Sunday 7 January 2018

கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்: பகுதி 1






pattiswaram


இறைவன் பட்டீசுவரசுவாமி, இறைவிக்குப் பச்சைநாயகி என்று தமிழிலும், மரகதவல்லி என்று வடமொழியிலும் திருப்பெயர்கள் வழங்கப்படுகிறது. சிவன்கோயில் என்றாலும் சிற்பங்களில் வைணவமும் ஏராளமாக இணைந்துள்ளது.
தலவிருட்சம்: இறவாப்பனை, பிறவாப் புளி, பன்னீர் மரம்
தீர்த்தம்: சிருங்கக் கிணறு. (இதைச் சிங்க தீர்த்தம் என்று தவறாகச் சொல்கின்றனர். அதற்குத் தகுந்தாற்போல் கற்சிலை சிங்கத்தையும் வைத்திருக்கிறார்கள்.) இங்கிருக்கும் திருக்குளத்தினுள் உள்ளார ஐந்து தீர்த்தங்கள் உண்டு எனவும் சொல்லப்படுகிறது.
மாதேசுவ கோயில் அழகிய சிற்றம்பலம்: ஆதிபெயர், பின்பு இடங்கை நாயக ஈஸ்வரமுடையார் என்பர்.
கனக சபை: நடராஜப் பெருமான் இருப்பிடம்
அம்பலவாணர் சந்நிதி: இதை சின்ன கோயில் என்பர். இதுதான் காலேசுவரம். இங்கு சுவாமியும் அம்பாளும் உண்டு. இங்குதான் நடராஜர் திருநடனம் செய்த புராதனமான பெரிய அரசமரம் உள்ளது. வாயில் முன்பு பெரிய உருவில் ரிஷபம் இருக்கிறது.
பட்டி விநாயகர்: சந்நிதி இதன் கீழ்தான் நச்சுப் பொய்கை இருந்ததாகக் கூறுவர்.
வட கைலாசம்: இங்குதான் பிரம்ம தீர்த்தம் என்றும் குண்டிகை தீர்த்தம் என்றும் கூறப்படும் கிணறு இருந்தது.
பட்டி சுற்றும் மேடை: இங்கு ஆதி அரசமரம், பிறவாப் புளியமரம், ஈசன் பள்ளன் உருவக் கோயில் இருந்த இடம்.
தென் கைலாசம்: இது பேரூரின் தென்மேற்கு பக்கத்தில் இருக்கிறது.
சோழன் துறை: அரசமரம் பெரியது. ஆதி அரசமரம் விழுந்துவிட்டது. இங்கு கணபதி, நாகர்கள் மற்றும் காஞ்சிமா நதிக்கரை உள்ள இடம்.
திருநீற்று மேடு: இப்பொழுது பாழ்பட்டு புதர்கள் சூழக் கிடக்கிறது.
சாந்தலிங்க சுவாமி சந்நிதி: திருக்கோயிலின் கிழக்குத் திசையில் இருக்கிறது.
மேற்கண்ட பழமையானவைகளில், திருக்கோயில் பனை, புளியமரம் மற்றும், தெப்பக்குளம் தவிர பெரும்பாலானவற்றைக் காணமுடியவில்லை.
***
கோவை திருப்பேரூர் ஆலயம் தொன்மையும் பழமையும் கொண்டது. இத்திருக்கோயிலின் கற்பக்கிருஹத்தை கரிகால் சோழன் அமைத்தான். ஆறாம் நூற்றாண்டில், அப்பர் பெருமான் இவ்வாலயத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் ஒரு பாண்டிய மன்னன், வைணவ ஆலயம் ஒன்றை இங்கே நிறுவினான்.
ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இவ்வாலயம் வந்து பாடியதை தேவாரம் எடுத்துக் காட்டுகிறது. இவ்வாலயத்துள் அமைந்திருக்கும் புகழ்வாய்ந்த கனகசபை, மதுரை அளாகத்ரி நாயக்கரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயிலின் தெப்பக்குளம் மிக அழகானது. பதினாறு வளைவுகளைக் கொண்டது.
இத்திருக்கோயிலுக்குப் பெருமை சேர்ப்பவை - காஞ்சிமாநதி என்னும் நொய்யல் நதியாகும். (இப்போது இந்த நதியின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பை மற்றும் பாலித்தீன் கழிவுகளால் மாசுபட்டு மறைந்துள்ளது. பெரிய மழை ஒன்று பெய்தாலொழிய இந்நதி வழித்தடத்தைக் காண முடியாது.) அடுத்து சோழன் துறை, இதனருகில் பட்டிவிநாயக ஆலயம், வடகைலாசம், தென்கைலாசம் ஆலயங்கள்.
புராணம்
புராணம் என்பது பழஞ்சரிதங்கள் ஆகும். புராணங்கள் என்றால் பொய்யாகிய கட்டுக்கதை என்று சிலர் உரைப்பர். இவர்கள் அப்படி உரைப்பது அவர்களின் அறிவீனம். இவர்களின் அறிவீனம், ஆணவம், மடமை ஆகியவற்றை பேரூரார், இவர்களைப் பணிவிலும் நன்னெறியிற் இட்டுச்செல்ல அருள்வாராக! காமதேனு முக்தி அடைந்த தலம் இது. சுந்தரமூர்த்தி நாயனார் இக்கொங்கு நாட்டுக்கு எழுந்தருளி, இத்திருப்போரூர் வந்து பாடியதை பெரிய புராணத்திலும் பிற சரித ஆதாரங்களிலும் அறியலாம்.
"ஆரூரார் பேரூரார்" எனவும், "பேரூர் பிரமபுரம் பேராவூரும்" எனவும் அப்பர் சுவாமிகள் தனது ஷேத்திரக் கோவையில் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார். ஆக சுமார் கி.பி. 650-க்கு முன்னரே திருப்பேரூர் பட்டீசுவரர் ஆலயம் கட்டப்பட்டிருப்பதென்று தெரியவருகிறது.  (பேரூர் பற்றிய தனி தேவாரம் மறைந்து போய்விட்டதாக கருத்துண்டு). பல தேவர்களும் பல அரசர்களும் பல முனிவர்களும் இவ்விறைவனை வழிபட்டு உய்தி பெற்றார்கள் என்பதற்கு இப்பேரூர் புராண படலங்களில் தெரியும்.
பற்பல தேவர்கள் முனிவர் அரசர் போன்றோர்கள் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டது புராணச் சரிதத் சான்றில் உள்ளன. இத்தலத்தின் மூர்த்தியாகிய பட்டிநாதர், பட்டீசர் என்ற பெயர், பசுவாகிய காமதேனுவினால் பட்டியிட்டுப் பூசிக்கப்பெற்ற வரலாறு ஆகும். குழகன் குளப்புச் சுவடுற்ற படலத்தில் கூறிய அடையாளங்களாகிய கன்றுக்குட்டியின் கால்குளம்புச் சுவடுகள் மூன்றும் சுவாமி திருமேனியில் இன்றும் உள்ளன. 
தானேதோன்றி (சுயம்பு) முளைத்து கிளைத்தெழுந்த இவ்விறைவனின் திருமேனியில், ஐந்துதலை நாகப்படம், பாம்புப் பூணூல், திருமுடியில் சுற்றப்பட்டிருக்கும் சடைக்கற்றை, இச்சடைக்கற்றையை கரைபோல இருக்கப் பெற்றதாகிய கங்கைக்கு ஏற்ற நீர் நிலை, பிரம்ம விட்டணுக்கள் அன்னமும் பன்றியுமாகத் தேடிய அடையாளங்கள் போன்ற அடையாளங்களை மக்கள் வழிபட்ட தரிசனத்தின்போது கண்டு களித்திருக்கிறார்கள். 
திருப்பேரூரின் வளமும் புண்ணியமும் பெருமையுமேயன்றி, இத்தலத்தினைச் சூழ்ந்துள்ள மலைகளின் பெருமையும் மிக மேம்பட்டவையாகும். ஐந்து பெருந் தேவர்களுக்கு இடமாகிய ஐந்து மலைகள் இதனைச் சுற்றி விளங்குகின்றன. அவை -
1.சிவமயமாகிய வெள்ளிமலை (இப்பொழுது நீலிமலை எனப்படுகிறது)
2.உமாதேவியார் மலை (ஐயாசாமி மலை)
3.பிரம்மன் மலை (பெருமாள்முடி மலை)
4.விட்டுணுமலை
5.முருகக் கடவுளாகிய மருதமலை ஆகியவை.
இவ்வைந்து மலைகளும் ஆதிமா பிராகிருதம் திருப்பேரூரைச் சூழ்ந்து கோட்டைபோல அரணாய் உள்ளன. இந்த காஞ்சிமா நதியில் சோழன்துறை என்னும் துறையும் ஒன்றுண்டு. இவ்விடத்தில் காயஸ்து மரபினர்களாகிய லாலாக்கள் மண்டபம் இருந்தது. காலேசுவர சுவாமி உற்சவத்தில் தீர்த்தோத்சவமும் வசந்த காட்சியும் மற்ற விசேஷ காலங்களில் தீர்த்தமும் இந்தச் சோழன்துறையில்தான் நடைபெற்றன.
குட்டநோய், பிரமஹத்தி தோஷம், முயலக நோய், சித்தபிரமை கண்டோர், பைத்தியம் முதலான பெரிய நோய்களை இக்காஞ்சிமா நதியில் நீராடி, பிரம தீர்த்தத்தில் குளித்து, திருமேற்றிடம் வந்து அவ்விடத்து விபூதியினை பூசி நோயொழியப் பெற்றிருக்கிறார்கள். இதற்கானச்  சான்றுகளை இத்தொடரில் வரும் படலத்தில் வாசிக்கலாம். (இத்தொடரில் பின்பு, முக்கிய படலங்கள் விரிவாக வரும்.)
இந்த பேரூர் தல வழிபாட்டியிலே உயிர்கள் இவ்வுலகில் நன்மணம், நன்மக்கள், செல்வம் முதலிய விருப்பங்களை எல்லாம் கைவரப் பெற்றார்கள் என்றும், மறுமையிலே தேவபோகங்களை அடைந்து அனுபவிப்பர் என்றும், இறுதி நேரத்தில் அழிவில்லாத நிலைத்த இன்பமாகிய "முத்தியையும்" பெற்று இறைவன் திருவடிக்கீழ் நீங்காது இருப்பா் என்றும், இப்புராணப் படலத்தில் பயனையடைந்தோர் சாட்சியானதை நாமும் இத்தொடர் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
ஐம்பெரும் அதிசயங்கள்
1. எலும்பு கல்லாகுதல்.
2. இறவாப் பனை, பிறவாப் புளி.
3. புழுக்காத சாணம்.
4. உயிர் பிரியும்போது வலது செவி மேலாக இருத்தல்.
5.செம்பு பொன்னாகுதல்.
1. எலும்பு கல்லாகுதல்
இத்தலத்தை அடைந்தோர்க்கு, அழியா நிலைமையைத் தரும் என்பதின் சான்றே, இங்குள்ள காஞ்சிமா நதியில் (நொய்யல்) இடப்படுகின்ற மனித அஸ்தியின் எலும்புகள் கல்லாக மாற்றப்பட்டு, நிலைபெறுதல்தான் உண்மையான சான்று. இந்நதியில் நீரோட்டம் இருக்கும்போது, கோவையிலுள்ளோரும், கேரளாவினைச் சார்ந்தோரும், இறந்தவர்களின் அஸ்தி எலும்புகளை இந்நதியில் இட்டுச் சடங்கு செய்து வந்தனர். ஆக தன்னை அடைந்தோர்க்கு அழியா நிலையைத் தருவது இதுவே!
2. இறவாப் பனை
இத்தலத்தின் இறவாப் பனையின் வயது எவ்வளவோ ஆண்டுகள். இறப்பே இல்லாது வாழ்வது இப்பனை. பிறப்பும், இறப்பும் உபாதிகள் எல்லாம் இத்தலத்தை அடைந்தோர்க்கு நீக்கம் பெறுவர் என்பதற்குச் சான்றுதான் இந்த இறவாப் பனை. ஆக பிறப்பும் இறப்பும் இல்லாதவர் இறைவனின் அருள் இதனை உணர்த்துவதாகும். (இந்த பனை இறவாத் தன்மை கொண்டது).
பிறவாப் புளி
இந்த பிறவாப் புளியின் விருட்சத்தை, நம் நல்வினைப் பயனின் காரணாத்தினாலே, நாம் இந்த கலியில் இதைக் காணும் பேற்றைப் பெற்றோம். இந்த இறவாப் புளியின் விருட்சமானது, பட்டீசரின் திருக்கோயிலுக்கு எதிரிலேயே இருக்கிறது. இந்தப் புளியமரக் கனியின் விதைகள் முளைப்பதில்லை. நீங்கள் இவ்விதையினை எடுத்துச் சென்று எங்கே ஊன்றினாலும் அது முளைப்பதில்லை. அப்படியே முளைக்க ஊன்றிய விதைகள், முளை வந்ததும் தீய்ந்து போகும். இது அன்றைய நாளிலிருந்து இன்றைக்கும் இது கண்கூடு. ஆக இத்தலம் என்றும் அழியா நிலைபெற்றவை என்பதை நமக்கு காட்டுவதாகும்.
3. புழுக்கா சாணம்
இத்தலத்தில் விழும் கோ-வின் சாணங்கள், எவ்வளவு நாளானாலும் அதில் புழு உருவாவதில்லை. (மற்ற எல்லா இடத்திலும் கோ-வின் சாணங்களில் மறுநாளிலே புழக்கள் பிறந்து நெளியும்.) ஆக, இத்தலத்தை அடைந்தோர்க்கு மேலும் பிறப்பில்லை என்பதான சான்று இது.
4. உயிர் பிரியயில் வலது செவி மேலாக இருத்தல்
இந்தத் தலத்தில் இறப்பவர் யாவரும், இறக்கும் சமயம் அவர்களின் வலது செவி மேலாக இருந்தவாறே இறக்கின்றனர். இன்றைக்கும் இது கண்கூடு. இத்தலத்திலே இறப்பு உயிர்கள் எவையாயினும், அவையெல்லாம் அதற்கு முன் எவ்வாறு கிடப்பில் கிடந்து உழன்றலும், உயிர் பிரியும் சமயம், இத்தல இறைவன், அவர்களின் வலது செவியில் திருவைந்தெழுத்தை உபதேசம் செய்து, தன்னடியிற் சேர்த்துக்கொள்கிறான். ஆக, காசியைப்போல பிறவாப் பெருமையை, இத்தலத்தில் இறப்போர்க்கு இத்தல இறைவன் கொடுத்து வருகிறான்.
5. செம்பு (உலோகம்) பொன்னாகுதல்
இந்த பேரூர் தலத்திலே, வடகைலாயம் எனுமிடத்தில் உள்ள திருக்கோயிலிலே, பிரம தீர்த்தம் என்றும், குண்டிகை தீர்த்தம் என்றும் கூறப்படும் கிணறு ஒன்று இருக்கிறது. (இந்த வடகைலாயக் கோயிலின் நந்தவனத்திற்கு அருகில் ஒற்றையாக நிற்கும் பனைமரமே இறவாப் பனை ஆகும்.) இந்த கிணற்றுத் தீர்த்தத்தில் குளித்து வந்தோர், பைத்தியம் மற்றும் பெருநோய்கள் பீடித்தோர், நோய் ஒழியப் பெற்றிருக்கிறார்கள்.
அப்படி இங்கு வந்து குளித்தோர், இக்கிணற்றிலே செப்புக் காசு ஒன்றை இட்டு விடுவர். அதன் பின் இக்கிணற்று நீரை மொண்டு குளிப்பார்கள். (அந்நாளில் செப்புக் காசுகள் வழக்கத்தில் இருந்தது.) இதில் இடப்படும் செப்புக் காசுகள் சிலகாலம் சென்று, செப்புக் காசிலிருக்கும் களிம்புகள் நீங்கித் தங்கமாக ஒளிர்ந்தன. அந்தத் தங்கத்தைப் பார்த்துவிட்டு, "ஆயிரத்தெட்டு மாற்றாக ஒளிவீசும் பொன்" என்று தாயுமானாரே கூறியிருக்கிறார். ஒளிவிடும் பொன் என்பதை, இக்காலத்தில் (radium) என்போம்.
1918-ம் வருடத்தில், இந்தக் கிணற்றை சேறு வாரி சுத்தம் செய்தபோது, அந்தச் சேற்றுத் தூர்வையிலே, இந்தக் கிணற்றில் போடப்பட்ட செப்புக் காசுகள், பொன்னாய் மாறி ஒளிர்ந்தன. ஆக, செம்பினில் களிம்பு நீக்கி பொன்னாக்கி இருக்கிறது இந்த குண்டிகை தீர்த்தம். 
இத்தலத்தினைச் சுற்றிச் சூழப்பட்டிருக்கும், எவ்வித நீர் நிலைகளிலும் இவ்விதத் தன்மை இருக்கப் பெறவில்லை என்பது உறுதி. முன் சமயத்தில், குண்டிகை கிணற்றுத் தீர்த்தத்தில் காணப்படும், பெளதீகப் பொருள்களை ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். அதனை ஆய்வு செய்தோர், இது மனித உணர்விற்கு மேற்பட்டவை என கூறினர்.





IMG-20171226-WA0019


பிரம்மதேவரின் படைப்புத் தொழிலின்போது அவர் சோர்வுற்றிருந்தார், இதனால் படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டன. இதை அறிந்த மகாவிஷ்ணு, காமதேனுவை அழைத்து "நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக" என்று கட்டளையிட்டார்.
அதன்படி காமதேனுவும் இமயமலைக்குச் சென்று அருந்தவமிருந்தது. ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை. அச்சமயம் நாரத முனிவர் தாம் வழிபட்ட தசஷிண கைலாயத்தைப் பற்றி காமதேனுவிடம் சொன்னார். காமதேனுவும் கன்றுடன் நாரதர் கூறிய இடத்தை அடைந்து அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சிமா நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலைச் சொரிந்து வழிபட்டுத் தவமிருந்தது.
ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, மேய்ச்சலின்போது, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை, மேயலில் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவவெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்தன. இதைக் கண்டு பதறிப்போனது தாய் காமதேனு. காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபெருமான் தோன்றினார். பார்வதி தேவியின் வளைத்தழும்மை என் மார்பகத்தில் ஏற்றுக்கொண்டதுபோல், உன் கன்றின் குளம்படித் தழும்பையும்  நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன் என்று ஆறுதல் கூறினார் காமதேனுவிடம். 
இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டிய சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலேயே உனக்கு அருளுகிறேன். அதுவரை இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காண்பாயாக! மேலும் உன் நினைவாக இத்தலம் பட்டிபுரி, காமதேனுபுரம் என்று வழங்கப்படும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும் என்று அருளினார்.
சுந்தரரும், தில்லையந்தணர்களும்
பாரூரும் அரவல்குல் உமைநங்கை
அவள்பங்கன் பைங்கண் ஏற்றன்
ஊருரன் தருமனார் தமர்செக்கில்
இடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற்
றம்பலத்தே பெற்றா மன்றே 
என சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிச் செய்தார். 
சுந்தரர் சிதம்பரத்தில் இருந்து கொண்டு, பேரூரிலுள்ள நடராஜரின் அழகை மானசீகமாக கண்டு இப்பதிகத்தைப் பாடினார். அதைக் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் "தில்லையில் இருந்து கொண்டு பேரூரைப் பற்றி பாடும் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு சுந்தரர் அந்த அழகைக் காண கோடி கண்களும் போதாது. அந்தப் பரவசத்தை அனுபவித்து உணர்ந்தால்தான் பாடமுடியும்" என்றார். உடனே திருப்பேரூருக்கு புறப்பட்டு வந்த தில்லைவாழ் அந்தணர்கள் நடராஜரின் அழகைப் பார்த்து மயங்கிப் போனார்கள். சுந்தரர் பாடிச் சொன்னது உண்மையென உணர்ந்து, சிதம்பரத்தில் இருப்பது "திருச்சிற்றம்பலம்" இங்கிருப்பதோ "அழகிய திருச்சிற்றம்பலம்" என்று கூறி வணங்கிவிட்டு திரும்ப தில்லைக்குப் புறப்பட்டு போனார்கள்.
மேலைச் சிதம்பரம்
இங்கிருக்கும் கனக சபையை முப்பத்து நான்கு வருடங்களாக, திருமலை நாயக்க மன்னனின் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் என்பவன் கட்டினான். முப்பத்து நான்கு வருடங்களாக கட்டப்பட்ட கனகசபையில் பிரம்மா, திருமால், அதி உக்ரகாளி, சுந்தரர் ஆகியோருக்காகவும், நந்தியின் தவத்திற்காகவும், சிதம்பரத்தில் நடனமாடியது போலவே இங்கும் ஆனந்த நடனமாடினார் நடராஜர். அதனால்தான் இத்தலம் "மேலைச்சிதம்பரம்" என்று அழைக்கப்படுகிறது.
இன்றும் நடராஜரின் நுழைவு வாயிலில் இரண்டாவது பஞ்சாட்சர படியினை தாண்டும்போது கோமுனி, பட்டிமுனி என்னும் பெயரில் பிரம்மாவும், திருமாலும் இருப்பதாக ஐதீகம். கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளைத் தாண்டினால் இரண்டு பக்கமும் பிரமாண்டமான எட்டு சிலைகள், கல்சங்கிலி, சுழல்தாமரை போன்ற அற்புதமானவைகளைக் கண்டு ஆச்சரியப்படுவோம். இதைத் தாண்டினால் இரண்டாவது பஞ்சாட்சரப்படியின் அருகே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக பிணைந்தது போன்ற சிலை இருக்கிறது. இதைத் தாண்டினால் குதிரை வீரன் சிலை ஒரு பக்கத்தில் முழுதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தும் காணப்படும். இதன் வரலாறு அடுத்து வரும் நான்காவது தொடரில் வாசிக்கலாம்.
அடுத்து, சந்தன சிற்பங்களும் மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளை கடந்தால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் அழகான நடராஜர், அவரோடு சிவகாமியம்மை காட்சியருளுவதைக் காணலாம். நடராஜரின் மண்டபத்தை நான்கு வேதங்களே நான்கு தூண்களாக மாறி தாங்குவதாக ஐதீகம். இறைவனுக்கு பணிந்த நிலையில் இங்கிருக்கும் தூண்கள், சற்றே சாய்ந்த நிலையில் இருப்பதை நாம் பார்க்கலாம்.
ஆனந்த தாண்டவமாடும் இறைவன், ஆடி அடங்கப் போகும் நிலையில், தூக்கிய திருவடிகூட சற்றே தாழ்த்திய நிலை நளினத்தைக் காணமுடிகிறது. சடையும் தாழ் சடையாக உள்ளது. கன்னங்கள் கதுப்புக் கன்னங்களாக தெரிகிறது. இந்தக் கன்னங்கள் நம்மை கிள்ளிவிடத் தூண்டும். ஆனால் நம்மால் அது முடியாது!, ஒருவேளை குருக்களுக்கு வேண்டுமானால் அந்த தீண்டுதல் பாக்யம் கிடைக்கலாம். திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில் இத்தலமும் ஒன்றாகவும், நடராஜர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ள தலமாகவும், சிறப்புத் தாண்டவ தலங்களில் ஒன்றாகவும் கூறப்படுகிறது.
இச்சபையிலுள்ள பெரும்பாலான தெய்வங்களும், ஏனைய சிற்பங்களும் பெரும்பாலும் நடனமாடும் நிலையிலேயே இருக்கின்றன. இந்த கனக சபையில் இருக்கும் சிற்பங்களுக்கான கற்களை மருதமலை மலையிலிருந்து கொண்டு வந்து செய்வித்திருக்கின்றனர். கனகசபையில் முப்பத்தாறு தத்துவங்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் முப்பத்தாறு தூண்கள் உள்ளன.
அபிஷேகம்
நடராஜருக்கு ஆண்டில் ஆறுமுறை மட்டும் அபிஷேகம் செய்யப்படும். ஆனால் கோவை திருப்பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் பத்துமுறை அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இங்கிருக்கும் இவர் ஆடி முடிக்கும் தருவாயில் உள்ள நடராஜர். இந்த நடராஜரின் குறும்புப் பார்வை மிக அழகாக இருக்கும். சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இத்தலம் கருதப்படுகிறது.
தட்சிண கைலாயம்
கயிலாயத்தில், உமாதேவி சமேதராக சிவபெருமான் இருக்கையில், நந்தி பகவான் ஈசனிடத்தில் சுவாமி! தாங்கள் எழுந்தருளியுள்ள தலங்களுள் இந்தக் கயிலாயத்திற்கு நிகரானது வேறெது? எது? என கேட்டார். அதற்கு பெருமான், பதில் கூறிய போது "உத்தர கயிலாயம், மத்திய கயிலாயம், தட்சிண கயிலாயம்" என மூன்று உள்ளன. அவை ஒத்த சிறப்புடையவையே. ஆனால், எளியோரும் சென்று முக்தி அடையக்கூடிய திருத்தலச் சிறப்பு திருப்பேரூர் என்கிற தட்சிண கயிலாயத்துக்கே உண்டு என்று கூறினாராம்.
நாரதேசுவரம்
இந்த மகிமையைக் கேட்டுக் கொண்டிருந்த முருக பெருமான் அதை நாரதருக்கு உணர்த்தினார். நாரதர் உடனே கொங்கு நாடு சென்று வெள்ளியங்கிரி என்ற மலையில் உமாதேவியுடன் உறையும் சிவபெருமானைத் தரிசித்தாராம். (நாரதர் அன்று தரிசனம் செய்ததாகக் கூறப்படுகின்ற திருக்கோயில் பட்டீசுவரர் ஆலயத்துக்குச் சற்றுத் தொலைவில் அமைந்திருக்கின்றது.) இந்த தரிசனத்தை முடித்துக் கொண்ட நாரத முனிவர், காஞ்சிமா நதிக்கரை ஓரத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து, அதன் அபிஷேகத்துக்கென ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி ஆராதனை செய்தாராம். அதுவே நாரதேசுவரம் என்று இந்த ஆலயத்துக்குப் பெயர் உண்டாயிற்று.
நாரதர் வந்தடைந்த வெள்ளியங்கிரி முதலான ஐந்து மலைகள் அரண் போல் சூழ காஞ்சி நதி அம்புபோல் அவற்றை ஒட்டிப்பாய எழிலான இயற்கைச் சூழலின் மையத்தில் கோயில் கொண்டிருக்கிறார் பட்டீசுவரப் பெருமான்.
மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லி யோடும்
பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க
காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க
கோமனு நீதி வாழ்க குவலய முழுதும் வாழ்க.





IMG-20171226-WA0015


கோவை பட்டீசுவரர் திருக்கோயில் என்றாலே, எல்லோருக்கும் இறாவாப்பனை, பிறவாப்புளி என்று ஐம்பெரும் அதிசயங்கள் மட்டும் தான் தெரியும். ஆனால், கச்சியப்ப முனிவர் எழுதிய பேரூர் தலபுராணத்தில், முப்பத்தாறு படலங்கள் அதிசயமானவை.
திருப்பேரூர் தலபுராணத்தின் முப்பத்தாறு படலங்களைப் பற்றியே!
முப்பத்தாறு படலங்களும் நீண்ட நெடும் பதிவாக இருப்பதால், இப்படலத்தில் முக்கியமாக உள்ள படலங்களை உங்களுக்கு அளிக்கிறோம். திருப்பேரூர் புராணத்திலும், பண்டைச்சரித வரலாற்றிலும் இருக்கப்பெற்ற பற்பல பழஞ்சரித அடையாளங்களுக்குள்ளே இதுவரை மறைந்து போயினவை பல.
மறைத்து ஒழியச் செய்து சிதைக்கப்பட்டன சில. பாதுகாத்து வைத்திருந்த இடம் தெரியாது போயின பல. இவையெல்லாம் போக எஞ்சியுள்ள ஒரு சில கல்வெட்டுக்களும் கோயில்களின் அமைப்புகள் முதலியன சிலவற்றை மட்டுந்தான். அவற்றுள் இருக்கப்பெறும் மிகையானவொன்று......
ஆதி அரசமரம்
இந்த அரசமரம் இத்தலத்தில் தல விருட்சமாக இருந்தது. இவ்வரசமரம் காலவேசுவரத்தில் உள்ளது. இம்மரத்தடியினிலே சித்த மூர்த்திகளாக வந்த சிவபெருமான் சபை ஒன்றினை உண்டாக்கி அதில் கூத்தாடு தேவர் திருவுருவம் அமையும் வண்ணம் உண்டாக்கினார்.
"ஆதி லிங்கந் தனக்குவட கிழக்கி னெல்லை யடர்வினைகள்
காதி யிருந்த காலவனீச் சரத்துண் மூவ ருருவான
போதி நிழலிற் புக்கருளிப் பொருந்த மன்ற மெழுகவெனச்
சோதி மலர்ந்த திருவாயாற் சொன்னார் மன்ற மெழுந்ததே"
                        -(திருத்தப் படலம்.)
இதன்கீழ், பிரம்மா, விஷ்ணு, காலவர், துர்க்கை ஏனைத்தேவர்கள் முதலியோர் காணப் பங்குனி உத்திர நாளில் நடராசர் திருநடனம் செய்தருளினார். ஏனைய பல திருக்கோயில் தலங்களில் தலமரங்கள் இறந்துபட்டமை போலல்லாது நமது கோவை பேரூரிலே தல விருட்சத்தை இதுவரை உயிருடன் பார்க்கும் பேறு நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. கிடைத்த அற்புத பேற்றை பயன்பெறச் செய்யாமல் வீணே கழித்திருக்கிறோம்.
முன்பு மூன்று பெருங் கிளைகளுடன் இருந்த தல அரசமரம் பின்பு இரண்டு கிளைகள் முறிந்து போய்விட ஒரேயொரு கிளை மட்டுமே இருந்தன. இம்மரத்தடியில் ஸ்ரீ நடராசப் பெருமானைப் பங்குனி உத்திரத்தில் எழுந்தருளுவித்துத் திருநடனங் காணுதல் மிகப்பெரும் பயனைத் தரும் சிவ புண்ணியமாகும். இவ்விடத்தில் பெருமானை எழுந்தருளுவிக்க சிரமங் கருதிப் பிற்காலத்தவர் திருக்கோயிலுக்கு எதிரில் வேறு ஒரு அரசமரம் வைத்து, திருவிழாவை அங்கேயே இப்போதும் நடத்தி வருகிறார்கள்
வசிட்டலிங்கம்
காஞ்சி நதிக்கு வடபுறம் தனியாலயத்தில் வசிட்ட முனிவராற்றாபித்துப் பூசிக்கப் பெற்ற இம்மகாலிங்க மூர்த்தி மேற்படி ஆலயம் பழுதுபட்டிருந்தமையால், ஆற்றிற்கு இப்புறம் கொண்டு வரப்பெற்று அங்குள்ள அரசமரத்தடியில் ஸ்தாபிக்கப் பெற்றுள்ளது. இதற்கு முன்னிருந்த இடத்திலாதல் அது இயலாத போது பிரமகுண்டத்தின் (திருநீற்று மேட்டின்) அருகில் வேறிடத்திலாவது தனியாலயம் அமைத்துத் தாபித்திருந்தால் பெரும் சிவபுண்ணியம் ஆகியிருக்கும். ஆனால், அவ்வாறு இல்லாது விட்டுவிட்டனர்.
திருநீற்று மேடு
இதன் பெருமை பலவாறாகும். புராணத்திலே இத்திருநீற்று மேட்டைப் பற்றி கூறப்பட்டிருந்தும், யாரும் பாதுகாவல் செய்யாமல் விட்டிருந்தனர். இத்திருநீற்று மேட்டினை செப்பனிட்டுத் தூய இடமாய் வைத்திருந்தால் பெரும் புண்ணியம் பெற்றிருக்கும். ஆனால், யாரும் அவ்விதம் செய்யவில்லை.
இத்திருநீற்று மேட்டில் வெட்டி எடுக்கும் வெண்ணிறமான மண்ணே அப்போது திருப்பேரூர் திருக்கோயிலில் விபூதியாக வழங்கப்பட்டு வந்தது. இத்திருநீற்று மேட்டின் விபூதியை அப்போது வாங்கித் தரித்தவர்கள், பிரமராட்சசம், மலம், நோய்கள், பாவங்கள் நீங்கிப் பரிசுத்தம் பெற்றார்களெனப் புராணத்தில் இருக்கிறது.
மகாலிங்க மூர்த்தி
நாரதர், விசுவாமித்திரர், முசுகுந்தன், கரிகாற்சோழன் முதலியோர் ஸ்தாபித்து ஆன்மார்த்தமாகப் பூசித்தனவாகப் புராணத்திற் கூறப்படும் மகாலிங்க மூர்த்திகள் யாவையென சிலகாலமாய் தெரியவில்லை. பட்டி விநாயகர் கோயிலின் முன்புறம் அப்புறமாகக் கேட்பாரற்று ஒரு அரசமரத்தடியில் நடப்பட்டிருந்த இரண்டு மூர்த்திகளே இம்மகாலிங்க மூர்த்திகளென மனம் நினைக்கிறது. 
பன்னீர் மரம்
பட்டி நாயகராகிய மூலலிங்கப் பெருமானார் இக்கலியுக காலத்தில் பன்னீர் மரத்தடியில் வீற்றிருப்பதைக் காண்கிறோம். ஆதிலிங்க மூர்த்திக்குப் பின்புறம் பன்னீர் மரம் வளர்த்தி நிழல் தருகிறது.
மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லி யோடும்
பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க
காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க
கோமனு நீதி வாழ்க குவலய முழுதும் வாழ்க




IMG-20171226-WA0015


திருப்பேரூர் திருக்கோயிலில் கனக சபையை திருமலைநாயக்க மன்னனின் சகோதரன் அளகாத்திரி நாயக்கன் என்பவன் கட்டினான். 1625 முதல் 1659 வரை முப்பத்து நான்கு வருடங்களாகக் கட்டப்பட்டு வந்தன. கனகசபையில் பிரம்மா, திருமால், அதிஉக்ரகாளி, சுந்தரர் ஆகியோருக்காகவும் நந்தியின் தவத்திற்காகவும் சிதம்பரத்தில் நடனமாடியது போலவே இங்கும் ஆனந்த நடனமாடினார் இறைவன். அதனால்தான் இத்தலம் "மேலைச்சிதம்பரம்" என்று அழைக்கப்படுகிறது.  
இன்றும் நடராஜரின் நுழைவு வாயிலில் இரண்டாவது பஞ்சாட்சர படியினை தாண்டும்போது கோமுனி, பட்டிமுனி என்னும் பெயரில் பிரம்மாவும், திருமாலும் இருப்பதாக ஐதீகம். கனகசபையின் முதல் பஞ்சாட்சர படிகளைத் தாண்டினால் இரண்டு பக்கமும் பிரம்மாண்டமான எட்டு சிலைகள், கல்சங்கிலி, சுழல்தாமரை போன்ற அற்புதங்கள் அமைந்துள்ளன. இதைத் தாண்டினால் இரண்டாவது பஞ்சாட்சரப்படியின் அருகே யாளியின் வாயும், யானையின் துதிக்கையும் ஒன்றாக இணைவது போன்ற சிலை, அதற்கும் அடுத்தாற்போல குதிரை வீரன்சிலை ஒருபக்கத்தில் முழுதானதாகவும், மற்றொரு பக்கம் உடைந்தனவாகவும் காணப்படுகின்றது.
இதற்கடுத்து தாண்டினால் சந்தன சிற்பங்களும் மூன்றாவது பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் அழகான நடராஜரும், அவரோடு சிவகாமியம்மையுடன் அழகு அருளாகக் காட்சி அளிக்கின்றனர். நடராஜரின் மண்டபத்தை நான்கு வேதங்களே நான்கு தூண்களாக மாறி தாங்குவதாக ஐதீகம். இங்குள்ள தூண்களை சற்று நன்றாகக் கவனித்துப் பார்த்தோமானால், அத்தூண்கள் யாவும் இறைவனுக்கு பணிந்த நிலையில், தூண்கள் சற்றே சாய்ந்த நிலையிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.
ஆனந்த தாண்டவமாடும் இறைவன் இடதுகையில் அக்னி, வீசுகிற ஹஸ்தம், வலதுகையில் உடுக்கை, அபயஹஸ்தம், ஆடி அடங்கப்போகும் நிலையில் தூக்கிய திருவடியை சற்றே தாழ்ந்த நிலையில் காட்டியருள்கிறார். சடையும் தாழ் சடையாக காணப்படுகின்றது. கன்னங்கள் கதுப்புக் கன்னங்களாகவும், அக்கன்னங்களைக் வணங்கி கிள்ளிப் பணியத் தோன்றும் நமக்கு. ஆனால், அது நம்மால் முடியாது! ஒரு வேளை எம்பெருமானை அனுதினமும் ஆராதித்து பூசை புணர்மானம் செய்யும் அர்ச்சகருக்கு வேனுமானால் இது அருளாகலாம் எனத் தோன்றுகிறது.
முயலகன் மீது ஊன்றிய திருவடிவில் வார்க்கப்பட்ட நிலையில் சலங்கை மிளிர்ந்து அழகு சேர்க்கிறது. சபாபதி, அழகிய திருச்சிற்றம்பலநாதர், கூத்தப்பிரான் என்பவை நடராஜரின் வேறு பெயர்களாகும். சிவகாமி அம்மையார் வலது கையில் நீலோத்பவ மலரோடு இடதுகை டோலஹஸ்தம் கொண்டு் நின்ற நிலையில் காட்சியளிக்கின்றாள். திருவாதிரை சிறப்பாக கொண்டாடப்படும் தலங்களில், இத்தலமும் ஒன்று. 
இந்த கனகசபையின் நடராஜர் சந்நிதி விசேஷமாக அமைந்துள்ள தலமாக இருப்பதால், சிறப்புத்தாண்டவ தலங்களில் இதுவும் ஒன்றாகவும் கூறப்படுகிறது. இச்சபையிலுள்ள பெரும்பாலான தெய்வங்களும், ஏனைய சிற்பங்களும் பெரும்பாலும் நடனமாடும் நிலையிலேயே இருப்பதை கூர்ந்து நோக்கத் தக்கது. சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய இந்த கனக சபையை உருவாக்க மருதமலையிலிருந்து கற்களை கொண்டு வந்து சிற்பங்களை இருபத்தெட்டு வருடங்களாக அரும் பாடுபட்டு செய்தவர் கம்பனாச்சாரி ஆவார்.
திருக்கோயில் திருப்பணிகளுக்குண்டான சிற்ப வேலைப்பாடுகள் இருபத்தெட்டு வருடங்களாக நடந்து வந்தது. கும்பாபிஷேக நாள் குறிக்க வேண்டியதிருப்பதால் திருப்பணிகள் கட்டிட சிற்பங்களின் பணிகள் விரைவாக முடுக்கி விட்டிருந்தனர். இதற்காக செய்விக்கப்பட்டிருந்த சிற்பங்களை பார்வையிட மன்னன் கம்பனாச்சாரியாரோடு ஏராளமான ஊர் பொது மக்களும் வரிசையாகப் பார்வையிட்டு வந்தனர். வரிசையாக ஒவ்வொரு சிலையின் கலை நயத்தையும் பார்வையிட்டு வந்து கொண்டிருந்த போது...........
அந்தச் சமயத்தில்தான் ஒரு இளைஞன் கத்தினான். சத்தமான குரலொன்று கேட்கிறதே? என்னவென்று சிலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் பார்வை தடை ஏற்பட்டு, அனைவரும் குரல் வந்த திசையை நோக்கினார்கள். அப்போது, இவர்களை நோக்கி நடுத்தர வயதுடைய இளைஞனொருவன் வந்தான். வந்தவன் இங்கேயிருக்கும் இரண்டுபக்க குதிரை வீரன் தூண்களின் ஒன்றில் ஒரு பக்கத்தில் குறையொன்று உள்ளது என்றான். எனவே இத்தூணை நிர்மாணத்திற்கு எடுத்துக் கொள்ளுதல் கூடாதென்றான்.
"நீ யார்?..... இக்குதிரை வீரன் சிலையில் குறையுள்ளதென உனக்கெப்படித் தெரியும். அந்தக் குறையை உன்னால உணர்த்திக் காட்ட முடியுமா? 
நான் சிற்ப சாஸ்திரத்தை முழுமையாக கற்றுத் தேர்ந்தவன். என் வாழ்நாளில் சிற்பங்களில் குறைகொண்ட சிலை ஒன்றேனும் வடித்ததில்லை என்று கம்பனாச்சாரியார் கூறினார். "குறையுளது!...குறையுளது!" வீரன் அமர்ந்திருக்கும் குதிரைவீரன் சிலையில் குறை உள்ளது. அந்தக் குறையை நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என ஆவேசப்பட்டான் அவ்விளைஞன். 

இளைஞன் குரலை உயர்த்த ஆவேசமாகப் பேசியது, கம்பனாச்சாரியாருக்கு என்னவோ போலாகி விட்டது. என்னடா இவன் என் அனுபவம் இவனுக்கு வயசாகக் கூட இருக்காது! இவன் என் சிற்பத்தில் என்ன குறையைக் கண்டிருப்பான் அதையும் பார்த்துவிடலாமென நினைத்து,...........
'சரி! குறையை நீ நிரூபித்துக் காட்ட வேண்டும்!.. தவறினால் உன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நான் விளைவேன் என்று சொன்னார்.
"தாரளமாக! இதோ நிரூபிக்கிறேன்! எனச் சொன்னவன், சந்தனத்தையும் உளியையும் கொண்டு வரச்செய்தான். சந்தனத்தை எடுத்து குதிரை வீரன் சிலையில் பூசி மெழுகினான். சிறிது நேரம் பொறுத்திருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டான். குதிரைவீரன் சிலையின் மீது பூசிய சந்தனமனைத்தும் சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தவிர, மற்ற இடத்திலுள்ள சந்தனம் அனைத்தும் உலர்ந்து போயிருந்தது.
உலராத சந்தனம் இருந்த இடத்தினை மட்டும் விலக்கிவிட்டு, மற்ற இடங்களிலிருந்த சந்தனத்தை நீக்கிய அந்த இளைஞன், உளியை எடுத்து கம்பனாச்சாரியாரின் கைகளில் கொடுத்தவன், 'இதோ! இந்த உலரா நிலையிலுள்ள இடத்தில்தான் குறையுள்ளது. உளியினால் இவ்விடம் கொண்டு  உடையுங்களென்றான் இளைஞன்.
கம்பனாச்சாரியாரும் இளைஞன் சுட்டிய இடத்தில் ஓங்கித் தட்டினார்.
பொதக்க்க்.........க்
அதிகமாக உளிக்கு வேலையில்லை. இரு அடிகள் வாங்கிய அத்தூணின்கண் உள்ள அவ்விடத்திலிருந்து கொட்டாங்கச்சி அளவில் கல் பெயர்ந்து விழுந்தது. அதே சமயம் கல்தூணின் உள்ளிருந்து குபுக்-கென தேரையொன்று வெளியே குதித்தோடிப் போனது. 
(இதுதான் கல்லுக்குள் தேரை. சிற்ப வல்லுநர்களுக்கு சிற்ப சிலைகள் வடிக்க எப்படிப்பட்ட கற்பாறைகள் தேவையென அவர்கள் அறிவார்கள். அதுபோலவே தேரையிருக்கும் கற்பாறையையும் அச்சிற்ப வல்லுநர்கள் அறிவார்கள்.)
முழுமையாக சிற்ப சாஸ்திரம் கற்றுவிட்டோமென்றிருந்த கம்பனாச்சாரியாரின் ஆளுமை பணிந்தன. முகம் இறுக முன்னின்றிருந்த யாரையும் காண மறுத்து தலை கவிழ்ந்தார் கம்பனாச்சாரியார். அவர் கைகளிலிருந்த உளி விடுதலைப் பெற்று நிலத்தில் கல்லில் பொத்தென விழுந்து சிணுங்கியது. கம்பனாச்சாரியாரின் மனதெல்லாம் வலி! நடுக்கம்! உளி நீங்கப் பெற்ற கைகளால் சட்டென பக்கத்திலிருந்த வாளை எடுத்து தன் கைகளைத் தானே வெட்டிக் கொண்டார் கம்பனாச்சாரியார். 
இச்சம்பவம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் இன்றளவும் நடராஜர் சந்நிதிக்கு இடது புறம் சந்தனம் அரைக்கும் இடத்திற்கு அருகே உடைந்த குதிரை வீரன் சிலையின் மிச்சத்தினை, நாம் சென்றால் காணலாம். இதுதான் தேரை குதித்தோடிய குதிரை மீதமர்ந்த வீரன் சிலை பாதியளவு உள்ள தூணாகும். பின்பு விசாரணையில், தூணில் குறை கண்டு சொன்ன இளைஞன், கம்பனாச்சாரியாரின் உறவானவர்களில் ஒருவனெனத் தெரிந்தது.
மேலும் இங்கு கம்பனாச்சாரியார் வடித்த சிற்பத் தூண்கள் அணைத்தும் சிற்பத் துறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய நுன்னுற்பங்கள் நிறைந்து அழகு தருவனவாகும். அவை கனகசபை நடராஜரின் சந்நிதி முன் எட்டு அழகிய சிற்பங்களாக உள்ளன. திருக்கோயில் வந்து தூண்களை பார்வையிடும் பக்தர்கள், அதனின் கலை நுன் வேலைப்பாடுகளைக் கண்டு வியந்து அச்சிலைகளை, தொடுவன அதிகரித்த வண்ணமிருந்தது. இதனால், ஆலய நிர்வாகம் இதைப் பாதுகாக்கும் பொருட்டு, பொக்கிஷமாக பாதுகாத்திட எட்டுசிலைகளுக்கும் சன்னக்கம்பி வேலியமைத்து பார்வைக்குத் தெரியுமாறும் அழகுறச் செய்து வைத்திருக்கிறார்கள்.
இக்கனக சபையை எத்தனை முறை சென்று பார்த்தாலும் பார்த்த பரவசம் நீங்கப் பெறாது. அத்தனை அழகுநுனி வேலைப்பாடுகள் அமைந்தவை. திரும்ப திரும்பச் சென்று பார்க்க ஆவலுண்டாகும். அத்தனை நேர்த்தியானவை! பேரூரைப் பற்றிய நூல்களில் தலையாயது கச்சியப்ப முனிவர் பாடிய பேரூர் புராணமாகும். இவர் முப்பத்தாறு தத்துவங்களைக் கொண்டே நூலை யாத்துள்ளார்.
இவர் இயற்றிய தலபுராண நூலில் முப்பத்தாறு படலமாக காட்டியுள்ளார். இம்முப்பத்தாறு படலமும் விரிவாக விளக்கமாக இத்தொடரில் கொடுக்க நாள்கள் போதாது என்பதால், முக்கிய படலங்கள் மட்டுமே வரும். நடராசப்பெருமான் கோயில் மண்டபத்திலும் முப்பத்தாறு தூண்கள் இருக்கின்றன. புராணப் படலத்திலுள்ள முப்பத்தாறும், மண்டபத்திலுள்ள தூண்கள் முப்பத்தாறும் இவ்விரண்டுக்கும் ஏதோ தத்துவத் தொடர்புடைவன போலும். 
'கங்கையும் பணிவெண்டிங்களும்' எனத் தொடக்கமாகும் விநாயகர் வாழ்த்தில் கூட முப்பத்தாறு சொற்கள்தான் இருக்கிறது. கனக சபையில் "கோமுனி" "பட்டிமுனி" என இருவருக்காக ஆடிய பாதத்தோடு விளங்கும் நடராஜர் வடிவம் மிக அழகோ அழகு. விமானம், வடிக்கப்பட்ட தாமரை மலர், கல்லாலான சங்கிலிகள், நம்மை ஆச்சரியமூட்டுகின்றன. சிற்பிகளின் உளிகள் கல்லை இழக்கிக் கரைந்துருக்கி கல்சங்கிலியாக உருவாக்கியிருப்பது நம்மை ஆச்சர்யமாகப் பார்க்க வைக்கின்றன.
மாமறை முனிவர் வாழ்க மரகத வல்லி யோடும்
பாமலி புலவர் போற்றும் பட்டிநா யகனார் வாழ்க
காமரு வெள்ளி மன்றிற் கண்ணுத னடனம் வாழ்க
கோமனு நீதி வாழ்க குவலய முழுதும் வாழ்க.



IMG-20180122-WA0087


திருப்பேரூரில் காலவ முனிவர் முதலானோர் சிவபிரானின் திருநடனத்தினைக் காண நினைந்து அதற்குண்டான குறித்த காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படியான காலத்தை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கோவை திருப்பேரூர் காலவேசுரத்தில் அரசமரத்தடியில் வெள்ளியம்பலம் உள்ளதாகச் சிவபெருமான் அருளியபடி அதனைக் காணப்பெற கோமுனிவர் தியானித்தார். 
அத்தியானத்தின் போது ஒருநாள், காலையில் பழைய அம்பலத்தைப் பரமசிவன் மறைத்தபடியால், அவ்விடத்திலே ஒரு சபையையும் அதிலே நடராஜர் திருவுருவத்தையும் அமைத்து வழிபடுவாயாக" என்று அசரீரி வாக்கு ஒலித்தது. 
அக்கணத்திலேயே கோமுனிவர் விசுவ கம்மியனை வரவழைத்தார். சபையை நிருவகிக்கும் இடம் புலப்படாது திகைத்திருக்கும் பொழுது, சிவபிரான் சித்தராகத் திருவுரும் எடுத்துக்கொண்டு பற்பல அற்புதங்களைச் செய்தருளினார். 
அந்த சித்தரைக் கோமுனிவர் முதலிய மூவரும் அடுத்து வினவிச் சிவபெருமான் திருநடனஞ் செய்கின்ற திருச்சபையைத் தெரிவித்தீர் என்றால், வல்லீராயன் நீரே முற்று முணர்ந்த பெற்றவரெனச் சொல்ல............. 
சித்தேசர் ஆதிலிங்க மூர்த்திக்கு வடகிழக்கில், திரிமூர்த்தியுருவான அரசடி நிழலில் வந்து, "வெள்ளியம்பலம் எழுக" என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே வெள்ளியம்பலம் பொள்ளென எழுந்தது. அப்பொழுது தேவர்கள் கற்பகப் பூமாரி பொழிந்தனர். பூமாரி பொழிந்த வேளையில் கோமுனிவர் முதலியோர் சித்தமூர்த்தியை வணங்கி "தேவரீர் செய்தருளிய தெய்வ சபைக்கேற்பத் தேவர் பிரான் திருவுருவஞ் செய்தருளிவீராக" என்றதும், சித்தேசர் திருவுளமகிழ்ந்து திருச்சபையைச் சூழத் திரைகோலச் செய்து, அதனுள்ளே ஒரு முகூர்த்தமளவும் அமர்ந்து, இரண்டாம் முகூர்த்தத்திலே திரையோடும் சித்தேசர் மறைந்தருளினார். 
பின்பு நடராஜர் திருவுருவோடு சிவகாமியம்மை திருவுருவையும் அத்திருச் சபையிலே கோமுனிவர் முதலிய மூவருந்தேவர்கள் யாவரும் தரிசித்தார்கள். பின்னர் அம்முனிவர்கள் மூவருஞ் சிவாகம விதிப்படி உள்ள தூய்மைகள் செய்து, ஞான நடராஜரோடு சிவகாமியம்மையும் தினந்தோறும் ஆறு காலமும் வழிபாடு செய்து வந்தனர். இவ்விதம் நிகழுங்கால், விசுவகம்மியனால் ஆலயங்கள் அமைத்துப் பஞ்சமூர்த்திகளையும் பரிவார தேவதைகளையும் பிரதிட்டை பண்ணித் திருவிழாச் செய்யத் தொடங்கி, பங்குனி மாதத்து வளர்பிறைச் சஷ்டி திதியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றி,
ஒன்பது நாள் தேர்விழா நடத்தினார்கள். 
பத்தாம் நாளான உத்திரத்தன்று வெள்ளியம்பலத்திற்கு எதிரிலுள்ள மண்டபத்திலே அனைவரும் நிற்க கோமுனிவர் முதலிய மூவரும் அருகே நிற்க, நாரதமுனிவரும் தும்புரு முனிவரும் வீணாகாணஞ் செய்தனர். அகத்திய மகாமுனிவரும் ஆனந்தமுனிவரும் தாளம் ஒத்தவும், மந்து நாதரும் நந்தி பெருமானும் மத்தளத்தை முழக்கினர். திருத்தொண்டர்கள் சிரமீது திருக்கைகளைக் கூப்பி அரகர முழக்கஞ் செய்து நடராஜப் பெருமானின் போற்றிப் பரவினர். அகத்தியர் முனிவர் மற்றும் முனிவர்கள் இசையெழுப்பினர். தொண்டர்கள் அரகர வென முழக்க காணமிட்டனர். 
தனது திருமேனியின் ஒரு பாகத்திலே உமா தேவியார் அமர்ந்திருக்கவும், ஒரு கையில் உடுக்கை ஒலிக்க, மற்றொரு கையில் அக்கினி விளங்க, வேறொரு கை வரதமாக, பிறிதொரு கை அபயமாக, திரோதனத் திருவடியை முயலகன் முதுகிற் பதித்து, அருத்திருவடியைக் குஞ்சிதமுற வீசி, திருக்கண்களாற் காளி தேவியின் முகத்தை நோக்கி, ஞான நடராஜர் வெள்ளியம்பலத்திலே "திருநிருத்தஞ்" செய்தருளினார். 
செய்தருளியும் திருவடிக் கண்ணதாகிய மறைச் சிலம்பொலியும், வாத்தியங்களின் ஒலியுஞ் செவிப் புலப்பட்டனவன்றி, திருநடனக் காட்சி கண்ணுக்குப் புலப்படாமையால், அங்கு நின்ற அனைவரும் ஏங்கி இரந்து துதித்தனர், போற்றினர் போற்றித் துதித்த மாத்திரத்தில், ஊன நடனஞ் செய்து எவ்வகையுயிர்க்கும் ஆணவமல வலியை மாற்றி ஞான நடனஞ் செய்தருளும் நணராஜர் ஞான நோக்கத்தைத் தந்தருளலும், அஞ்ஞான நீங்கி, மூன்று முனிவரர் முதலிய யாவரும் தாண்டவத்தின் ஆனந்தத்தைக் கண்களாற் கண்டு, மொண்டு மொண்டு உண்டு, கழித்து பேருவகையுற்று ஆனந்தக் கூத்தாடினார்கள். 
சிவபெருமான் செய்தருளிய நாடக வேகத்தினால், ஆபரணமாக அணிந்த பாம்புகள் விடத்தை உமிழ, அது புலித்தோல் போர்த்தாற்போலத் திருமேனி முழுவதும் வரிவரியாக ஒழுகியது. அவ்விடத்தின் வெப்பத்தினால், தேவர்கள் முதலிய யாவரும் அஞ்சி பசியோடு தாக சோகங்கள் அடைந்தனர். 
உமாதேவியார் அன்னபூரணியை உண்டாக்கிப் பசியைத் தணித்தார். முருகக் கடவுள் நீர் வேட்கையை கொண்டு வந்து தந்து ஒழித்தனர். விநாயகக் கடவுள் உடம்பிலுற்ற வெப்பத்தைத் துதிக்கையினால் நீர் துளிக்கும் வண்ணங் காற்றினை வீசித் துவைத்து ஆற்றியருளினார். பின்பு கூத்தப்பிரான் கருணை கூர்ந்து காலவ முனிவருக்கு அன்னார் விரும்பிய வண்ணம் விதேக முத்தியையளித்தனர். 
பிரமாவை நோக்கி, "நீ பழைய வடிவோடு படைப்பினைச் செய்து பட்டிமுனி அம்சத்தால் நமது நிருத்தத்தைத் தரிசிப்பாயாக" என்றும், விட்டுணுவை நோக்கி, "நீயும் பண்டையுருக்கொடு பாற்கடலிற் பள்ளிகொண்டு காத்தற் றொழில் செய்து கோமுனி யம்சத்தால், நிருத்த தரிசனஞ் செய்வாயாக" என்றும், மற்றோயோரை நோக்கி, "இத்திருப்பேரூரிலே வசிப்போர்க்கும், இத்தலத்தைத் தரிசித்தோர்க்கும், நமது திருக்கூத்தைக் கண்டோர்க்கும் அறம் பொருள் இன்பம் வீடென்னும் நால்வகை உறுதிப் பொருள்களுஞ் சிந்திக்கக் கடவன" என்றும் திருவாய் மலர்ந்தருளினார். 
பின்பு வெள்ளியங்கிரிமீதுள்ள வெள்ளியம்பலத்திலும், உமா தேவியார் வேணவாவோடு காணும் வண்ணம் சிவபெருமான் திருநடனஞ் செய்தருளினார். 
- கோவை கு. கருப்பசாமி

No comments:

Post a Comment