Sunday 7 January 2018

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 16

திருக்கொட்டையூர்
தருங்கோடி ரண்டினுடன் இரண்டுள வெண்
குஞ்சரமுந் தருவும் தேனும்
மருங்கோடி அலைபுரளும் பாற்கடலும்
மணிப் பணமெல் லணையும் பூமேல்
அருங்கோடி கலைவல்ல மாதுபுணர்
முதல் வாழ்வும் அகலா இன்பும்
பெருங்கோடி ஈச்சுரத்துள் கோடி விநா
யகன் மலர்த்தாள் பேணுவோர்க்கே.
- தல புராணம்
பொருள்: பெருமைமிகு கோடீச்சுரத்தில் உறையும் கோடி விநாயகரின் மலர்ப்பதங்களை வழிபடுவோர்க்கு, நான்கு கொம்புகள் கொண்ட வெள்ளை யானையையும் (ஐராவதம்), கற்பகத் தருவையும், காமதேனுவையும் கொடுப்பார். அலைபுரளும் பாற்கடலையும், மணிகள் பொருந்திய ஆதிசேஷனின் படமாகிய படுக்கையையும் (வைகுண்ட வாழ்வையும்) கொடுப்பார். தாமரை மலர் மேல் வாழும் சகலகலாவல்லியின் முதன்மையான கல்விச் செல்வ வாழ்வை யும் கொடுப்பார். முடிவில்லாத இன்பமாகிய வீடுபேற்றையும் தருவார் (ஆதலால், நெஞ்சமே... அவரைத் தஞ்சம் அடைக!).
மயமலைச் சாரலில், பத்திரயோகி என்ற முனிவர் தவம் இருந்தார். அரம்பை முதலானவர்களாலும் கலைக்கமுடியாத கடும் தவம் அது. இந்த நிலையில், திரிகர்த்த தேசத்தின் இளவரசன் சுருசி என்பவன் வேட்டையாடிய களைப்புடன், முனிவரது பர்ணசாலையை அடைந்தான். சிவயோகத்தில் இருந்த முனிவர், அவன் வரவை உணரவில்லை. ஆனால் இளவரசனோ, முனிவர் தன்னை அவமதித்ததாகக் கருதி, கோபம் கொண்டான்.
காட்டில் புலி அடித்து இறந்து கிடந்த ஒருவனது உடம்பின் மாமிசத்தை எடுத்து வந்து, முனிவர் முன்பு குவித்து வைத்தான். நிஷ்டை கலைந்து விழித்தெழுந்த யோகி, கடும் கோபம் கொண்டார். பிசாசாக மாறும்படி இளவரசனை சபித்தார்.
முனிவரின் கோபம், அவரையும் பாதித்தது. அவரது தவ வலிமை குன்றியது. இதனால் வருந்தியவர், பரிகாரம் தேட முற்பட்டார். 'கோடி தலங்களுக்குச் செல்வேன்; கோடி லிங்கங்களைத் தரிசிப்பேன்’ என உறுதி பூண்டார். அதன்படி, பல்வேறு தலங்களுக்குச் சென்று மூர்த்தி, தலம், தீர்த்தம் என முறையாக வழிபட்டார். அவ்வாறு திருக்கொட்டையூருக்கும் வந்தார்.
ஆத்திரி முனிவரின் மைந்தரான ஆத்ரேயர், இந்தத் தலத்தில் கொட்டைச் செடியின் கீழிருந்து தவமியற்றினார். கொட்டைச் செடியை 'ஹேரண்டம்’ என்பார்கள். எனவே, இவருக்கு ஹேரண்ட முனிவர் என்ற பெயரும் உண்டு. ஒருமுறை, காவிரி நதியானது திருவலஞ்சுழி தலத்துக்கு அருகில் பிலத்துக்குள் (பூமிக்கு அடியில்) சென்றுவிட்டது. அந்நாட்டு அரசன் அரித்வஜன், இந்த ஹேரண்ட முனிவரைத் தரிசித்து, பிலத்தில் புகுந்த காவிரியை வெளிப்படுத்த வேண்டினான். அதையேற்று, பிலத்தில் இறங்கினார் முனிவர். காவிரியாள் மீண்டும் வெளிப்பட்டாள். முனிவரும் வெளி வந்தார். தேவர்களும் ரிஷிகளும் அரசனும் ஹேரண்ட முனிவரை வணங்கிப் போற்றினர். அதைத் தொடர்ந்து, ஹேரண்ட முனிவர் திருவலஞ்சுழி கபர்தீஸ்வர லிங்கத்தின் பக்கத்தில் அமர்ந்தார்.
கும்பகோணம்- சுவாமிமலை செல்லும் வழியில், மேலைக் காவிரிக்கு அடுத்து அமைந்த திருக்கொட்டையூர், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிப் பரவியுள்ளார். இங்கே ஹேரண்ட முனிவர் சிவபூஜைக்காக உண் டாக்கிய தீர்த்தம், அமுதக் கிணறாகத் திகழ்கிறது; அமுதமயமாக நீர் ஊறுமாதலால், இப்படியரு பெயராம். முனிவர் சிவபூஜை செய்யும் நிலையில் அமைந்த திருவுருவமும் இங்குள்ளது.
அற்புதமான இந்தத் தலத்தை அடைந்த பத்திரயோகி, அமுதக் கிணற்றில் நீராடி, சிவனாரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு, கோயிலை வலம் வந்து வணங்கினார். அப்போது, ஓர் அசரீரி ஒலித்தது. 'பத்திரயோகி... கோடித் தலங்களுக்குச் சென்று கும்பிட வேண்டாம். கால் ஓய நடந்து தேய வேண்டாம். இந்தத் தலமே கோடி தலங்களைத் தரிசித்த பெரும்பேற்றைத் தரும். இந்த லிங்கமே கோடிலிங்கம்; இந்தத் தீர்த்தமே கோடி தீர்த்தம்.  இங்கேயே இருப்பாயாக! இன்னும் பல அதிசயங்களைக் காண்பாய்’ என்றது அசரீரி.
பத்திரயோகியார் பேரானந்தம் அடைந்தார். அம்மையப்பனைப் போற்றி வணங்கினார். இங்கே விநாயகர், முருகன், அம்மையப்பர், சண்டேசர் ஆகிய அனைவரும் கோடி உருவில் காட்சியளித்தனர். எனவே, இங்குள்ள தெய்வ மூர்த்திகளுக்கு... ஸ்ரீகோடி விநாயகர், ஸ்ரீகோடி முருகர், ஸ்ரீகோடீச்வரர், ஸ்ரீகோடி சண்டேசர் எனவும், திருக்கோயிலுக்கு கோடீச்வரம் எனவும் பெயர் வந்தது.
பலாப் பழம் போன்று, சிவலிங்கத் திருமேனி முழுவதும் முள் வடிவமான சிவலிங்கங்கள் பல உள்ளன. கோடி விநாயகர் திருமேனியிலும் பல விநாயகர் வடிவங்களைக் காணலாம். பத்திரயோகியார், ஸ்ரீகோடீச்வரரை வழிபட்டு வந்த காலத்தில்... அம்பிகை, பந்தாடியபடியே இந்தத் தலத்தை அடைந்ததால், ஸ்ரீபந்தாடு நாயகி எனப் பெயர் பெற்றாள். சிவயோகியார் பல காலம் ஸ்ரீகோடீஸ்வரரை வழிபட்டு, வீடுபேறு பெற்றார்.
இந்த முனிவரின் சாபத்தால் இளவரசன் பிசாசன் ஆனதால், மிகவும் மனம் வருந்திய அவன் தந்தை, தன் மகனை அழைத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை கிளம்பினார். குலகுரு வியாசரின் அறிவுரைப்படி இந்தத் தலத்துக்கு வந்து, காவிரி மற்றும் கோடி தீர்த்தத்திலும் நீராடி வழிபட்டார். அதன் பலனாக சாபம் நீங்கி, நலம் பெற்றான் இளவரசன். கோடீச்வரப் பெருமானுக்குக் கோயில் கட்டி, நித்திய நைமித் திக பூஜைகளைச் செய்ய ஏற்பாடு செய்தான்.
இந்தத் தலத்தில் பஞ்ச (ஐந்து) மூர்த்திகளும் கோடி வடிவம் கொண்டமையால், இங்கு வந்து அந்த மூர்த்திகளைத் தரிசிப்பவர்கள் கோடி தலங்களைத் தரிசித்த பலனை அடைவர். இங்கு செய்யப்படும் புண்ணியம், மற்ற தலங்களில் செய்த புண்ணியத்தைவிட கோடி மடங்காகும் என்பார்கள் பெரியோர்கள். இங்குள்ள ஸ்ரீகோடி விநாயகரை வழிபட, கோடி தலங்களுக்குச் சென்று கோடி விநாயகர்களை வழிபட்ட பெரும் பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.
- பிள்ளையார் வருவார்...

No comments:

Post a Comment