Thursday 22 June 2017

அருள்மிகு. வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை, பசுபதிகோயில் – தஞ்சை



மூலவர் : வசிஷ்டேஸ்வரர்
 
அம்மன்/தாயார் : உலகநாயகியம்மை, மங்களாம்பிகை

தல விருட்சம் : முல்லை, வெண்செண்பகம், செவ்வந்தி

தீர்த்தம் : சக்கர தீர்த்தம், சூலதீர்த்தம்
 
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருத்தென்குடித்திட்டை, திட்டை

ஊர் : தென்குடித்திட்டை
 
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர்
 
🅱 தேவாரப்பதிகம்:🅱

கருவினால் அன்றியே கருவெலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவுசெய் தானிடம் பருவநாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினார் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே. - திருஞானசம்பந்தர்

🌼 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 15வது தலம்.

🅱 திருவிழாக்கள்:🅱
 
🍁 மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

 🍁 வருடந்தோறும் குருபெயர்ச்சி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
🅱 தல சிறப்பு:🅱
 
🦋 இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🦋 சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார்.

🦋 உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார்.

🦋 மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 24 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும்.

🦋 சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில்  நின்றகோலத்தில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்..

🦋 இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ஸ்ரீவயம்பூதேஸ்வரர் என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் பசுபதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

🦋 அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.

🦋 கதிரவன் அதிபதியாக அமையவும், மேருமலையைச் சுற்றி வலம் வந்து உலகை ஒளி வீசிக் காக்கும்படியான வரத்தையும், ஆதிசேடன் பூமியை பூவாக எளிதில் தாங்கும் வல்லமையைப் பெற்ற தலம்.

🦋 வசிட்டர் பிரம்ம ஞானிகளுள் தலைசிறந்தவர் ஆனதும், காமதேனு புத்ரிகளாகிய நந்தினி, கமிலினி,பேறு பெற்றதும், பைரவர் கேத்திர தீர்த்த பாலகர் ஆனதும் இத்தலத்தில் தான்.

🦋 யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம்.

🦋 யமன் தென்திசைக்கு தலைவன் ஆனதும் இத்தலம் தான்.

🦋 யம தர்மன் சாப விமோஷனம் பெற்ற தலம் இது.

🦋 சனீஸ்வரன் நவ கோள்களில் ஒன்றாக விளங்கும்  அருள் பெற்றது இத் தல சிவனை வேண்டியே.

🦋 பரசுராமர், கார்த்த வீர்யார்ச்சுனன், முருகன், பைரவர் போன்றோர் வழிபட்ட திருக்கோவில் இது.

🦋  திருமால் மதுகடைபர்களை வெல்லும் ஆற்றல் பெற்றதும், பிரமன் உலகைப் படைக்கும் வல்லமையை அடைந்ததும் இத்தல சிவனின் அருளால் தான்.

🦋 அகவினி தேவர்கள் இந்திரன், வசிட்டர், கௌதமர் முதலானவர்களும் வழிபட்டிருக்கின்றனர்.

🦋 நான்கு வேதங்களும் தனித்தனியே வந்து முறையிட்டு வணங்கித்தொழுது தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்குக் காரணமாக நின்ற ஊர் தென்குடித் திட்டை.

🦋 இதை முன்னை நான்மறையவை முறை முறை குறையொடும் தன்னைதான் தொழுதெழ நின்றவன் என்ற திருஞான சம்பந்தர் வாக்கில் காணமுடிகிறது.

🦋 நவகிரகங்கள் ஒன்றுகூடி சிவனை வணங்கிய தலம்.

🦋 சனி பகவானுக்கு பரிகாரம் செய்யவும் உகந்த தலம்.

🦋  "ஒம் கம் நம்ஹ பிதாமகாயஞ" என்ற நவா க்ஷர மந்திரத்தை அகத்திய முனிவர் உபதேசித்த புண்ணிய தலம்.

🦋 ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல ஸ்லங்கள் மீண்டும் பிரளயத்தில் மூழ்கி பின் தோன்றின. ஆனால் இத்தலம் மட்டும் இன்றளவும் அழியாமல் தொடர்ந்து நிலைபெற்று வருகிறது.ஊழிக்காலத்திலும் அழியாதபெருமை உடையது இத்தலம்.

🦋 இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

🦋 சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 78 வது தேவாரத்தலம் ஆகும்.

🦋 நித்யாபிஷேகம் செய்வது வேறெங்கும் காண இயலாத சிறப்பு. சந்திரனின் வழிபாடாக இந்த அபிஷேகம் நிகழ்கிறது.
 
🅱 திறக்கும் நேரம்:🅱
 
🗝 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 வசிஷ்டேஸ்வரர் மும்மூர்த்திகளுக்கு சக்தியையும், ஞானத்தையும் அருளியவர்.

🌺 கால பைரவரின், பிரம்மஹத்தி தோஷம் நீக்கியவர்.

🌺 குரு பகவானுக்குத் தேவகுரு என்ற பதவியை அருளியவர்.

🌺 நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்களின் நடுவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் அமர்ந்து பஞ்ச லிங்கேஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

🌺 தவிர, தனக்கு இணையாக உயர்ந்த பீடத்தில் அன்னை சுகந்த குந்தளாம்பிகையை இருத்தியுள்ளார்.

🌺 பெண்களுக்கு மங்கள வாழ்வளிப்பதால் அம்பாள் மங்களாம்பிகை எனப் போற்றப்படுகிறாள்.

🌺 மேலும், விநாயகர், முருகர், ராஜகுரு, பைரவர் ஆகியோரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

🌺 குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது.

🌺 நவக்கிரகங்களில் சுபகாரகர் குருபகவான், தான் இருக்கும் இடம் மட்டுமின்றி; பார்க்கும் இடத்திலுள்ள மற்ற கிரகங்களின் தோஷத்தையும் போக்கும் வல்லமை பெற்றவர்.

🌺 தஞ்சை பெருவுடையார் கோயிலை அடிப்படையாகக் கொண்ட சப்த ஸ்தானத் தலங்களுள் ஒன்று திருத்தென்குடித்திட்டை எனப்படும் திட்டை திருத்தலம்.

🌺 இங்கு, வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னிதிகளுக்கு இடையே குரு பகவான் ராஜகுருவாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌿  இங்கு வேண்டிக்கொள்ள குரு தோஷம் நீங்கும். கல்வி, செல்வங்களால் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
☀ குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🔥 முருகன் சிறப்பு:🔥

🍄 திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல் ஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.

🔥 சூரிய பூஜை:🔥

🐲 சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். இதேபோல் உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். இவ்விரு காலங்களில் சுவாமிக்கு சூரிய பூஜை நடப்பது சிறப்பாகும்.

🅱 இறைவன் மீது சொட்டும் நீர்: 🅱

🌸 நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம்.

🌸 திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.

👉🏽 அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

🌸 தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார்.

🌸 கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.

🌸 திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

🅱 குரு பகவான் : 🅱

🌽 ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான்.

🌽 குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது.

🌽 அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினார். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தார்.

🍁 வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டார். இனியும் அவரை சோதிக்க விரும்பாத குரு, அவருக்கு காட்சி தந்தார்.

🍁 இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.

🅱 குரு ஸ்தலம்: 🅱

🍇 நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

🍇 இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு.

🍇 நவக்கிரகங்களில் சூரியன் ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய் கிரகம் சேனாதிபதி. புதன் இளவரசர். குரு பகவான் ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

🍇 இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

🅱 மங்களம் தரும் மங்களாம்பிகை :🅱

🥑 மகாப்பிரளய காலத்தில் உலகைக் காக்க இறைவனுடன் ஓடம் ஏறி வந்ததால், இத்தலத்தில் உள்ள இறைவியை லோகநாயகி என்று அழைக்கின்றனர். சகல மங்களங்களையும் தருவதால் மங்களாம்பிகை என்றும், மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்.

🥑 கும்பகோணத்தில் சோமநாதன் என்பவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவரது வீட்டுக்கு வந்த ஜோதிடர் ஒருவர், ‘உங்கள் மகள் மங்களா 16-வது வயதில் விதவையாகி விடுவாள்’ எனக் கூறினார். அதைக்கேட்டு சோமநாதன் வருந்தினார்.

🥑 சிறிது காலத்தில் தஞ்சைக்கு அருகே உள்ள திட்டையில் உள்ள ஒருவருக்கும், மங்களாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திட்டைக்கு வந்த நாள் முதல் மங்களா, தனது கணவன் நீண்டநாட்கள் வாழ வேண்டும் என திட்டையில் உள்ள லோகநாயகி அம்மனை வணங்கி வந்தாள். பவுர்ணமி தினத்தன்று எமன் மங்களாவின், கணவனின் உயிரை பறிக்க நெருங்கினான்.

🥑 இதனை அறிந்து அலறித் துடித்த மங்களா, லோகநாயகி அம்மனை சரணடைந்து, ‘எமனிடம் இருந்து என் கணவனின் உயிரை காப்பாற்றி, எனக்கு மாங்கல்ய பிச்சை கொடு’ என கண்ணீர் மல்க வேண்டினாள்.

🥑 அவளது பிரார்த்தனைக்கு மனம் இரங்கிய லோகநாயகி, மங்களாவின் கையில் விபூதியை கொடுத்து ‘இதை எமன் மீது இடு. உன் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான். நீயும் நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாயாக’ என ஆசி கூறி மறைந்தார்.

🥑 மங்களாவும், இறைவியின் ஆணைப்படியே செய்தாள். எமன் மறைந்தான். பின்னர் மங்களா நீண்ட நாட்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். மாங்கல்ய பிச்சை கொடுத்ததால் இத்தலத்தில் அன்னை மங்களாம்பிகா, மங்களேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

🥑 இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற  இறைவி, இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அமர்ந்துள்ளார். சிவன் இல்லையேல் சக்தியில்லை. சக்தியில்லையேல் சிவன் இல்லை. ஆண், பெண் சமத்துவத்திற்கு அற்புத உதாரணமாக அம்மன் இத்தலத்தில் கோவில் கொண்டுள்ளார்.

🥑 அம்மன் சன்னிதிக்கு எதிரே விமானத்தில் மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிகளுக்குரிய சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தோஷம் நீங்க தங்கள் ராசிக்கு கீழே நின்று அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டால், தோஷங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

🅱 மகாவிஷ்ணு உருவாக்கிய தீர்த்தம் :🅱

🔥 இந்த தலத்தில் பசு தீர்த்தம், சூல தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.

🔥 பசு தீர்த்தத்தில் ஒரு துளி நீரானது, நம்முடைய சகல பாவங்களையும் போக்கிவிடும் வல்லமை கொண்டது. சிவ ஜோதியுடன் ஒன்ற வைக்கும் சக்தி பெற்றது.

👶🏽 இன்னொரு தீர்த்தம் பற்றி இக்கோயில் தல வரலாறு கூறுகிறது.

🔥 முன் காலத்தில் தண்டகவனத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. கதிரவனின் கடும் கிரகணங்களால் குளம், குட்டைகள் வற்றின. மழை பொய்த்தது. தெய்வாதீனமாக திட்டை தலத்தை அடைந்த பசு குதிரை, ஆடு முதலிய மிருகங்கள் மனம் உருகி வசிஷ்டேஸே்வரரைப் பூஜித்தன.

🔥 அவைகளில் கருணை  கொண்ட சிவபெருமான் தன் சூலத்தால் பூமியைத்தோண்டி குளம் ஒன்றை உருவாக்கினார். தன் தலையில்
இருந்த கங்கை நீரால் குளத்தை நிரப்பினார். சூலத்தால் உருவாக்கப்பட்டால் அக்குளம் சூலதீர்த்தம் என அழைக்கப்பட்டது.

🔥 பசுக்களின் வேண்டுதலுக்கு இணங்க பரமேஷ்வரன் தீர்த்தம் உருவாக்கியதால் பசுபதீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார். இவ்வாறு மூர்த்தி தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமை உடையது தென்குடித்திட்டை.

🔥 சூல தீர்த்தமானது சிவ பக்தியில் நம்மை திளைக்கச் செய்து சிவனின் திருப்பாதத்தில் நம்மை ஆட்கொள்ள செய்யும் வல்லமை கொண்டது என்று புராணங்கள் கூறுகின்றன.

🔥மகாவிஷ்ணு ஒரு சமயம் யோக நித்திரையில் இருக்கும் போது, மது, கைடவர் என்ற இரு அரக்கர்கள் தோன்றி தேவர்களை துன்புறுத்தினர். நித்திரை அகன்று எழுந்த மகாவிஷ்ணு, அசுரர்களை எதிர்த்து போர் புரிந்தார். அப்போது விஷ்ணு தன் பலம் குறைவதை உணர்ந்தார். தன் பலத்தை புதுப்பித்துக்கொள்ள திட்டையில் தன் சக்ராயுதத்தால் ஒரு குளம் உண்டாக்கி, அதில் நீராடி இறைவனை வழிபட்டார். அதனால் பலம் ஏற்பட்டு அரக்கர்களை அழித்தார். மகாவிஷ்ணுவால் உருவாக்கப்பட்ட குளம் ‘சக்கர தீர்த்தக்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

🅱 கோவில் அமைப்பு:🅱

🐲 ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. அழகிய கருங்கல் திருப்பணியுடன் ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம்.

🐲 உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது.

🐲 உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது.

🐲 எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

🐲 சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

🐲 அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை. இக்கோவில் விமானங்கள் அனைத்தும் கருங்கற்களால் ஆன அற்புதக் கலையம்சம் பொருந்தியதாய் உள்ளன..

🅱 சனி பகவான்:🅱

🍄 சனிபகவான் பிறந்ததில் இருந்து அவரது பார்வையில் தீட்சண்யம் இருந்தது. அவரது பார்வை ட்ட இடங்களில் பல விபரீதங்கள் நிகழ்ந்தன. விநாயகப்பெருமான் பிறந்தநாள் விழாவைக் காண சனி பகவான் கைலாயம் சென்றார். அவர் பார்வை பட்டதால் விநாயகருக்கு தலைபோகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பார்வதி தேவியார் சனீஸ்வரனைச் சபித்தார்.

🍄 சனி பகவான் திட்டைக்கு வந்து வேதமுறைப்படி இறைவனைப் பூசித்து ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து வந்தார். அவர் தவத்துக்கு மெச்சி இறைவன் அவரை கிரகநாதனாக அமர்த்தி அனுக்கிரகம் செய்தான்.

🍄 எனவே, சனிதோஷம் உள்ளவர்கள், அர்த்தாஷ்டம், அஷ்டமச்சனி மற்றும் ஏழரை நாட்டுச்சனியின் பிடியில் இருப்பவர்கள் திட்டைக்கு வந்து பசு தீர்த்ததில் நீராடி பசுபதீஸ்வரரைத் தரிசித்து இங்குள்ள நவக்கிரகத்தினை வலம் வந்து சனி பகவானை அர்ச்சனை செய்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

🅱 சூரியன்:🅱

🌺 சிவ பக்தனான சுமாலியைக் கொன்றதால் பாவம் வரும் என்று பயந்த சூரிய பகவான் திட்டைதலத்துக்கு வந்து இறைவனை நினைத்து கடுந்தவம் புரிந்தான்.

🌺 இறைவன் அவன் தவத்துக்கு இரங்கி சூரியனை கிரகநாதனாக அமர்த்தி காலச்சக்கரத்தை நடத்திச்செல்ல அனுமதி அளித்தான்.

🌺 சிம்மராசியில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சூரிய தோஷம் உள்ளவர்கள். இங்கு வந்து வழிபட நலம் பெறுவார்கள்.

🅱 பஞ்சலிங்க ஸ்தலம்:🅱

🍁 கயிலாயம்,கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு ஸ்தலங்களின் வரிசை 22 வது ஸ்தலமாக விளங்குவது தென்குடித் திட்டை.

🌺 இத்திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியிலுள்ள வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக ஸ்தாபிக்கப் பட்டுள்ளார். எனவே பஞ்ச பூதங்களுக்கும் உகந்த ஸ்தலமாக உள்ளது.

🌺 திருக்காளத்தி திருஅண்ணாமலை, திருவானைக்கோயில், சிதம்பரம், காஞ்சிபுரம் போன்ற பஞ்சபூத ஸ்தலங்களும் ஒருங்கிணைந்த ஸ்தலமாக தென்குடித்திட்டை அமைந்துள்ளது.

🌺 நவகோள்களில் மூன்று கிரகங்கள் இத்தல வரலாற்றில் இணைத்துப் பேசப்படுகின்றன.

🌺 நவக்கிரகங்களின்  தலைவனான சூரியன் சிவபக்தரான சுமாலியைக் கொன்றதால், பாவம் வருமே என்று பயந்து இத்திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரைப் பூஜித்து கடுந்தவம் புரிந்தான். இறைவன் அவன் தவத்துக்கு இரங்கி நவக்கிரங்களின் அதிபதியாகவும் காலச்சரக்கரத்தை நடத்திச் செல்லவும் அருள் புரிந்தார்.

🅱 தல வரலாறு:🅱

🌤   அது ஒரு மகாப்பிரளய காலம். பிரளய முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும் மழை வெள்ள மென கொட்டியது.  உயிரினங்கள் அழிந்தன. ஆனால், அவ்வளவு வெள்ளப் பெருக்கிலும், பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. காரணம், அங்கு  இறையருள் இருந்தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை என்ற திட்டை. பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் .

👶🏽 பிரளய முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்க உடையுடன் சேர்ந்து உமையொருபாகன் அண்டத்தைப் படைத்து, அதனைப் பரிபாலனம் செய்ய  மும்மூர்த்திகளையும் படைத்தனர். ஆனால் மாயைவயப்பட்டிருந்த மும்மூர்த்திகளும் பெருவெள்ளத்தால் மூடி பேரிருள் சூழ்ந்திருந்த இந்தப் பிரபஞ்சத்தைக்  கண்டு பயந்தனர். அலைந்து திரிந்து பெரு வெள்ளத்தின் நடுவில் பெருந்திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். மாயை நீங்க வேண்டி இறைவனைத்  தொழுதனர். இறைவன் அவர்கள் அச்சத்தைப் போக்க உடுக்கையை முழக்கினார். அதிலிருந்து தோன்றிய மந்திர ஒலிகள் மும்மூர்த்திகளையும் அமைதியடைச்  செய்தது. பேரொளியாக ஒரு ஓடத்தில் ஏறி வந்த இறைவன் அவர்களுக்கு காட்சி தந்தார். மும்மூர்த்திகளின் மாயை யை நீக்கி அவர்களுக்கு வேத வேதாந்த  சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்ய உரிய சக்தியையும், ஞானத்தையும் அருளினார்.

👶🏽 திட்டை என்பது திட்டு அல்லது மேடு ஆகும்.  "ஓம்' என்ற மந்திர ஓடத்தில் இறைவன், இறைவி இருவர் மட்டும் ஏறி வர, அது ஒரு திட்டில் வந்து நின்றது. அதுவே சீர்காழி என்னும் தோணிபுரம் ஆகும். ஆதி காலத்தில் இறைவன் விரும்பி இருந்த 28 தலங்களில் 26 தலங்கள் ஊழிக்காலத்தில் மூழ்கிவிட்டன. இரண்டு தலங்கள் மட்டும் திட்டாக நின்றது. அவற்றுள் ஒன்று சீர்காழி.

👶🏽 மற்றொன்று தென்குடி திட்டை. சீர்காழியில் ஊழிக்காலத்தில் "ஓம்' என்ற மந்திர ஒலி எழுந்தது போலவே திட்டையில் "ஹம்' என்னும் மந்திர ஒலி வெளிப்பட்டதுடன் வேறு பல மந்திர ஒலிகளும் வெளிப்பட்டன. எனவே இத்தலம் ஞானமேடு எனவும் தென்குடி திட்டை எனவும், சீர்காழி வடகுடி திட்டை எனவும் வழங்கலாயிற்று.

👶🏽 இறைவன், இறைவியுடன் விரும்பி குடியிருக்கும் திட்டுகள் குடித்திட்டை எனப்படும். வசிஷ்டா முனிவர் ஆசிரமம் அமைத்து இத்தல ஈஸ்வரனை பூஜித்தமையால் இத்தல ஈஸ்வரன் வசிஷ்டேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். அம்பாள் உலகநாயகியம்மை.

🅱 சிறப்பம்சம்:🅱
 
🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🤹🏻‍♀ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🤹🏼‍♂ திருக்கயிலாயம், கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்புத் தலங்களின் வரிசையில் 22 வது சுயம்புத் தலமாக விளங்குவது தென்குடித்திட்டை

🤹🏼‍♂ சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.

🤹🏼‍♂ மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்பையும் பெற்றுள்ளது திட்டை திருத்தலம்.

🤹🏼‍♂ சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

🤹🏼‍♂ ஞானக்கோயில் எனப்படும் இக்கோயிலின் அமைப்பே அலாதியான சோபையுடன் காணப்படுகிறது. எங்கும் கருங்கற் திருப்பணியாகவே இருக்கிறது.

🤹🏼‍♂ மூலவர் விமானம், அம்பிகை விமானம், என்றில்லாமல் விநாயகர், முருகன், நடராஜர், பைரவர், தேவகுரு என்று எல்லா பரிவார தெய்வங்குளுக்கும் கருங்கல் விமானம் அமைந்திருப்பது வேறு எங்கும் காண முடியாத, இங்கு மட்டுமே காணக்கூடிய சிறப்பு, இத்திருக்கோயிலில் சுதை வேலைபாடுகளே இல்லை, பொரும் பொருட்செலவில் முழுவதும் கருங்கற்களாலேயே அமைக்கப்பட்ட கோயில் இது, கட்டிடக்கலைக்கு முக்கிய எடுத்துக்காட்டு இக்கோயில்.

தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக் கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள் ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ் பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.

👉🏽 தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி ஞானசம்பந்தர் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை என்று சம்பந்தர் பாடியுள்ளார்..


🅱 இருப்பிடம்:🅱

🚙 தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் திட்டை என்னும் கிராமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

🚙 தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரம் என்ற பகுதியில் இருந்து திட்டைக்கு சாலை பிரிந்து செல்கிறது. தஞ்சையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

No comments:

Post a Comment