Friday 12 May 2017

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1.3


தாத்துவிகங்கள்:

இனி தத்துவங்களின் கூறுகளும் காரியங்களும் தாத்துவிகம் எனப்படும். தைசத அகங்காரம், வைகாரிக அகங்காரம், பூதாதி அகங்காரம் ஆகிய மூன்றும் அகங்காரத்தின் கூறுகள் என்பது நாம் அறிந்தது. ஆதலின் அவை தாத்துவிகங்களாம். அதுபற்றியே அவை தத்துவங்களோடு வைத்து எண்ணப் பெறவில்லை. பல்வேறு வகையான உடம்புகளும், அவ்வுடம்புகளின் புறத்தும் அகத்தும் உள்ள உறப்புக்களும் தத்துவங்களின் காரியங்களாகும். ஆதலால் அவை தாத்துவிகங்கள் எனப்படும். உடம்பாக அமையும் தாத்துவிகங்கள் அறுபது ஆகும். பின்வரும் அட்டவணையில் அவற்றைக் காணலாம்.

தாத்துவிகம் 60

பிருதிவியின் கூறு 5 எலும்பு, தசை, மயிர், தோல், நரம்பு

அப்புவின் கூறு 5 சிறுநீர், இரத்தம், சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் அல்லது சோணிதம்

தேயுவின் கூறு 5 இருதயத்தில் வெப்பம், பசித்தீ, கண்ணில் வெப்பம், உடம்பில் வெப்பம், கபால வெப்பம்

வாயுவின் கூறு 10 உதானன், பிராணன், அபானன், சமானன், வியானன், 
நாகன், கூர்மன், கிருகரன், தேவ தத்தன், தனஞ்சயன் என்னும் வாயுக்கள்

ஆகாயத்தின் கூறு 10 அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன் என்னும் நாடிகள்
ஞானேந்திரியங்களின் 5 சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்
விடயங்கள்

கன்மேந்திரியங்களின் 5 வசனம்(பேச்சு), கமனம்(நடை), தானம்(கொடை), விசர்க்கம்(போக்கு), ஆனந்தம்(இன்பம்) விடயங்கள்

அகங்காரத்தின் கூறு 3 தைசதம், வைகாரியம், பூதாதி

குற்றம் 5 காமம், குரோதம், உலோபம், மோகம், மதம்(மாற்சரியம் குரோதத்துள் அடங்கும்)

குணத்தின் கூறு 3 சாத்துவிகம், இராசதம், தாமதம்

வாக்கு 4 சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி

பிரகிருதி தன் முக்குணங்களால் மயக்குதல்

இவ்வாறு பிரகிருதி மாயை இருபத்து நான்கு தத்துவங்களாக விரிந்து ஆன்மாக்களோடு பொருந்தி உலக நுகர்ச்சியைத் தருகிறது. காரணத்தில் உள்ளது காரியத்திலும் இருக்கும் எனப் பார்த்தோம். முதற்காரணமாகிய பிரகிருதி முக்குண வடிவானது. ஆகவே அதன் காரியமாகத் தோன்றும் தனு கரண புவன போகங்களும் முக்குணமயமாயிருக்கும். இவற்றைப் பொருந்துகிற ஆன்மாக்களும் முக்குணவயப்பட்டு இன்ப துன்ப மயக்கவுணர்வுகளை அடையும். பிரகிருதி தனது முக்குண வேறுபாட்டான் உயிர்களது உள்ளத்தைப் பலவாறு மயங்கச் செய்யும். இவ்வகையில் பிரகிருதி மயக்கும் தன்மையுடைய ஒரு பெண் மகளைப் போன்றது. அவள் தன் ஆடை அணிகளாலும் குணங்களாலும் ஆடவனை மயக்குவது போலப் பிரகிருதி தன் காரியமாகிய முக்குணங்களால் ஆன்மாக்களை மயக்குகிறது என்று சொல்லப்படுகிறது. மேற்கூறிய தத்துவம் இருபத்து நான்கும் ஆன்மாக்களுக்குப் போக சாதனமும், போக்கியமுமாய் அமைகின்றன ஆதலின் அவை போக்கிய காண்டம் என்று சொல்லப்படும். போக்கியம்நுகரப்படுவது; காண்டம்தொகுதி.


ஆன்ம தத்துவம்பெயர்க் காரணம்

இத்தத்துவங்கள் இருபத்துநான்கும் ஆன்ம தத்துவம் எனப்படுகின்றன இப்பெயருக்கான காரணம் அறிதற்குரியது. ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களாலும் கட்டுண்ட ஆன்மாக்கள் சகலர் எனப்படுவர். சகலராகிய ஆன்மாக்களுக்குத் தலைவர் சீகண்டவுருத்திரர். அவரே இறைவனது ஆணை வழி நின்று பிரகிருதி முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களைத் தோற்றி ஒடுக்குபவர் ஆவர். ஆன்ம தத்துவம் என்பதில் உள்ள ஆன்மா என்ற சொல் சகலராகிய ஆன்மாக்களை முதலில் குறித்துப் பின்னர் அவர்கட்குத் தலைவராகிய சீகண்டவுருத்திரரைக் குறித்தது அவரால் செயற்படுத்தப் படுதலின் அத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப் பெயர் பெற்றன. இது மரபாகச் சொல்லி வரும் விளக்கம். இவ்வாறன்றிச் சகலராகிய ஆன்மாக்களுக்குச் சிறப்பாக உரியனவாய் நிற்றல் பற்றி இத்தத்துவங்கள் ஆன்ம தத்துவம் எனப்பட்டன என்று கூறுதலும் அமையும்.


இதுகாறும் நாம் விரிவாக அறிந்த செய்திகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். உலகுக்கு முதற் காரணம் மாயை. அது சுத்த மாயை, அசுத்த மாயை என் இருபகுதியாய் நிற்கும். அசுத்த மாயையிலிருந்து தோன்றும் காரியமே பிரகிருதி மாயை, நாம் வாழும் உலகுக்கும், நமது உடம்புக்கும் நேரே காரணமாய் இருப்பது இப்பிரகிருதியேயாகும். பிரகிருதியிலிருந்து முதலில் அந்தக்கரணங்களும் பின்னர் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றும். பூதங்களின் பரிணாமமே இவ்வுலகம்.


ஆசிரியர் கீழிருந்து விளக்கிச் செல்லுதல்

பிரகிருதியிலிருந்து தொடங்கிப் பூதங்கள் முடியவுள்ள இருபத்துநான்கு தத்துவங்களையும் அவை தோன்றும் முறையிலே வைத்துக்காட்டினோம். இது தோற்ற முறையாகும். ஆயின் ஆசிரியர் மனவாசகம் கடந்தார் இம்முறையினை மேற்கொள்ளவில்லை. அவர் கீழிருந்து தொடங்குகிறார். அஃதாவது பூதங்களை முதலில் விளக்கிப் பின் மேல் மேல் உள்ளவற்றை விளக்கிச் சொல்கிறார். ஆசிரியரது அணுகுமுறை பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டோம். தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல் என்பதே அவர் பின்பற்றும் முறையாகும். தத்துவங்கள் அனைத்திலும் தூலமாய் உள்ளவை பூதங்களாகும் அவற்றின் காரியங்களே இவ்வுலகும், இதன்கண் உள்ள அளவற்ற பொருள்களுமாகும். இவ்வாறு பூதங்கள் தூலமாய், காரியப்பாட்டில் புலனாகும் பொருளாய் நிற்றலின், நமக்குத் தெரிந்த பொருளாகிய அவற்றையே முதலில் எடுத்துக் கொண்டு விளக்கப் புகுகின்றார் ஆசிரியர்.


ஐம்பூதங்களின் வடிவு

4. நாற்கோணம் பூமி, புனல் நண்ணு மதி யின் பாதி

ஏற்கும் அனல் முக்கோணம் எப்போதும் ஆர்க்கும்

அறுகோணம் கால் வட்டம் ஆகாயம் ஆன்மா

உறுகாயம் ஆம் இவற்றால் உற்று.


பதவுரை
பூமி மண்

நாற்கோணம் நாற்கோண வடிவு உடையது

புனல் நீர்

மதியின் பாதி நண்ணும் பாதியாய் உள்ள சந்திரனைப் போல அரைவட்ட வடிவினதாய் இருக்கும்

அனல் நெருப்பு

முக்கோணம் ஏற்கும் முக்கோண வடிவைப் பொருந்தும்

எப்போதும் ஆர்க்கும் கால் எப்போதும் இயங்கி ஓசை செய்யும் காற்று

அறுகோணம் அறுகோண வடிவினதாகும்

ஆகாயம் வான்


வட்டம் வட்ட வடிவாய் இருப்பது

ஆன்மா உறு காயம் உயிர் வினைக்கு ஈடாகப் பொருந்துகின்ற தூல சரீரம்

இவற்றால் இப்பூதங்களின் பரிணாமத்தால்

உற்று ஆம் ஏற்பட்டு உயிருக்கு அமைந்ததாகும்


பொழிப்புரை

ஐம்பூதங்களுள் நிலம் நாற்கோண வடிவாய் இருக்கும்; நீர் பாதி மதி போல அரைவட்ட வடிவாய் இருக்கும்; நெருப்பு முக்கோண வடிவாய் இருக்கும்; காற்று அறுகோண வடிவாய் இருக்கும்; வான் வட்ட வடிவாய் இருக்கும். உயிர் பெறுகின்ற உடம்பு இப்பூதங்களின் சேர்க்கையால் ஆனது.

விளக்கம்

நிலம் முதலிய ஐம்பூதங்கள் வட மொழியில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் எனப்படும். இவற்றுக்குரிய வடிவங்கள் மேற்கூறியவாறு ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. நமக்குக் கிடைத்துள்ள பருவுடம்பு பஞ்ச பூதங்களின் கூட்டத்தால் அமைந்தது. உடம்பிலுள்ள என்பு, தசை, மயிர், தோல், நரம்பு என்பவை பிருதிவியின் கூறுகளாகும். சிறுநீர், குருதி, வியர்வைவ முதலியவை அப்புவின் கூறுகள், பசித்தீ, உடம்பில் வெப்பம் முதலியவை தேயுவின் கூறுகள், பிராண வாயு முதலியவை வாயுவின் கூறுகள். பத்து வகையான நாடிகள் ஆகாயத்தின் கூறுகளாகும். நமக்குப் புலப்படுகின்ற நிலம், நீர், முதலியவை தத்துவங்கள் அல்ல. இவை காரியப் பொருள்கள். இவற்றிற்குக் காரணமான பஞ்ச பூத தத்துவங்களுக்கே இங்கு வடிவம் முதலியவை கூறப்படுகின்றன.


பூதங்களின் நிறமும் எழுத்தும்


5. பொன்பார்; புனல்வெண்மை; பொங்கும் அனல் சிவப்பு

வன்கால் கருணை; வளர் வான்தூமம்என்பார்

எழுத்து ல வ ர ய அ பாராதிக்கு என்றும்

அழுத்தமதாய் நிற்கும் அது


பதவுரை

பார் பொன் மண் பொன்னிறம் உடையது

புனல் வெண்மை நீர் வெண்ணிறம் உடையது

பொங்கும் அனல் சிவப்பு ஓங்கியெழும் நெருப்பு செந்நிறம் உடையது

வன்கால் கருமை வலிமை பொருந்திய காற்று கருநிறம் உடையது

வளர் வான் தூமம் பரந்து விரிந்த ஆகாயம் புகை நிறம் உடையது

என்பார் இவ்வாறு ஐம்பூதங்களின் நிறங்களை யோகக் காட்சியால் கண்டுணர்ந்தார் கூறுவர்

பார் ஆதிக்கு மண் முதலிய இப் பூதங்களுக்கு உரிய,

எழுத்து அவைகளின் உடன் நின்று தொழிற்படுத்தும் வித்து எழுத்துக்கள்(பீஜ அக்கரங்கள்)

ல வ ர ய அ முறையே ல,வ,ர,ய,ஹ எனப்படும் மெய்யெழுத்துக்களாம்

அது அவ்வெழுத்து(அப்பூதங்களில்)

என்றும் எப்போதும்

அழுத்தமதாய் நிற்கும் அழுந்தி நிற்கும்

பொழிப்புரை

மண் பொன்னிறம் உடையது. நீர் வெண்ணிறம் உடையது. பொங்கி எழும் இயல்புள்ள நெருப்பு செந்நிறம் உடையது வலிமை மிக்க காற்று கரு நிறம் உடையது. எங்கும் பரவி நிற்கும் ஆகாயம் புகை நிறம் உடையது. இவ்வாறு பூதங்களின் நிறங்களை யோகக் காட்சியில் கண்டுணர்ந்த பெரியோர் கூறுவர். மண் முதலிய பூதங்களை உடன் நின்று செலுத்தும் மூலம் எழுத்துக்கள் முறையே ல,வ,ர,ய,ஹ எனப்படும் மெய்யெழுத்துக்களாம்.

விளக்கம்

மூல எழுத்து வடமொழியில் பீஜ அட்சரம் எனப்படும். பீஜம்வித்து, ஹ என்ற வித்தெழுத்து செய்யுளில் அ எனக் குறிக்கப்பட்டுள்ளது. எல்லாப் பொருள்களுக்கும் மூல ஒளிகள் உள்ளன என்று கொள்ளப்படும். அவையே அவ்வப் பொருள்களுக்குரிய மந்திரங்கள் அல்லது வித்து எழுத்துக்கள் ஆகும். அம்முறையில் இங்குப் பூதங்களுக்குரிய வித்தெழுத்துக்கள் கூறப்பட்டுள்ளன. எல்லாப் பொருள்களுக்கும் மூல ஒளிகள் உள்ளன என்று கொள்ளப்படும். அவையே அவ்வப் பொருள்களுக்குரிய மந்திரங்கள் அல்லது வித்து எழுத்துக்கள் ஆகும். அம்முறையில் இங்குப் பூதங்களுக்குரிய வித்தெழுத்துக்கள் கூறப்பட்டுள்ளன.




இறைவனது சத்தியாகிய திருவருள் எதனையும் நேராகத் தொழிற்படுத்தாது. அது சுத்த மாயையை ஊடகமாகவும் நிலைக்களமாகவும் கொண்டு நின்று பிறவற்றைத் தொழிற்படுத்தும் என்பது அறிதற்குரியது. மூல ஒலிகள் என்பவை சுத்த மாயையில் தோன்றுவன. அவை திருவருளுக்கு ஊடகமாகவும் நிலைக்களமாகவும் அமைகின்றன. திருவருள் அவற்றின் இடமாகக் கொண்டு பதிந்து நின்று அவற்றின் வழியாக ஐம்பூதங்களையும் செலுத்தும், அது பற்றியே மூல ஒலிகள் பூதங்களை உடன் நின்று செலுத்தும் என்று கூறப்பட்டது.




பூதங்களின் அடையாளம்

6. குறி குலிசம் கோகனதம் கொள்சுவத்தி குன்றா

அறு புள்ளி ஆரமுத விந்துபிறிவின்றி

மண் புனல்தீக் கால் வானம் மன்னும் அடைவே என்று

ஒண்புதல்வா! ஆகமம் ஓ தும்.




பதவுரை

ஒண் புதல்வா சிறந்த மாணாக்கனே!

குறி அடையாளமாக

குலிசம் வச்சிராயுதத்தையும்

கோகனதம் தாமரையையும்

கொள்சுவத்தி பொருந்திய சுவத்திகத்தையும்

குன்றா அறுபுள்ளி குறையாத ஆறு புள்ளியையும்

ஆர் அமுத விந்து அமுதத் துளியையும்

அடைவே முறையே

மண் புனல் தீக்கால் வானம் மண்ணும் நீரும் தீயும் காற்றும் வானும் ஆகிய ஐம்பூதங்களும்

பிறவின்றி நீங்காமற் கொண்டு

மன்னும் என்று நிலை பெறும் என

ஆகமம் சிவாகமங்கள்

ஓதும் கூறும்




முதலில் அடையாளங்களை ஒரு வரிசையில் நிறுத்தி, மூன்றாம் அடியில் அவ்வடையாளங்களைக் கொண்டுள்ள பூதங்களை அதே வரிசையில் முறையே நிறுத்தியுள்ள பான்மையைக் காணலாம். எனவே, மண்ணிற்கு வச்சிரப் படையும், நீருக்குத் தாமரையும், தீக்குச் சுவத்திகமும், காற்றுக்கு ஆறு புள்ளியும், வானுக்கு அமுதத் துளியும் அடையாளங்களாம் என்பது விளங்கும். சுவத்திகம் என்பது ஸ்வஸ்திக் என்ற வடிவம். இதனை தமிழில் இருதலை மேழி என்பர்.




பொழிப்புரை

நன்மாணாக்கனே! மண்ணைக் குறிக்கும் அடையாளம் வச்சிராயுதம்; நீருக்கு அடையாளம் தாமரைப்பூ; நெருப்பிற்கு அடையாளம் கவத்திகம்; காற்றுக்கு அடையாளம் ஆறு புள்ளி; வானுக்கு அடையாளம் அமுதத் துளி. இவ்வாறு சிவாகமம் கூறும்.




அதிதெய்வங்களும் அவர்கள் தொழில்களும்

7. பாராதி ஐந்துக்கும் பன்னும் அதி தெய்வங்கள்

ஆர் ஆர் அயன் ஆதி ஐவராம் ஓரோர்

தொழில் அவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுதல் ஐந்தும்

பழுதறவே பண்ணுவர்கள் பார்.




பதவுரை




பார் ஆதி மண் முதலிய

ஐந்துக்கும் ஐந்து பூதங்களுக்கும்

பன்னும் (சிவாகமங்கள்) சொல்லுகின்ற

அதி தெய்வங்கள் அதி தெய்வம் ஆவார்

ஆர் ஆர் யார் யார்? என்றால்

அயன் ஆதி பிரமன் முதலிய

ஐவராம் ஐவரும் ஆவர்

ஓரோர் தொழில் ஒவ்வொரு தொழில்

அவர்க்குச் சொல்லுங்கால் அவர்களுக்குச் சொல்லப்படும் அங்ஙனம் சொல்லுங்கால்

தோற்றம் முதல் ஐந்தும் படைத்தல் முதலிய தொழில்கள் ஐந்தினையும்

பழுது அறவே குற்றமின்றி

பண்ணுவர்கள் அவர்கள் செய்வார்கள்

பார் இதனை அறிவாயாக

பொழிப்புரை

நிலம் முதலிய ஐம்பூதங்களுக்கும் உரிய அதிதெய்வங்களை ஆகமங்கள் குறிப்பிடும். பிரமன் முதலிய ஐவரே அந்த அதிதெய்வங்கள். அவர்கள் முறையே படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் செய்வர்.




விளக்கம்

இச்செய்யுளில் அதிதெய்வங்களையும், அவர்கள் தொழில்களையும் தொகுத்துக் கூறினார் ஆசிரியர் அடுத்த செய்யுளில் வகுத்துக் கூறுவார்.




அதி தெய்வங்களின் தொழில்களை வகுத்துக் கூறுதல்




8. படைப்பன் அயன். அளிப்பன் பங்கயக்கண் மாயன்

துடைப்பன் உருத்திரனும் சொல்லில் திடப்பெறவே

என்றும் திரோபவிப்பார் ஈசர்; சதாசிவரும்

அன்றே அநுக்கிரகர் ஆம்




பதவுரை

சொல்லில் முந்திய செய்யுளில் தொகுத்துக் கூறிய தொழில்களை இங்கு வகுத்துக் கூறினால்

அயன் பிரம தேவன்

படைப்பன் படைத்தல் தொழிலைச் செய்வான்

பங்கயக் கண் மாயன் தாமரை போன்ற கண்களை உடைய மாயோன்

அளிப்பன் காத்தல் தொழிலைச் செய்வான்

உருத்திரனும் உருத்திரனும்

துடைப்பன் அழித்தலைச் செய்வான்

திடம் பெறவே உயிர்கள் உறுதி அடையும் படி

ஈசர் மகேசுரர்

என்றும் எப்பொழுதும்

திரோபவிப்பர் மறைத்தலைச் செய்வார்

அன்றே (மறைத்தல் தொழிலின் பயனாகப் பக்குவம் எய்திய உயிர்களுக்கு) அப்பொழுதே

சதாசிவரும் சதாசிவரும்

அனுக்கிரகர் ஆம் அருளும் தொழிலைச் செய்வார்

பொழிப்புரை

பிரமன் படைத்தல் ஆகிய தொழிலைச் செய்வான் மாயோன் ஆகிய திருமால் காத்தல் ஆகிய தொழிலைச் செய்வான். உருத்திரன் அழித்தல் ஆகிய தொழிலைச் செய்வான். உயிர்கள் பக்குவம் பெறுதற் பொருட்டு என்றும் மறைத்தல் ஆகிய தொழிலைச் செய்பவர் மகேசுரர். அதன் பயனாகப் பக்குவம் எய்திய உயிர்களுக்கு அப்பொழுதே அருள்புரியும் தொழிலைச் செய்பவர் சதாசிவர்.

விளக்கம்

ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாம்.

படைத்தல்

படைத்தலாவது இல்லாததைத் தோற்றுவித்தல் அன்று. இல்லாதது என்றும் இல்லாததேயாம். அதனை ஒரு காலத்தில் தோன்றச் செய்ய முடியாது. முயலின் தலையில் கொம்பு என்பது இல்லாதது. அதனை எக்காலத்திலேனும் தோற்றுவிக்க முடியுமா? ஆதலால் படைத்தல் என்பதற்கு உள்ளதைத் தோற்றுவித்தல் என்பதே கருத்தாகும். உள்ளதை ஏன் தோற்றுவிக்க வேண்டும்? அதுதான் உள்ளதாயிற்றே என வினவலாம். உள்ளது என்பதன் பொருளை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று காரணநிலை; மற்றொன்று காரியநிலை. காரணநிலையாவது ஒரு பொருள் தனது காரணத்தில் நுட்பமாய் ஒடுங்கிப் புலப்படாதிருக்கும் நிலையாகும். காரிய நிலையாவது அப்பொருள் தனது காரண நிலையிலிருந்து வெளியே புலப்பட்டு நிற்கும் நிலையாகும். களிமண்ணால் ஆகிய குடத்தை எடுத்துக் கொள்வோம். குடமானது தோன்றுவதற்கு முன்னே தனது காரணமாகிய களிமண்ணில் நுட்பமாய் ஒடுங்கியிருந்தது. அதுவே குடத்தின் காரணநிலை. பின் வனைபவனின் முயற்சியால் அது வெளிப்பட்டுப் புலப்படும் நிலையை எய்தியது. இந்நிலையே காரிய நிலை. இவ்விரு நிலைகளும் எல்லாப் பொருள்களுக்கும் உண்டு. காரணநிலையில் புலப்படாமல் உள்ள பொருளைப் புலப்படும் காரி நிலைக்குக் கொண்டு வருதலே படைத்தல் அல்லது தோற்றுவித்தல் எனப்படும். உள்ளதைத் தோற்றுவித்தல் என்பதன் பொருள் இதுவேயாகும். உலகைப் படைத்தல் என்பதனை இந்த வகையில் நாம் நோக்க வேண்டும். படைப்பதற்கு முன்னும் உலகம் தனது காரணத்தில் நுட்பமாய் ஒடுங்கியிருந்தது என்று கொள்ள வேண்டும். குடத்திற்கு மூலகாரணமாய் நிற்பது களிமண். அதுபோல உலகிற்கு மூலமாய் நிற்பது எது? அதுவே மாயை. மாயை என்னும் மூலப் பொருளைப் பற்றி நாம் முன்பே விரிவாக அறிந்துள்ளோம். அந்த மாயையிலே தான் இந்த உலகம் ஒடுங்கியிருந்தது. அதிலிருந்து உலகை வெளிப்படுமாறு செய்தலே படைத்தல் தொழில் என்பதாகும். இவ்வுலகானது உடல், கருவி, நிலம், நுகர்ச்சிப் பொருள் என நான்காகப் பாகுபட்டு நிற்கும். இவை தனு, கரணம், புவனம், போகம் எனப்படும். இவற்றைத் தோற்றுவித்து உயிர்களோடு பொருத்துதலே படைத்தல் தொழிலாகிறது.




காத்தல்

உடம்பைப் பெற்ற உயிர்கள் உலகிடைப் போக்குவரவு புரிகின்றன. அறிகருவிகள், தொழிற் கருவிகள் ஆகியவற்றைக் கொண்டு உலகப் பொருள்களை அறிந்து பயன் கொள்ளுகின்றன. வினைகளைச் செய்கின்றன. வினைப் பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகர்கின்றன இவ்வாறு வினை நுகர்ச்சியின் பொருட்டு, உயிர்களுக்குக் கொடுக்கப்பட்ட உடம்பு முதலியவற்றைக் குறித்த காலம் வரை நிற்கும்படி செய்தலே காத்தல் தொழிலாகும்.




அழித்தல்

இனி, உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து பிரித்து, அவற்றின் காரணத்தில் ஒடுக்குதலே அழித்தல் தொழில் எனப்படுகிறது. எந்த உயிரும் தனக்குக் கொடுக்கப்பட்ட உடம்பையும் உலகையும் விட்டுப் பிரிவதை விரும்புவதில்லை. சாவு என்பது உயிருக்குச் செல்ல முடியாத துன்பமாகும். சற்று முன் வரை நன்றாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தவர் துடுமென மாண்டு விழுவதைக் காணும்போது அவரைச் சார்ந்தவர் மனம் என்ன பாடுபடுகிறது? இறைவனே இது என்ன அநியாயம்? உனக்குக் கண்ணில்லையா? என்று கதறுகிறார்கள். இப்படிப்பட்ட அழித்தலை இறைவன் செய்தல் நன்றோ? என ஐயுறலாம், ஓர் எடுத்துக்காட்டினால் இதற்கு விடைகூறலாம். மகன் நோய்வாய்ப்பட்டு இளைத்திருந்தான். தந்தை மிகவும் கவலைப்பட்டார். மருத்துவர் வந்து பார்த்தார். பையனுக்கு இப்பொழுது முழு ஓய்வு தேவை. படிப்பது கூட அவனது நிலையைப் பாதிக்கலாம். என்று கூறிச் சென்றார். அவர் சொன்ன அறிவுரையைப் பையன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் வெளியே சென்று விளையாட விரும்பினான். ஆனால் தந்தையார் அனுமதிக்க வில்லை. இரவு நேரத்தில் கண் விழித்துப் படிக்க விரும்பினான்; அதற்கும் தந்தையார் விடவில்லை புத்தகத்தை எடுத்துப் பூட்டி வைத்தார். விளக்கை அணைத்து விட்டார் இதையெல்லாம் கண்டு மகனுக்கு ஆத்திரம் வந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? அப்பாவாயிற்றே! மகனுடைய பார்வையில் தந்தையின் செயல் கொடுமையானதாகத் தெரிகிறது. ஆனால் மகன் மீது கொண்ட அன்பினால் அல்லவா தந்தை இப்படியெல்லாம் செய்கிறார்? விளையாட்டுப் பொருளை அவனிடமிருந்து விலக்கி வைக்கிறார். விளக்கை அணைத்து வைக்கிறார்; புத்தகத்தை அவனிடமிருந்து பிரித்து வைக்கிறார். இத்தந்தையின் செயல் போன்றது இறைவன் செயல். வினைப்பயன்களாகிய இன்ப துன்பங்களை மாறி, மாறி நுகர்ந்த உயிர்கள் அதனால் இளைப்பு எய்தி நிற்கும். அவ்இளைப்பினை நீக்கக் கருதுகிறான் இறைவன். அதன் பொருட்டே உடம்பு முதலியவற்றை உயிர்களிடமிருந்து பிரித்து வைக்கிறான் உயிர்களின் பார்வையில் இச்செயல் கொடுமையானதாகத் தோன்றலாம். ஆனால் ஆழ்ந்து நோக்கினால், உயிர்களின் மீது கொண்ட கருணையினால் அல்லவா இறைவன் இப்படிச் செய்கிறான் என்பது புலனாகும்; இறைவன் அழித்தலைச் செய்வது உயிர்களின் நன்மைக்காகவே என்பது விளங்கும். மேற்கூறிய முத்தொழில்களும் மாயாகாரியமாகிய சடப்பொருள்களிடத்தே இறைவன் செய்கின்ற தொழில்களாகும். சடமாகிய உடம்பு முதலியவற்றைத் தோற்றுவித்தல் அவற்றை நிலைநிறுத்துதல், பின் அவற்றை ஒடுக்குதல் என்பது பற்றி இவ்வுண்மை அறியப்படும். இனிச் சித்தாகிய உயிரினிடத்தே செய்கின்ற தொழில்களே அடுத்து வரும் மறைத்தலும், அருளலும் ஆகும்.




மறைத்தல்

மறைத்தலாவது, மாயை கன்மங்களைச் செயற்படுத்தி உயிர்களைப் பிறப்பு இறப்புக்களிற் பட்டு உழலச் செய்தல். இதற்கு மறைத்தல் என்ற பெயர் ஏன்? எனில், மாயை கன்மங்கள் செயற்படும் பொழுது உயிர்களுக்கு மெய்யுணர்வு ஆகிய பேரறிவு தோன்றாமல், மயக்கவுணர்வு ஆகிய சிற்றறிவே தோன்றும். அச்சிற்றறிவு உயிர்களை உலகப் பொருள்களோடு பிணித்து அப்பொருள்களையே மேலும் மேலும் பெற்றுத் துய்க்கும் படியான நாட்டத்தைச் செய்யும். இறைவனை நோக்கவிடாது உலகையே நோக்கி நிற்கச் செய்யும். அதன் காரணமாக உயிர்கள் பல அல்லல்களை அடையும். இவ்வாறு உயிர்கள் தம்மையும், தலைவனையும் அறியாது மயங்கி நிற்கச் செய்தலின் அவ்வகையில் இறைவனது செயல் மறைத்தல் எனப்படுகிறது. மறைத்தலை இறைவன் ஏன் செய்ய வேண்டும்? என வினவலாம். ஆணவமாகிய நோய்க்கு மருந்தாகவே உயிர்களுக்கு மாயை கனமங்களைச் சேர்க்கின்றான். அவற்றின் வயப்பட்ட உயிர்கள் உலக வாழ்வில் பல அல்லல்களை அடைகின்றன. இவ்வாறு உயிர்களை உழலச் செய்தலின் பயன், ஆணவ மலத்தின் சத்தி தொழிதலேயாகும் ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். தெரு முனையில் ஒரு சிறிய காபிக் கடை. கடையின் முன்னே பெருங்கூட்டம் நாம் மெய் வருத்தம் பாராது முட்டி மோதி உள்ளே புகுந்து கடைக்காரனை அடைகிறோம். அவன் ஒரு சிறிய கண்ணாடித் தம்ளரில் (அதை அவன் எங்குதான் கண்டுபிடித்து வாங்கினானோ) காபியை சுடச்சுட ஊற்றிக் கொடுக்கிறான். வாய் பொறுக்காத அளவுக்குச் சூடு. கையில் கூட வைத்திருக்க முடியவில்லை. அருகில் இருந்த பலகையில் அதை வைக்கிறோம். நேரம் போகிறதே தவிரச் சூடு போகவில்லை. நாமோ விரைந்து போக வேண்டும். ஆகவே கடைக்காரனிடம் அப்பா கொஞ்சம் ஆற்றிக் கொடு என்கிறோம். அவன் வெறுமையாக இருந்த மற்றொரு தம்ளரை எடுத்துக் கொண்டு இதையும் அதையும் மேலும் கீழுமாக வைத்துக் கொண்டு காபி வானுக்கும் மண்ணுக்குமாகப் போய் வரும்படி ஆற்றுகிறான்! ஒரு துளி கூடச் சிந்தவில்லை(காபி ஆற்றுவதும் ஒரு கலைதான்) பிறகு நம் கையில் தருகிறான். இப்பொழுது சூடு தணிந்து விட்டது. காபியைத் தம்ளரிலேயே அசையாமல் வைத்திருந்தால் அதன் சூடு குறையப் போவதில்லை. அதையே மேலும் கீழுமாகச் செலுத்தியவுடன் அதன் சூடு தானாகத் தணிந்து போயிற்று. அதே போல, உயிரானது இயக்கமற்றுக் கிடந்தால் அதனைப் பற்றியுள்ள ஆணவ மலம் நீங்கப் போவதில்லை. அது கருதியே இறைவன் மாயை கன்மங்களைக் கூட்டி உயிரைச் செயற்படுத்துகின்றான். உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தியும், இளைப்பாற்றியும் வருகின்றான் இவ்வாறு உயிர் செயற்படச் செயற்பட அதனைப் பற்றியுள்ள ஆணவமும் செயற்பட்டு அதன் சத்தி மெல்ல மெல்லத் தேய்ந்து மெலிகிறது. அதன் பொருட்டே இறைவன் உயிர்க்குயிராய் மறைந்து நின்று மறைத்தல் தொழிலைச் செய்கின்றான். ஆணவத்தின் சத்தி மெலிவடைகிறது என்றால் அதன் மறைப்பு நீங்கி உயிரின் அறிவு வளர்ந்து வருகிறது என்பது கருத்தாகும். அழித்தலைச் செய்வது உயிர்களின் நன்மைக்காகவே என்று முன்னே கூறினோம். அதே போல மறைத்தலைச் செய்வதும் உயிர்களின் அறிவை வளர்த்து உய்வித்தற் பொருட்டே என்பதை உணர்தல் வேண்டும்.

No comments:

Post a Comment