Thursday 22 June 2017

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி - திருநெல்வேலி



மூலவர் : விஸ்வநாதர்
 
அம்மன்/தாயார் : உலகம்மன்

தல விருட்சம் : செண்பகமரம்

தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான  தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.

பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்

 ஊர் : தென்காசி

🅱 திருவிழாக்கள்:🅱
 
🍁 மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்,

🍁 புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும்,

🍁 ஐப்பசி திருக்கல்யாணமும்,

🍁 ஆவணி மூல தெப்பத்திருவிழாவும்,

🍁 தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும்.
 
🅱 தல சிறப்பு:🅱
 
 👉🏽 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

👉🏽 இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

👉🏽 மூன்று முக்கிய காரணங் களுக்காக இத்தலம் கீர்த்தி பெற்றது.

👉🏽 பூர்வஜன்ம பாவங்கள் நீங்குதல், தோஷ நிவர்த்தி, புத்திர பாக்கியம் பெறுதல் ஆகியவைகள் ஆகும்.

👉🏽 இக்கோவில் திரிகூட மலையின் அடிவாரத்தில் உள்ளது. (மூன்று மலைகள் சேர்ந்து இருப்பதால் திரிகூடம் என்று அழைக்கப்படுகிறது)

👉🏽 இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம்.

👉🏽 நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது.

👉🏽 சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது.

👉🏽  திருக்கோயிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது.

👉🏽 திருக்கோயில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டு மன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்படுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

👉🏽 கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம்.அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

👉🏽 மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
 
🅱 நடைதிறப்பு :🅱
 
🗝 காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.🗝

🅱 பொது தகவல்:🅱

🌺 மைநாகம் , கண்ம முனிவர் ஆகியோர் இங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டுள்ளார்கள்.

🌺 மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர்ஆலய கோபுரம்.

🌺 இக்கோயில் ராஜகோபுர வாசலில் அதிசயிக்கத் தக்க ஒரு நிகழ்வு அன்றாடம் நிகழ்கிறது.

🌺 பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக இக்கோபுர வாசல் வரும் தென்றல், பக்தர்களை மேற்கிலிருந்து கிழக்காக வீசி வாரி அணைக்கிறது.

🌺 அதே நேரத்தில் கோயிலின் உள்ளே செல்லும்போது எந்த வித செயற்கை தடுப்பும் இல்லாமலேயே கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசி நம்மை திருக்கோயிலின் உள்ளே தள்ளுகிறது.

🌺 ஒரே நேர்க்கோட்டில் எந்த வித தடுப்பும் இல்லாமல் இரு பக்கங்களில் இருந்தும் காற்று வீசும் வண்ணம் இக்கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

🌺 எவ்வாறென்றால் இத்திருக்கோயிலின் வேறு எந்த பகுதியிலும் காற்று வீசாத நேரத்தில் கூட இந்த கோபுரத்தின் உள்ளே, கோபுர வாசலிலே காற்றின் ஆளுமை கண்ணுக்கு மட்டுமல்ல நம் உணர்வுகளுக்கும் விருந்து.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌿 இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🌿 இத்தலத்து இறைவனை பிராத்திதால் திருமணம் கைகூடும்,
புத்திரபாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

🌿 இத்தல இறைவனை வழிபட்டால் மன நிம்மதி உண்டாகும்.

🅱 நேர்த்திக்கடன்:🅱
 
☀ சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🌸 1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது.

🌸 இந்த கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது.

🌸 இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும்.

🌸 கோபுரத்தின் 9வது நிலையில் இருந்தபடியே கோபுரத்தை சுற்றி வரும் பால்கனி வசதி உள்ளது.

🅱 கலை சிற்பங்கள் : 🅱

🎭 இறைவன் சந்நிதியின் வாயிலருகில் உள்ள திருஓலக்க
மண்டபத்தில் தமிழ்நாட்டிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை.

🎭 இங்குள்ள இரட்டைச்சிற்பங்களான வீரபத்திரர்கள் - தாண்டவ மூர்த்திகள். இரண்டு தமிழணங்குகளும், இணைச் சிற்பங்களான ரதி - மன்மதன் சிற்பங்களும், தனியழகு சிற்பங்களான திருமால் -காளிதேவி ஆகியவையும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

🎭 மேற்கு பிரகாரத்தில் மூலை விநாயகர் வெகு அழகாய் அமர்ந்து அருள் தருகிறார்.

🎭 பஞ்சலிங்க அய்யனார், மஹாலஷ்மி, சந்தன மாரீஸ்வரர், நடராஜ பெருமான், சண்டீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.

🎭 அர்த்த மண்டபம், மணிமண்டபம், பஞ்ச பாண்டவர் மண்டபம், மஹா மண்டபம், இசை எழுப்பும் கல் தூண் மண்டபம் ஆகியவைகளும், பராக்கிரம பாண்டியன் சுவாமியை வணங்குவது போன்ற தத்ரூபமான சிலைகளும் காண்போரை வியக்க வைக்கும்.

🎭 மேற்கூறிய சிலைகள் யாவும் ஒற்றைக் கல்லினாலானவை.
நுட்பமான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. இவை பாண்டியர்
காலச் சிற்பிகளின் உன்னத படைப்புகளாகும். அளவிலும், அழகிலும் இச்சிற்பங்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டில் வேறு எங்கும் இல்லை எனலாம்.

🎭 பால முருகன் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் காணப்படும்
தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், கர்ணன்
ஆகியோரின் சிற்ப உருவங்கள் ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்டு
அழகுடன் காட்சியளிக்கின்றன.

🎭 காசி விஸ்வநாதரின் சந்நிதி முன்னுள்ள மண்டபத்திலும்,
பால முருகன் சந்நிதி முன்னுள்ள மண்டபத்திலும்
இசைத் தூண்கள் உள்ளன. இக்கோவிலிலுள்ள கல்வெட்டுகள்
பல, இக்கோவிலின் தோற்றம், வளர்ச்சி, பிற செய்திகள்
ஆகியவற்றைத் தெரிவிக்கின்றன.

🎭 தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் சிற்பங்கள்
பிற்காலப் பாண்டிய மன்னர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள
அரிய கலைச் செல்வங்களாகும்.

🅱 ஓலக்க மண்டபத்தில் கற்றூணில் அற்புதச்சிலைகள்: 🅱

⚜ பரக்கிரம பாண்டிய மன்னர் இக்கோயிலை கட்டும்போது 8 விநாயகர் கோயில்களையும், 8 திருமடங்களையும் அமைத்தார்.

⚜ இந்த கோபுர வாசல் வழியில் எப்பொழுதும் காற்று வீசி கொண்டே இருக்கும்.

🅱 விநாயகர் கோயில்கள்: 🅱

🐲 கன்னிசுதன் (கன்னிதிசை)

🐲 சுந்தரகயத்தன் (மேல்திசை)

🐲 ஷென்பகச்சேய் (வடமேற்கு)

🐲 வெயிலிகந்த பிள்ளை (கன்னிமார்தெரு)

🐲 அம்பலச்சேய் பொன்னம்பல விநாயகர் (கன்னிமார்தெரு வடகிழக்கு)

🐲 ஒப்பனைச்சுதன் (கிழக்கு)

🐲 அபிடேகச்சேய் (தென்கிழக்கு)

🐲 மெய்கண்டப் பிள்ளை (தெற்கு சம்பாத்தெரு)

🅱 திருமடங்கள் : 🅱

🔥 அரசருக்கு முடிசூட்டும் சன்னதி மடம் (சிவந்தபாதவூருடைய ஆதீனம் சிவாகமங்கள் ஓத)

🔥 சாமிதேவநயினார் (அகோர தேவர் ஆதீனம் சிவதீக்கை பெற்றுக்கொள்ள)

🔥 துருவாசராதீனம் (வேம்பத்தூர் மடம் கல்வி கற்றுக் கொள்ள)

🔥 பெளராணிக (ஆனந்தக்கூத்தர் ஆதீனம் புராணங்கள் கேட்க)

🔥 தத்துவ (பிரகாசர் ஆதீனம் தத்துவ விசாரணை செய்ய)

🔥 மெய்கண்டார் ஆதீனம் (சைவசித்தாந்த நூல்களை ஓதி உபதேசம் பெற)

🔥 உமையொருபகக் குரு ஆதீனம் (உபதேசம் பெற)

🔥 இடி வலஞ்சூழ் பரஞ்சோதித்தேவர் ஆதீனம் (யோகம் பயில)

🅱 பொங்கி எழுந்த கங்கை! 🅱

🦋 ஆலயம் கட்டி முடித்த பின், கங்கை நீர் கொண்டு தினமும் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசைப்பட்டான் பராக்கிரமன். இவனது எண்ணத்தை அறிந்துகொண்ட இறைவன், இந்தக் கோயிலிலேயே ஓரிடத்தில் கங்கையைப் பொங்கச் செய்தார். காசி விஸ்வநாதரைத் தொடர்ந்து கங்கையும் தென்காசிக்கு வந்தது கண்டு சந்தோஷப்பட்ட பராக்கிரமன், கங்கை பொங்கிய இடத்தில் ஒரு கிணறு கட்டினான்.

🦋 பராக்கிரமன் அமைத்த இந்தக் கிணறு, ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் காணப்படுகிறது. ‘காசி கங்கைக் கிணறு’ என்றே அழைக்கிறார்கள். தினமும் இறைவனுக்கு இந்த நீர் கொண்டுதான் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

🅱 செண்பகப் பொழில் தென்காசி ஆன கதை: 🅱

👶🏽 முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி,பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார்.

👶🏽 அதற்கான காரணம்  தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்து விடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டது தான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.

👶🏽 கோபுர தரிசனம் கோடி பாப விமோசனம் என்பார்கள். அப்படிப்பட்ட கோபுரங்களுக்காகவே தனிச் சிறப்பு பெற்ற தமிழகத் தலங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று உலகம்மை உடன் காசிவிஸ்வநாதர் உறையும் தென்காசி திருத்தலம், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒன்பது நிலை ராஜகோபுரத்திற்கு எதிரே உள்ள அகன்ற வெளித்திடல் கோபுரத்தின் கம்பீரத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

👶🏽 கோயிலிற்கும் கோபுரத்திற்கும் இடையில் பரந்த வெளிப் பரப்பு பொதிகை மலையிலிருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று கோயிலிற்குள் நுழையும் பக்தர்களை வரவேற்பது போல், மேற்கில் இருந்து கிழக்காக வீசுகிறது. கோயிலை நோக்கிச் செல்லும்போது, காற்று இல்லாமலேயே காற்று சுழன்று வீசுவது போல் ஓர் அனுபவம் ஏற்படுகிறது.

👶🏽 இன்று 178 அடியில் நெடிய உயரத்தோடு பஞ்ச வண்ணங்கள் தீட்டப்பட்டு, 800 சிலைகள் வடிக்கப்பட்டு பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் இந்தக் கோபுரம், ஒரு காலத்தில் சிதைந்த நிலையில் இருந்தது என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

👶🏽 1457 இல் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோபுரம் 1518 இல் அழகன் குலசேகரனால் கட்டி முடிக்கப்பெற்றது.

👶🏽 கி.பி. 1792 க்குப் பின்னரும், கி.பி. 1824 க்கு முன்னரும் உள்ள இடைப்பட்ட காலத்தில் பாளையக்காரர்களுக்குள் ஏற்பட்ட பகையாலும், வெள்ளையர்களின் சூழ்ச்சியாலும், உட்பகையாலும் ஆவணங்களை அழிப்பதற்காக வைக்கப்பெற்ற நெருப்பு, கோபுரத்தையும் அழித்துவிட்டது.

👶🏽 கோபுரத்தை இடியும், மின்னலும் தாக்கியதால் அழிந்தது என்பது தவறான செய்தியாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோபுரத்தைக் கட்ட பலர் முன்வந்தர்கள். இப்பணிகள் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டு 1990 ஆம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்தது.

🅱 தல வரலாறு:🅱

🍄 சுமார் 700 வருடங்களுக்கு முன்பு தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான்.

🍄 மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றைக் கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார். இவ்வாறு காசிக்குச் சென்று தினமும் காசி விஸ்வநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான்.

🍄 ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருவதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோவில் அமைத்து வழிபடும்படி கூறினார்.

🍄 நான் இருக்குமிடத்தை நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார். மறுநாள் எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும், நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான்.

🍄 அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோவில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🤹🏻‍♀ இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🤹🏼‍♂ இவ்மாவட்டத்தில் உள்ள சிவபக்தர்கள், தங்கள் குடும்பங்களின் நடக்கும் அனைத்து சுப காரியங் களுக்கும் இங்கு வந்து காசி விஸ்வநாதரை வணங்கி, ஆசி பெற்று செல்கின்றனர். அதனால் வாழ்க்கை வளம் பெறும், தொழில் வளம் உயரும், ஆரோக்கியம் பெருகும், வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு உகந்த வேலை கிட்டும், திருமணம் கை கூடும், புத்திரபாக்கியம் தருவார், இல்லற வாழ்க்கையில் நிம்மதி வந்து சேரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

🤹🏼‍♂ காசியில் குடி கொண்டுள்ள காசி விஸ்வநாதர், தானே விருப்பப்பட்டு இங்கே அமர்ந்துள்ளார் என்பது நம்பிக்கை. எனவே, அங்கே போய் வணங்க முடியாதவர்கள், தென்காசி வந்து வணங்கினாலே காசிக்குச் சென்ற பலன் முழு அளவில் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.

🤹🏼‍♂ வடகாசியில் இறந்தால்தான் முக்தி; ஆனால் தென்காசியைக் கண்டாலே முக்திதான்.

No comments:

Post a Comment