார்யரின் துணையுடன், தேவர் களில் ஒருவனாக வடிவம் எடுத்துவந்து மோகினியாளிடம் அமிர்தம் வாங்கிப் பருகினான். அதையறிந்த சூரிய- சந்திரர்கள், அசுரனின் வஞ்சகத்தைத் திருமாலிடம் தெரிவித்தனர். கோபம் கொண்ட திருமால், கையில் இருந்த கரண்டியால் அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் தலைவேறு, உடல்வேறாக அசுரன் வெட்டுப்பட்டு வீழ்ந்தபோதும், அமிர்தம் பருகியிருந்த தால் சாகவில்லை. அவனின் தலைப் பகுதி, பாம்பின் உடலுடன் பொருந்தி ராகுவாகவும், உடல் பகுதி பாம்பின் தலையுடன் பொருந்தி கேதுவாகவும் ஆனதாகச் சொல்கிறது புராணம்.
பாற்கடலைக் கடைந்தாயிற்று; அமிர் தமும் வந்தது. ஆனால், அது நமக்குக் கிடைக்கவில்லையே எனும் கோபத்தில், அசுரர்கள் வாசுகிப் பாம்பை வைக்கோல் பழுது போலத் தூக்கி வீசிவிட்டனர். அது, ஒரு மூங்கில் காட்டில் போய் விழுந்தது. உடல் நைந்து, உயிர் போகும் நிலையில் இருந்த அந்தப் பாம்பு, உயிருக்குப் போராடிப் பிழைத்தது. எனினும், 'தன்னால்தானே சிவனார் விஷம் அருந்த நேர்ந்தது' என வருந்தி, தனது பாவத்துக்குப் பரிகாரம் தேடி, சிவனாரை வேண்டித் தவம் இருந்தது.
அதன் தவத்துக்கு மனமிரங்கிய சிவனார், அந்தப் பாம்புக்கு காட்சி தந்தார். ''கேது தோஷத்துடன் வருந்தும்
இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சம் - மூங்கில். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம், சிதம் பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்கு அருகில் திருவேட்களம்- ஸ்ரீவேணுவனநாதர் கோயில், சீர்காழி ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் போன்ற தலங்களிலும் மூங்கில் மரமே ஸ்தல விருட்சம்.
பெருமூங்கில் என்பது சுமார் 60 வருடங்கள் வரை வளர்ந்த பிறகே பூக்கும். இந்த மலரை 'ஆய் மலர்' எனக் குறிப்பிடுகிறார் நக்கீரர். 'விரி மலர் ஆவிரை வேரல் ஆரல்' என குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடுகிறார் கபிலர். கூத்தர், பாணர் ஆகியோரை ஆற்றுப்படுத்திய பெரும்கௌசிகனார், ''வழுக்கக்கூடிய வழியில் செல்லும்போது, அங்கே வழி முழுவதும் பின்னி வளர்ந்த நுண்ணிய கோல்களைக் கொண்ட சிறு மூங்கிலோடே, வேழத்தினது மெல்லிய கோல்களையும் பற்றுக் கோடாகப் பிடித்துக்கொண்டு போவீராக!'' என்று அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். சங்க இலக்கியங்களில் மூங்கில், 'உந்தூழ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்மை நோயால் உண்டான புள்ளிகளை அகற்று வதற்கு, மூங்கிலின் வேரை தனித்தோ அல்லது உரிய மருந்துகளுடன் கலந்தோ பயன்படுத்தலாம். இதன் வேரை எரித்துப் பவுடராக்கி சொட்டைத் தலை, சொறி மற்றும் சிரங்கு உள்ள இடத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுவலியால் அவதிப் படுபவர்கள், மூங்கில் இலைகளைக் கஷாயமாக்கிப் பருகினால் நிவாரணம் பெறலாம். மாதவிடாய்க் கோளாறுகளால் அவதிப்படுபவர்களும் இதனைப் பயன்படுத்திப் பலனடையலாம். மூங்கிலின் துளிர் இலைகளைக் கஷாயமாக்கி உட்கொள்ள, நாக்குப் பூச்சிகள் அழியும்; ரத்த வாந்தி எடுப்பது நிற்கும்; நாள்பட்ட அல்சர் புண்கள் முற்றிலும் ஆறும்; மூட்டு வலியையும் போக்க வல்லது எனப் போற்றுகின்றனர் மருத்துவர்கள். சர்க்கரை நோய்க்காரர்கள், மூங்கிலின் விதைகளைப் பயன்படுத்தினால், சர்க்கரை நோய் கட்டுப்படுமாம்.
பொதுவாக, எந்த வைத்திய முறையானாலும், தானே எடுத்துக்கொள்ளாமல், அதில் அனுபவம் உள்ள மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்வதே நல்லது!
| ||||
முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 4
விநாயகரின் அகன்ற காதுகள்- நிறைய கேட்கவேண்டும் என்பதையும், வாயை மறைத்திருக்கும் துதிக்கை- அளவுடன் பேசவேண்டும் என்பதையும் அறிவுறுத்தும் என்பார்கள் ஆன்றோர்கள். 'வாயை மூடியிருக்கும் தும்பிக்கை, பேசுவதில் ஜாக்கிரதை வேண்டும் என்பதைக் குறிக்கிறது’ என்று சொல்வார் காஞ்சி மகா பெரியவர்.
இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனம் உண்டு. சிவனாருக்கு- ரிஷபம் (காளை); அம்பிகைக்கு- சிங்கம்; திருமாலுக்கு- கருடன்; பிரம்மனுக்கு- அன்னப் பறவை; முருகப்பெருமானுக்கு- மயில். பிள்ளையாரோ யானை மாதிரி பெரிய உருவம் கொண்டவர். ஆனால், அவருடைய வாகனமோ மிகச் சிறிய மூஞ்சூறு!
இதற்குச் சுவாரஸ்யமான வரலாறு ஒன்று உண்டு.
சவுபரி என்ற முனிவரின் மனைவி மனோமயை. இவளை பலாத்காரம் செய்ய முயன்ற கிரவுஞ்சன் எனும் கந்தர்வனை மூஞ்சூறு ஆகும்படி சபித்தார் சவுபரி முனிவர். பராசர முனிவரின் ஆஸ்ரமத்தில் வளர்ந்த விநாயகர், மூஷிகம் ஆகிய அந்த மூஞ்சூறு வை அடக்கித் தன் வாகனமாக்கிக் கொண்டார் என்கிறது புராணம். காமத்தால் மூஷிகம் ஆனான் கந்தர்வன். எனவே, அது காமத்தின் சின்னம். ஞானமே காமத்தை அடக்கி ஆளும். ஆக, ஞான வடிவினராகிய விநாயகர், காமத்தை அடக்கி அருளுகிறார் என்பதே இதன் தத்துவம்.
பொதுவாக, நாம் எல்லோரும் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத விஷயங்கள் மூன்று. ஒன்று யானை; இரண்டாவது- சந்திரன்; மூன்றாவது கடல். எத்தனை மணி நேரமானாலும் சலிக்காமல், பெரியவர்களும் குழந்தை போலாகி ஆசை ஆசையாகப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள் யானையை.
யானை அசைந்து அசைந்து நடப்பது, காதை ஆட்டிக் கொண்டிருப்பது, தும்பிக்கையை நீட்டிச் சாப்பிடுவது, அதனைச் சுழற்றுவது, குட்டிகளுடன் நடந்து செல்வது, மிகச் சிறிய கண்களால் அழகாகப் பார்ப்பது... என யானையின் செயல்கள் அனைத்தும் நமக்கு மகிழ்ச்சி அளிப்பவை! குழந்தைகள், மனதில் கள்ளம்- கபடம் இல்லாமல், விளையாடிக்கொண்டும் பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும்... தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் ஆனந்தம் அடையச் செய்வார்கள் இல்லையா? அதுபோல், பிள்ளையாரும் எல்லோரையும் மகிழச் செய்வார். எனவே, குழந்தைகள் மிகவும் விரும்பும் குழந்தைசாமி அவர்.
விநாயகர் வழிபாட்டில் மட்டுமே தலையில் குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் போடுவது, சிதறு (சூறைத்) தேங்காய் போடுவது எல்லாம்! மற்ற தெய்வ வழிபாடுகளில் இவை இல்லை.
இரண்டு கை விரல்களையும் மடித்துத் தலையில், அதாவது நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்கிறோம். யோக சாஸ்திரப்படி, நாம் தலையில் குட்டிக்கொள்ளும் இடத்தில் உள்ள நரம்பு(நாடி)களால் சலனம் மாறி, மனதில் தெய்வீகமான அதிர்வு உண்டாகிறது என்பது நம் முன்னோர் கண்ட உண்மை.
பிள்ளையார் வழிபாட்டில் சூறைத் தேங்காய் முக்கிய வழிபாடு. இதுவும் தமிழகத்திலேயே அதிகம் காணப்படுகிறது. தேங்காயைத் தரையில் மோதி உடைப்பதை, சூறைத் தேங்காய் அல்லது சிதறு தேங்காய் என்பர். சிதறிய தேங்காய்த் துண்டுகளை எடுத்துக்கொள்ளும் (பிரசாத) உரிமை சிறுவர்களுக்கே! இதுவும் மறைமுகமாகச் செய்யப்படும் ஒருவகை தருமம். இதில் தேங்காய் மட்டும் சிதறுவதில்லை. விநாயகரின் முன்பு பக்தர்களின் தீயவினைகளும் மும்மலங் களும் சிதறிப் போகின்றன. ஆணவத்தின் மண்டையோடு பல துண்டுகளாகச் சிதறுகிறது என்பது தத்துவ நுட்பம். உடலையும் உள்ளத்தையும் உயிரையும் கவ்விக்கொண்டிருக்கும் அனைத்துத் துன்பங்களும் சிதறி நொறுங்கவேண்டும் என்ற பிரார்த்தனையே இந்த வழிபாட்டின் தத்துவமாகும்.
பிள்ளையாரின் தத்துவ உருவம், வினை தீர்க்கும் வழிபாடுகள் போன்றே, பல்வேறு தலங்களில் அவர் சூடிக் கொண்டிருக்கும் திருப்பெயர்களும், அவற்றுக்கான காரணக் கதைகளும்கூட சுவாரஸ்யமானவையே!
சிந்தை மகிழ்விக்கும் அந்தத் திருக்கதைகள், வல்வினைகளைத் தீர்க்கும் வல்லமை வாய்ந்தவை. நம் ஒவ்வொருவரது இல்லத்திலும் அற்புதம் நிகழ்த்தப்போகும் அந்தக் கதைகளை, இனி... அடுத்தடுத்த இதழ்களில் பார்க்கப் போகிறோம்.
முதல் கதை என்ன தெரியுமா?
- பிள்ளையார் வருவார்..
திருப்பட்டூர் அற்புதங்கள்! - 4
'படுத்துக்கொண்டே இருக்கும் திருமால், திடீரென்று கனம் கூடிப் போயிருக்கிறாரே... இதெப்படி சாத்தியம்? தடாலென்று உடல் எப்படிப் பருமனாகும்? அதிகம் சாப்பிட்டால், உடலின் எடை கூடிப் போகும். ஆனால், உணவும் பசியும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்தானே ? உலகையே படைத்துக் காக்கிற இறைவனுக்குப் பசி ஏது ? உணவு எதற்கு ?
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடியே, திருமாலுக்கு எந்த இடையூறும் ஏற்படாதபடி, மெள்ள அசைந்து, சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பரம்பொருளிடமே தனது சந்தேகத்தைக் கேட்டார் ஆதிசேஷன்.
''ஸ்வாமி, வழக்கத்தை விட, இன்றைக்கு நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே கனக்கிறீர்கள். இப்படித் திடீரென கனம் கூடியதற்கு என்ன காரணம் ஸ்வாமி ?'' என்று ஆதிசேஷன் கேட்டுவிட்டு, மூச்சு வாங்கினார். இந்த முறை, பெருமாளுக்குத் தெரியும்படியாகவே ஆழமாக மூச்சு வாங்கிவிட்டார்.
மெள்ளத் தலை திருப்பி ஆதிசேஷனைப் பார்த்து புன்னகைத்த ஸ்ரீமந் நாராயணர், ''மனம் கொள்ளாத பூரிப்பில் இருக்கிறேன், அனந்தா!'' என்றார். இதைக் கேட்டதும், அந்தப் பூரிப்பும் சந்தோஷமும் ஆதிசேஷனுக்கும் தொற்றிக்கொண்டது. முதலாளியின் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று ஒரு விசுவாசமான தொழிலாளி குதூகலமாவது, அந்த முதலாளியின் நற்குணங்களைக் காட்டக்கூடிய ஒன்றல்லவா!
''எதனால் இந்தப் பூரிப்பு என நான் அறிந்து கொள்ளலாமா ஸ்வாமி?'' என்று பவ்யமாகக் கேட்டார் ஆதிசேஷன்.
ஆதிசேஷன் ஒருகணம் கண்களை மூடினார். உள்ளுக்குள் சிவனாரின் திருநடனம் எப்படியிருக்கும் எனக் கற்பனை செய்து பார்த்தார். ம்ஹூம்... முடியவில்லை. கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட நடனம் அல்லவா, சிவனாருடையது!
கண்களைத் திறந்தார் ஆதிசேஷன். அதில் ஏக்கம் படர்ந்திருந்தது. 'ஹூம்...’ என்று பெருமூச்சு விட்டார். அதில் அவரின் இயலாமை வெளிப்பட்டது. ஏக்கமும் இயலாமையும் கலந்த குரலில், ஸ்ரீமந் நாராயணரிடம், ''ஸ்வாமி... அடியேனின் சின்ன விண்ணப்பம்; ஆனால், மிகப்பெரிய ஆசை. சிவனாரின் திருநடனத்தைக் காணும் பாக்கியத்தை நானும் பெறவேண்டும். இதற்குத் தாங்களே அருளவேண்டும்'' என்று கெஞ்சுகிற பாவனையில் வேண்டுகோள் விடுத்தார் ஆதிசேஷன்.
''அவ்வளவு தானே... இப்போதே பூவுலகில் பிறப்பாய். சிவனாரின் திருநடனத்தைக் காலம் வரும்போது கண்டு களிப்பாய்'' என ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார் திருமால்.
பூவுலகம். அங்கே...அனைத்துச் செல்வங்களும் ஒருங்கே பெற்ற... ஆனால் பிள்ளைச் செல்வம் இல்லையே எனக் கலங்கித் தவித்த தம்பதி, இறைவனை நோக்கி கையேந்தியபடி, 'பிள்ளை வரம் தந்து, எங்களின் இந்த ஜென்மத்துக்குச் சந்தோஷத்தைத் தரக்கூடாதா ?’ என்று கண்ணீருடன் மனமுருகிப் பிரார்த்தனை செய்தது.
தனது உண்மை பக்தர்களின் கண்ணீரைத் துடைக்க ஓடோடி வருவதுதானே, இறைவனின் பணி!
அங்கேயும் அந்த அற்புதம் நிகழ்ந்தது. கண்கள் மூடிய நிலையில், கையேந்தியபடி பிள்ளைப் பிச்சை கேட்ட தம்பதியின் கையில், ஏதோ ஒன்று விழ... சட்டென்று கண் திறந்த கணவன், கையைப் பார்த்தான். உள்ளங்கை அளவிலான சின்னஞ்சிறிய நாகம். 'ஐயய்யோ... பாம்பு!’ என கைகள் உதறி, கால்கள் எகிற அலறினான். உதறிய கையில் இருந்து விழுந்த பாம்பு, பூமியில் விழுந்ததும் அழகிய குழந்தையாக உருவெடுத்தது. அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒருசேரத் தாக்கியதில், திக்குமுக்காடிப் போன தம்பதி, ஒருவரையருவர் பார்த்துக் கொண்டனர்; முகம் மலரச் சிரித்துக் கொண்டனர். குழந்தையை அப்படியே அள்ளி எடுத்து நெஞ்சோடு வைத்து அணைத்துக் கொண்டனர்; இறைவனின் திருவடியில் குழந்தையை வைத்து, சாஷ்டாங்கமாக விழுந்து, பிள்ளை வரம் தந்த பரம்பொருளை, பெருமாளை வணங்கி நமஸ்கரித்தனர். 'இது நீ வழங்கிய கொடை; இத்தனை வருடங்கள் செய்த பிரார்த்தனையின் கனிவில், எங்களுக்குக் கிடைத்த பொக்கிஷம்! இது கடவுளின் குழந்தை. உன்னுடைய பிள்ளை. வளர்ப்பதும் வாழவைப்பதும் எங்களின் கடமை; இந்தக் குழந்தையை, இந்தப் பூமிக்கு நீ எதற்காக அனுப்பி வைத்தாயோ... அது நிறைவேறுவதற்காக நாங்களும் உறுதுணையாக இருப்போம்; எங்களுக்கு இது பெருமையும் கூட!’ என உணர்ச்சிவசப்பட்டனர்.
அந்தக் குழந்தையை அள்ளி எடுத்தனர். உச்சி முகர்ந்தனர்; கன்னம் கிள்ளினர்; காது வருடினர். குழந்தையின் உள்ளங்கைக்குள் தங்களின் விரலை வைத்துக்கொண்டு, அந்த மென்மையில் திளைத்தனர். உள்ளங்கையில் வந்து அவதரித்த குழந்தைக்கு 'பதஞ்சலி’ எனப் பெயரிட்டனர். 'பதஞ்சலி பதஞ்சலி பதஞ்சலி...’ என குழந்தையின் காதில் விழும்படி, மூன்று முறை உச்சரித்தனர்.
''இதோ... என் பிறப்பின் நோக்கம் நிறைவேறும் நாள், நெருங்கிக் கொண்டே இருக்கிறது. நாராயணா! மண்ணுலகுக்கு என்னை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தீர்கள். சிவனருளைப் பெறும் நாள் சீக்கிரமே கிடைக்கப் போகிறது. உங்களை வந்தடையும் தருணம் நெருங்கி விட்டதாகவே உணர்கிறேன். இதோ... திருப்பிடவூர் எனும் புண்ணிய பூமியைக் கண்டுகொண்டேன். காசியம்பதிக்கு நிகரான புனித பூமியில் அடியெடுத்து வைக்கப் போகிறேன். இது காசிக்கு நிகரான தலம் மட்டுமா... திருக்கயிலாயத்துக்கு நிகரான தலமும் ஆயிற்றே! நாராயணா... நாராயணா..!''- பாம்பாக உருவெடுத்து, ஸ்ரீமந் நாராயணரை வணங்கித் தொழுத ஆதிசேஷன், அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.
'இதோ... இதுதான் திருப்பிடவூர் தலமா?’ என்று வியந்தபடி, கண்களில் கண்ணீர் திரையிட... வேகவேகமாக நடந்தார் பதஞ்சலி முனிவர்.
கிட்டத்தட்ட... திருப்பிடவூர் தலத்தை நோக்கி ஓடினார் என்றுதான் சொல்லவேண்டும்!
- பரவசம் தொடரும்
Subscribe to:
Posts (Atom)