Friday, 27 April 2018

வியர்வை வெப்பம் வெறுப்பு - வெயிலின் மறுபக்கம் !


ரக்கமற்ற இடி. மிரட்டும் மின்னல். மேகம் கறுத்த அடுத்த நொடி, வீட்டிற்குள் ஒளிந்து கதவைத் தாழிட்டுக் கொள்பவர்கள்தாம் இங்கே அதிகம். ஆயினும், அரைகுறை ஆர்வத்துடன் ஜன்னல் அருகே நின்றுகொண்டு மழையின் அழகை அவர்கள் ஒரு நொடியேனும் ரசிப்பார்கள். “நல்ல மழை. வெயில் குறையும்” என்று மழைக்கு உள்ளிருந்து ஆதரவு கொடுப்பார்கள். இப்படி மழையில் நனையாமலே அதைப் பற்றிச் சிலாகிப்பவர்கள், வெயிலில் நடந்து கொண்டே அதைத் தூற்றுவார்கள். மழை, கவிதை எழுத வைக்கும். வெயில் புலம்ப வைக்கும்! 

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அடுத்த நூற்றாண்டில் மனித இனத்திற்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கப்போவது இந்த வெயில்தான். ஜுரம் வந்த பூமிக்கு உரிமையாளர்களான நாம் இதுவரை எந்த வைத்தியமும் செய்யாததால் வருடா வருடம் அதன் வெப்ப நிலை வெப்பமானியின் மெர்குரியை அதன் அதிகபட்ச நிலையிலேயே வைத்து அலறச் செய்து கொண்டிருக்கிறது. உலகின் வெப்பமான வருடங்கள் பட்டியலில் பத்தில் ஒன்பது வருடங்கள், கடந்த 2000ம் ஆண்டிற்குப் பிறகே வந்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் கூறும் தரவுகளின்படி, பூமி தனது பனிப்போர்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. கடலில் அதைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த நூறு வருடங்களில், இதனால் கடல் நீர் மட்டம் ஏழு அங்குலங்கள் (178 மிமீ) உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடின் அளவும் காற்றில் அதிகரித்துள்ளது.
வெப்பநிலையும் உயிரினங்களும்

பூமியின் ஒவ்வோர் இடத்திற்கும் ஒவ்வொரு வெப்பநிலை உண்டு. அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, அங்கிருக்கும் உயிரினங்கள் (மனிதர்கள் உட்பட), தாவரங்கள் தங்கள் உடல் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும். சிலவகை தாவரங்கள், பூமியின் குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர வேறு எங்கும் இருக்காது. இதற்குக் காரணம், அந்தத் தாவரம், அந்த வெப்பநிலையில் மட்டுமே உயிர் வாழும் திறன் கொண்டது. இது சில வகை மிருகங்களுக்கும் பொருந்தும். 

மனிதர்களைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட எல்லைவரை, வெளியிலிருக்கும் வெப்பநிலைக்கு ஏற்ப உடல் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். நம் உடல்களின் உயிரியல் கடிகாரங்கள் மாற்றங்களை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ளாது. உதாரணத்திற்கு உங்கள் உடல் தினமும் மாலை ஆறு மணிக்கு அலுவலக ஏ.சி அறையிலிருந்து வெளியேறி இரவு ஏழு மணிக்கு உங்கள் வீட்டின் சீதோஷ்ண நிலைக்குத் தள்ளப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, உங்கள் உடல் அதற்கு ஏற்றவாறு அதைத் தகவமைத்து கொள்ளும். நாளடைவில் இரவு ஏழு மணி ஆனதும் உங்கள் உடல், உங்கள் வீட்டு வெப்பத்திற்கு ஏங்க ஆரம்பிக்கும். நீங்கள் திடீரென அன்று ஓவர்டைம் பார்த்தால், மனச்சோர்வு ஏற்படக்கூடும். மலைப்பிரதேசங் களில் வாழ்பவர்களின் உடல்கள் அங்கிருக்கும் குளிருக்கு ஏற்றவாறு தன்னைத் தயார்படுத்தி வைத்திருக்கும். இதனால்தான், அவர்கள் சென்னை போன்ற வெப்ப நகரங்களுக்கு வேலை கிடைத்து வரும்போது அங்கிருக்கும் சூட்டைத் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சரும நோய் போன்ற பிரச்னைகளைத் தருவித்துக் கொள்கின்றனர்.

வெயிலை நாம் ஏன் வெறுக்கிறோம்? 

வெயிலில் செல்ல நாம் ஏன் இவ்வளவு தயங்குகிறோம்? இதற்கு உளவியல் ரீதியாக அளிக்கப்படும் முதல் பதில் வியர்வை மற்றும் அதனால் உருவாகும் துர்நாற்றம், அரிப்பு மற்றும் சருமக் கேடுகள். நம்மில் பெரும்பாலானோர் சுத்தமாக இருப்பதையே விரும்புகிறோம். வியர்வை, துர்நாற்றம் போன்றவை சுற்றி இருப்பவர்களுக்குச் செய்தி அனுப்பாமல் இருக்க, வாசனைத் திரவியங்களை உபயோகிக்கிறோம். சங்கிலி போல உருவாகும் இந்தச் சங்கதிகள்தான் வெயில் நமக்குத் தரும் எரிச்சலூட்டும் தண்டனைகள். ஆனால், இதோடு வெயிலின் உளவியல் ரீதியான கோரத்தாண்டவம் நிற்பதில்லை. வெப்பத்தினால் அதீத மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. 

“வெயிலினால் உடல் ரீதியாக ஏற்படும் டீஹைட்ரேஷன் (உடல் வறட்சி) போன்ற பிரச்னைகளைத் தாண்டி மன ரீதியாகவும் ஒரு சில பிரச்னைகள் ஏற்படும்’’ என்கிற தகவலுடன் ஆரம்பிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. வெயிலுக்கும் மனநிலைக்குமான தொடர்பு பற்றி அவர் பகிரும் தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

‘‘மேலை நாடுகளில், பருவ காலங்களுக்கும் மனித மனநிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து நிறைய ஆய்வுகள் உண்டு. முக்கியமாக, உஷ்ணமான சீதோஷ்ண நிலை இருக்கும்போது ஒருவித எரிச்சலுடனே நாம் எல்லாக் காரியங்களையும் அணுகுவோம். வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வு, மனச்சோர்விற்கும் வழி வகுக்கும். மற்ற நாள்களைப்போல நம்முடைய பணிகளை இயல்பாக முடிக்க முடியாமல் போவதால், இது நிகழ்கிறது. இதன் தொடர்ச்சியாக வெயில் மேல் நமக்கு ஏற்படும் கோபத்தை நாம் மற்றவர்களின் மீது வெளிப்படையாகக் காட்டி விடுகிறோம். இத்தகைய சிரமங்கள் ஏற்படாமல் இருக்க, நம்முடைய நாள்களைத் திட்டமிடுதல் என்பது கோடைக்காலத்தில் அவசியமான ஒன்றாகிறது. 

வெயில் தொடங்கும் முன்னரே அலுவலகத்திற்குப் பயணம் செய்வது; வெயில், வாகனப்புகை, காற்று மாசு போன்றவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது போன்றவை பலன் தரும். முன்னர் நாம் ஒரே மூச்சில் செய்து வந்த ஒரு வேலையை வெயில் காலத்தின்போது அவ்வாறு செய்ய முடியாமல் போகலாம். அதற்காக எரிச்சலோ, கோபமோ படாமல் அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொள்வது நலம். டீ, காபி போன்றவற்றுக்குப் பதிலாகப் பழச்சாறுகள் குடிப்பது நமக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். டயட் விஷயத்திலும் கவனம் செலுத்தி நீர்ச்சத்துமிக்க உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல்நலமும் மன நலமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”.

வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது என்பது இயலாத காரியம்தான். ஆனால், வரப்போகும் வெயிலுக்கு ஏற்றவாறு நம் உடலைத் தகவமைத்துக் கொள்வது என்பது எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று, செய்யக் கூடிய ஒன்று. முக்கியமாகச் சரும நோய்கள் அதிகம் ஏற்படும் காலம் இதுதான். அது போல, வேலை செய்யும் இடத்தில் 20 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமும், 35 முதல் 60 சதவிகிதம் வரை ஈரப்பதமும் இருந்தால் மட்டுமே நாம் சிரமமின்றி வேலை செய்ய முடியும். உங்கள் உடலால் ஓரளவிற்குத்தான் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு தன் தேவைகளை மாற்றிக் கொள்ள முடியும். அதைத் தாண்டினால் சருமப் பிரச்னைகளில் ஆரம்பித்துப் பல்வேறு தீங்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

இந்தப் பிரச்னைகளை எப்படித் தவிர்க்கலாம்? சரும நோய் மருத்துவர் பிரபாவதி விளக்குகிறார்.

“வெயில் காலத்தின்போது இரண்டு வகைப் பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். ஒன்று எல்லோருக்கும் ஏற்படும் வியர்க்குரு, படர்தாமரை, தேமல் போன்ற பொதுவான சருமப் பிரச்னைகள்.  வெயில் காலம் அதன் உச்சத்தில் இருக்கும்போது இவை சர்வ சாதாரணமாக ஏற்படும். அதிக நேரம் வெயிலில் செலவழித்தால் வெங்குரு எனப்படும் சரும வெடிப்புகள் ஏற்படும். இதற்குக் காரணம் சூரியனில் இருந்து அதிக அளவில் வெளியேறும் புற ஊதாக் கதிர்கள்தான். அடிக்கும் வெயில் ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொருவரின் உடல் தன்மையைப் பொறுத்தே பாதிப்பின் வீரியம் இருக்கும். இதிலிருந்து காத்துக்கொள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம். இதன் முக்கியப் பணியே, நம் சருமத்திற்கும் சூரிய ஒளிக்கும் இடையே ஒரு தடையாக இருப்பதுதான். அதிலும் ரிஃப்ளெக்டார் (Reflector) வகை க்ரீம்கள் விசேஷமானவை. அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் சூரிய ஒளி நம் சருமத்தை பாதிக்காதபடி திருப்பி அனுப்பி விடுகின்றன. முக்கியமாக, துத்தநாகம் (Zinc) கலந்த க்ரீம்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல பலன்களைத் தரும். இதனால் பின் விளைவுகள், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. நீங்கள் எந்த வகை க்ரீம்களை உபயோகித்தாலும் அதன் ஆயுள் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம்தான். அதன் பிறகு, மீண்டும் அதை உபயோகப்படுத்த வேண்டும். 

வெயிலில் அலைந்தால் சருமம் கறுத்துப்போவது இயற்கைதான். அப்படி நிகழ்ந்தால்தான் உங்கள் எதிர்ப்பு சக்தி நன்றாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். இந்தக் கருமைதான் அதீத வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது. வெயில் காலம் முடிந்தவுடன் சருமம் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். இதுதவிர ஒரு சாராருக்கு மட்டும் ஏற்படும் பாதிப்புகளும் உண்டு. அவர்களின் உடல் வெயிலுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளாது. அப்படிச் செய்து கொண்டாலும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும், அல்லது திரும்பவே திரும்பாது. ஒரு சில வினோத சரும நோய்கள் உள்ளவர்களுக்கு இப்படித்தான் வெயிலுக்குப் பிறகு சருமம் இயல்பு நிலைக்குத் திரும்பாது. சருமப் புற்றுநோய் போன்றவை இதன் தொடர்ச்சிதான். முறையான மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிலைமை மோசமாவதைத் தவிர்க்கலாம்” என்கிறார் பிரபாவதி.

இருப்பிடத்தைக் குளுமையாக வைத்துக்கொள்ளும் வழிகள்
ஏ.சியை நீங்கள் எந்த அளவிற்குக் குளிராக வைத்திருக்கிறீர்களோ அந்த அளவு அது அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். அறையிலுள்ள உங்களின் உடலை மட்டும் அது சும்மா விட்டு விடுமா என்ன? உங்கள் உடலில் தேவையான அளவு இருக்கும் ஈரப்பதத்தையும் அது உறிஞ்சி விடும். இது உங்களுக்கு உடல் சோர்வை ஏற்படுத்தும். முறையாக ஏ.சியைப் பராமரிக்கவில்லை என்றால்கூட அதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும். ஏ.சி ஃபில்டரை முறையாகச் சுத்தம் செய்து அழுக்கு, தூசி போன்றவற்றை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

காலை முதல் மாலை வரை ஏ.சி குளிரில் செலவு செய்வதால் உடல் சுறுசுறுப்பை இழக்க நேரிடும். குளிரிலேயே இருந்து பழகிவிட்டால் பின்னர் குறைவான வெயிலைக்கூட நம் உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறும். திடீரென வெப்பநிலை மாற்றம் ஏற்படும் போது அதை உடல் ஏற்றுக் கொள்ளாமல் ஒவ்வாமை, சுவாசம் சீரின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நாள்பட்ட நோய்கள், வாதப் பிரச்னைகள் உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் அதிகநேரம் செலவழிக்க வேண்டாம். காரணம், அது உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைவாகவே வைத்திருக்கும். அதற்காக ஏ.சி பயன்படுத்தவே கூடாது என்றில்லை. அதிகக் குளிர் இல்லாமல் மிதமான வெப்பத்தில் பயன்படுத்துதல் நலம்.

இதற்கு மாற்றாக, உங்கள் வீட்டைச் சுற்றி நிறைய செடிகள், மரங்கள் இருப்பது போலப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடு இருக்கும் சுற்றுப்புறத்தில் கொசுக்களைக் கட்டுப்படுத்தி விட்டாலே, நீங்கள் இரவின் இயற்கைக் காற்றில் ஜன்னலைத் திறந்து வைத்து உறங்கலாம். ஏ.சியின் தேவையே இருக்காது. எப்போதும் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால், வெயில் காலத்தைச் சுலபமாகக் கடந்து விடலாம்.

- ர.சீனிவாசன்

வியர்வை எதனால் ஏற்படுகிறது?

நாம் இருக்கும் இடத்தின் வெப்பநிலை உயரும் போது, நம் உடலின் வெப்பநிலையும் உயருகிறது. உடனே அந்த அதீத வெப்பநிலையைச் சீர்ப்படுத்த, நம் உடல் ஒரு தெர்மோஸ்டாட் போலச் செயல்பட தொடங்கும். நம் இதயம் அதிக அளவில் ரத்தத்தைப் பம்ப் செய்யத் தொடங்கும். இதனால் நம் சருமத்தில் வியர்வை உற்பத்தியாகிறது. சுற்றி இருக்கும் சீதோஷ்ண நிலைக்கு நம் உடல் ஈடுகொடுக்க முடியாதபோது அது வெப்பம் தொடர்பான பிரச்னைகளுக்குக் காரணமாகிறது.

வெப்பத்தால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?

* நம் உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு வெப்பநிலை உருவாகும்போது பிரச்னைகள் தலைதூக்குகின்றன. இது உடல் ஆரோக்கியத்தைச் சீர்குலைப்பதோடு நம் அன்றாடச் செயல்களையும் செய்ய விடாமல் தடுக்கின்றது. 

* வெப்பநிலை உயரும் போது உடலிலும், மனதிலும் எரிச்சல் அதிகமாகும். இது பின்னர் கோபமாக வெளிப்படும்.

* கவனக்குறைவு ஏற்படும். யோசித்துச் செயல்பட உடல் மறுக்கும்.

* அதிகத்திறனை எதிர்பார்க்கும் வேலைகள், கடினமான வேலைகளைச் செய்ய முடியாமல் போகும்.

வெப்பப் பக்கவாதம் (Heat Stroke) என்றால் என்ன?

அதிக வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளில் மிகவும் ஆபத்தானது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்பப் பக்கவாதம். இது நிகழும்போது ஒருவரின் உடல் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருக்கும். முழுவதுமாக அல்லது அரைகுறையாகச் சுயநினைவை இழந்திருப்பார்கள். பல நேரங்களில் இந்த வெப்பப் பக்கவாதம் நிகழும் போது வியர்வை பெரிய அளவில் சுரக்காது. முக்கியமாகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். உடனே இதற்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் உயிரை இழக்கும் நிலைகூட ஏற்படலாம்.
அறிகுறிகள்

* எரிச்சல், சருமம் வறட்சி.

* தலைச்சுற்றல், மயக்க நிலை, தள்ளாடும் நிலை.

* தலைவலி, குழப்பம்.

* சோர்வு.

* தண்ணீர் குடித்தும் அடங்காத தாகம். 

* அதிக உடல் வெப்பநிலை.

* வலிப்பு.

என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும்?

* உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும். உதவி வரும் வரை கட்டாயம் ஒருவர் அருகில் இருக்க வேண்டும்.

* மிகவும் குளிர்ந்த, நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

* ஷூ, சாக்ஸ், மேலாடை போன்ற தேவையற்ற உடைகளை அகற்றி விடவும். 

* குளிர்ந்த நீரில் நனைத்த துணி அல்லது ஐஸ்கட்டிகள் கொண்டு தலை, முகம் மற்றும் கழுத்திற்கு அழுத்தம் கொடுக்கவும். குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்து விடவும்.

* தண்ணீர், பழச்சாறு போன்றவற்றைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டாம்.

சைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்

தில் புரதச்சத்து அதிகமிருக்கிறது... முட்டையின் வெள்ளைக்கருவிலா, பாதாம் பருப்பிலா? இந்தக் கேள்விக்கான பதில்  ஆச்சர்யம்! முட்டையின் வெள்ளைக்கருவோடு போட்டிவைத்தால், `என் ஒவ்வொரு பகுதியிலும் புரதச்சத்து அதிகம் இருக்கிறது’ என்று தம்ஸ்அப் காட்டி வெற்றி பெறுவது பாதாம்தான்.  சைவ உணவிலிருந்தும் நமக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும். சில உதாரணங்கள்...

மனித உடல் வெவ்வேறு வகையான புரதங்களால் உருவானது. உடல் வளர, காயங்கள் குணமாக, வேதி வினைகளைச் செய்ய என அனைத்துக்கும் புரதம் தேவை. உடலுக்குத் தேவையான அனைத்துப் புரதச்சத்துகளையும் சைவ உணவுகள் மூலமும் பெற முடியும்.
100 கிராம் பூசணி விதையில் 33 கிராமும், 100 கிராம் முந்திரிப் பருப்பில் 24 கிராமும், 100 கிராம் பாதாம் பருப்பில் 20 கிராம் புரதமும் இருக்கின்றன. ஒரு கப் பூசணி விதையில் இவ்வளவு புரதச்சத்தா? அம்மாடியோ!
ஸ்பைருலினா எனப்படுகிற கடல்பாசியில்  புரதத்துடன், வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம் சத்துகளும் அதிகமாக இருக்கின்றன. இவற்றைப் பொடிகளாக்கி உணவு, ஜூஸ்களில் சேர்த்து உட்கொள்ளலாம்.
சைவ உணவில் அதிக புரதம் தேவைப்பட்டால், சப்ஜா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

28 கிராம் பாதாமில் 6.2 கிராம் புரதம் இருக்கிறது. அதே நேரத்தில், ஒரு பெரிய முட்டையில் 5 கிராம் புரதம் மட்டுமே இருக்கிறது. கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும் யோகர்ட்டில் மாட்டிறைச்சியில் இருப்பதைவிட புரதச்சத்து அதிகம் என்பது இன்னோர் ஆச்சர்யம். ஒன்றரை கப் யோகர்ட்டில் 18 கிராமும், 50 கிராம் மாட்டிறைச்சியில் 14 கிராம் புரதமும் இருக்கிறது.

எந்த உணவில் எவ்வளவு புரதம் இருக்கிறது என்பது முக்கியமில்லை. புரதம்தான் அமினோ அமிலங்கள் சுரப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. அவற்றில் ஒன்பது வகை அத்தியாவசியமான அமினோ அமிலங்களை நம் உடல் சுரக்காது. முட்டை, பால் பொருள்கள், இறைச்சி, மீன் போன்றவற்றில் அமினோ அமிலங்கள் இருக்கின்றன. எனவேதான் இவை `முழுப் புரதம் தரும் உணவுகள்’ (Complete Protein) என அழைக்கப்படுகின்றன.
- மு.இளவரசன்

மதுரை சித்திரைத் திருவிழா !


மிழ்நாட்டில் புராதனமான திருத் தலங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் சங்கத் தமிழாலும் சமயத் தமிழாலும் ஒருசேரப் புகழப்பெற்ற திருத் தலம் மாமதுரை. 
மதுரை மாநகரில் சுமார் பதினேழு ஏக்கரில் தனிப்பெருங்கோயிலாக பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில். 

பெரும்பாலான பதிகங்களில் அங்கயற்கண்ணி என்று அழைக்கப்பட்ட  மீனாட்சியன்னை சோழர், பாண்டியர் காலத்தில் திருக்காமக்கோட்ட நாச்சியா ராகவும், நாயக்கர் காலத்தில் மீனாட்சி எனவும் பெயர் மாற்றம் பெற்று மதுரை யில் அருளாட்சி செய்து வருகிறாள்.

காலத்தைக் காட்டும் கண்ணாடியாகக் கோயில்கள் விளங்கினாலும், அவற்றின் தோற்றம், வளர்ச்சி, கட்டடக்கலை, வழிபாடு, நிர்வாகம், சமுதாயம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை அந்தக் கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாகவே அறிய முடியும்.  
இந்தியாவில் அதிகமாகக் கல்வெட்டு கள் காணப் பெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் முப்பதாயிரம் கல்வெட்டுகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். அவற்றில் பெரும்பகுதி கோயில் களில்தான் உள்ளன. 

பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, நாயக்கர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், இதுவரை 64 கல்வெட்டுகள் படியெடுக் கப்பட்டுள்ளன. 

பிற்காலப் பாண்டியர்களின் 44 கல்வெட்டுகளும், விஜயநகர நாயக்கர் களின் 19 கல்வெட்டுகளும், ஆங்கிலேயர் களின் கல்வெட்டு ஒன்றும் இந்தத் திருக்கோயிலில் உள்ளன.

பாண்டிய நாட்டில் புகழ்பெற்ற சிவத்தலங்களில் பிரதானமானது மதுரையே. இந்தத் தலத்தை இலக்கியங்கள் ‘விழவுமலிமூதூர்’ என்று அழைக் கின்றன. இதற்கு ‘விழாக்கள் நிறைந்த தொன்மை யான நகரம்’ என்பது பொருள். இந்தப் பெயருக்குத் தகுந்தாற்போல், பல நூற்றாண்டுகளாக இந்தக் கோயிலில் பதின்மூன்று விழாக்கள் மிக விமர்சை யாக நடத்தப்பட்டு வருகின்றன. ஓர் ஆண்டில் 294 நாள்கள் இங்குத் திருவிழா நடப்பதாக சமய ஆன்றோர் தெரிவிக்கின்றனர்.  
அப்படியான விழாக்களில் குறிப்பிடத்தக்கப் பெரிய விழாக்களாகத் திகழ்வன: சித்திரைத் திருவிழா, ஆவணி மூலத் திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா. 

இவற்றில், மதுரை சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. சித்திரைத் திருவிழாவின்போது உலகின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மதுரைக்கு வந்து, மீனாட்சியின் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்கிறார்கள்!

சித்திரைத் திருவிழா!

தி
ருக்கோயிலின் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் எனப்படும் நிறைவுநாளை முடிவுசெய்து, உற்சவம் தொடங்கப்படுகிறது. அவ்வகையில், சித்திரை நட்சத்திரத் தைக் கணக்கிட்டு இந்தத் திருவிழா தொடங்கும்.

பன்னிரண்டு நாள்கள் நடை பெறும் விழாவில், பத்தாம் நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம் நடைபெறும்.  திருப்புகழ் மண்டபம் அருகே நடைபெறும் திருக்கல்யாணத்தில் திருப்பரங் குன்றம் சுப்ரமணியரும் பவளக் கனிவாய் பெருமாளும் கலந்து கொள்வது விசேஷ அம்சமாகும்.  

இந்த வைபவத்தில் `குலசேகர பாண்டியர்' பட்டர் வழியிலான சிவாசார்யர் சுந்தரேஸ்வரராகவும், `உக்கிர பாண்டியர்' பட்டர் வழியிலான  சிவாசார்யர் மீனாட்சி யம்மனாகவும் வேடமேற்று, மாலை மாற்றிக்கொள்வார்கள். தொடர்ந்து, மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பெறும். பிரியாவிடை அம்மனுக்குப் பொட்டும் மாங்கல்யமும் அணிவிக்கப்பெறும்.  
இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் திருமாங்கல்யம், பட்டுத்துணி, பணம் முதலியவற்றை மணமக்களுக்கு மொய் செய்கின்றனர். திருமண நிகழ்ச்சிகள் முடிந்ததும், `குண்டோதரனுக்கு அன்னமிடல்' எனும் திருவிளையாடற் புராண நிகழ்ச்சி நடைபெறும். 

திருக்கல்யாணத்துக்கு முன்பு, மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக முடிபுனைந்து செங்கோல் ஏந்தும் விழாவும் சிறப்பாக நடைபெறும். பதினோராம் நாள் தேர்த்திருவிழா. பன்னி ரண்டாம் நாள் கொடியிறக்கப்படும். விழா நிறைவு நாளான சித்திரைப் பௌர்ணமியன்று கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருள்வார். 

மீனாட்சி அம்மனின் திருமணத்தைக் காண வைகையைத் தாண்டி வரும் அழகர், மதுரைக்கு வருவதற்கு முன்பே திருமணம் முடிந்துவிட்டது போலவும், இந்தச் செய்தியைக் கேட்டு அழகர் திரும்பிவிடுவது போலவும் சித்திரைப் பெரு விழாவை அமைத்திருக்கிறார்கள்.

அழகர் கோயிலில்... 

வை
கையாற்றின் வடகரையில் அழகர் விழா கொண்டாடும்  வைணவ மக்களும், தென்கரையில் சித்திரைத் திருவிழா கொண்டாடும் சைவ மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும்படி, நாயக்கர் காலத்தில் இந்தத் திருவிழா மாற்றி அமைக்கப்பட்டது.  
``மாசி மாதத்தில் நடந்துட்டிருந்த சித்திரைத் திருவிழாவை உழவர் களுக்காக சித்திரை மாதத்துக்கு மாத்தினது நாயக்க மன்னர்கள்தான். கிட்டத்தட்ட நானூறு வருடங் களாகச் சித்திரை மாதத்தில்தான் இந்த விழா தொடர்ந்து நடந்து வருகிறது. 

அழகர் கோயிலில் நடக்கும் பத்து நாள் சித்திரைத் திருவிழாவில், முதல் மூன்று நாள் கோயிலுக்குள்ளேயே அழகர் எழுந்தருள்வார். பின்னர் மூன்றாம் நாள் மாலை, தங்கப்பல்லக்கில் கள்ளர் வேடத்தில் மதுரைக்குப் புறப்படுவார்.

17-ம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை... அலங்காநல்லூர் வழியாக தேனூர் வந்தடையும் கள்ளழகர், அதன்பின்னர் வைகைக் கரையோரத்திலேயே பயணப்பட்டு வண்டியூரை வந்தடைவார். அங்கே மண்டூக மகரிஷிக்குச் சாபவிமோசனம் அளித்துவிட்டு, அழகர்கோயிலுக்குத் திரும்ப வருவார்.   
நாயக்கர்கள் காலத்தில் அழகர் மதுரைக்கு வரும் வழியில் மாற்றம் செய்யப்பட்டது. கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் மூன்றாவது நாள், திருக்கோயிலின் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து கள்ளர் வேடத்தில் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு எழுந்தருளும் அழகர், பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தை வந்தடைவார். 

அங்கிருந்து கடச்சனேந்தல் வழியாக மூன்றுமாவடியை வந்தடையும் போது, பொதுமக்கள் அழகரை எதிர்கொண்டு அழைத்துச் செல்வார்கள். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் எழுந்தருள்வார். மறுநாள் காலையில் தங்கக்குதிரை வாகனத்தில்  கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் நிகழும். பத்தாம் நாள் கள்ளர் திருக்கோலத்திலேயே பூப்பல்லக்கில் திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருள்வார்’’ என்று அழகர் கோயில் சித்திரைத் திருவிழா குறித்து விவரிக்கிறார் அம்பி பட்டர். 
மதுரை சித்திரைத் திருவிழா, மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பதுடன், மதுரை மக்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் மண்ணின் கலைகளைச் செழித்தோங்கச் செய்யும் வைபவமாகத் திகழ்கிறது.

வைகையாற்றுக்கு அழகர் வரும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளர் வேடம் பூண்டு அழகரை வரவேற்பார்கள்.

‘‘பிள்ளைவரம், நேர்த்திக்கடன்னு வேண்டுதலை நிறைவேற்ற இருபத்தோரு நாள்கள் மாலை போட்டு விரதமிருந்து, சித்திரா பௌர்ணமியன்று கள்ளர் வேடம் போடுவோம். எங்களுடைய எல்லா வேண்டுதலையும் நிறைவேற்றிய அழகரின் சிறப்பையும் அழகர் மலை சிறப்பையும் பாட்டா படிச்சபடி அழகர் முன்னாடி ஆடிப்பாடி எங்கள் நன்றியைத் தெரிவிப்போம்’’ என்கிறார் சிவராமகிருஷ்ணன். இவர் 1965-ம் ஆண்டு முதல் சித்திரைத் திருவிழாவில் கள்ளர் வேடம் பூண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர் வைபவம்...

ழகர் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அமைவது, தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்வு. `தான் வருவதற்குள் தங்கை திருமணம் செய்துகொண்டாளே' என்ற ஆதங்கத்தில் அழகர் கொண்ட கோபத்தைத் தணிக்க தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறு வதாகக் கூறப்படுகிறது. நாயக்கர் காலத்தில் புதிதாகச் சாலைகள் அமைக் கப்பட்டு அதில்தான் அழகர் பயணித்து வந்தார். அப்போது ஏற்படும் புழுதியைச் சரிசெய்ய தண் ணீர் பீய்ச்சுதல் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

சாப விமோசனம்

`வை
கை நதியில் நீ தவளையாக இருப்பாயாக' என்று சுபதஸ் முனிவரைச் சபித்துவிடுகிறார் துர்வாசர். சுதபஸ் முனிவர் தவளையாக மாறிவிட்டதால், அவர் மண்டூக ரிஷி என்று பெயர் பெற்றார். 

அவர், சாபவிமோசனம் தரும்படி துர்வாசரை வேண்டிக்கொள்ள, ``விவேகவதி (வைகை ) தீர்த்தக் கரையில் தவமியற்றி வா. அழகர் வந்து விமோசனம் தருவார்'' என்று வழிகாட்டினார் துர்வாசர்.அதன்படி, சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கவே கள்ளழகர் வைகைக்கு எழுந்தருள்வ தாகப் புராணங்கள் கூறுகின்றன. 

சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக தேனூர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து சுதபஸ் முனிவருக் குச் சாப விமோசனம், அளிக்கப்படுகிறது. அப்போது, முனிவர் சாப விமோசனம் பெற்றதைக் குறிக்கும் விதமாக `நாரை' பறக்கவிடப்படும்.

கள்ளர் வேடம்

ழகர்மலையிலிருந்து மதுரைக்குப் புறப்படும் கள்ளழகர் கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கரங்களில் வளைதடி, வளரித்தடி மற்றும் சாட்டைக் கம்பு திகழ, காதுகளில் கல்பதித்த வளையத்துடன் கூடிய கடுக்கனும், கறுப்பு வண்ண ஆடையும் அணிந்து பக்தர்கள் படைசூழ புறப்படுகிறார்.

பச்சைப் பட்டு...

சித்திரைத் திருவிழா தொடங்கியதும், அழகர் முன்பு திருவுளச்சீட்டு எழுதிப் போடப்படும்.  சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை என எழுதப் பட்டிருக்கும் அந்தச் சீட்டுகளில் ஒன்றை, அழகரை வேண்டிக்கொண்டு எடுக்கவேண்டும்.  எடுக்கப்படும் சீட்டினில் எந்த நிறம்  குறிபிடப் பட்டுள்ளதோ, அந்த நிறத்திலான பட்டுத் துணியை உடுத்திக்கொண்டு, வைகையில் எழுந்தருள்வார் அழகர்.

பச்சைப் பட்டு தேர்வானால், அந்த ஆண்டு நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் சிவப்பு என்றால் வறட்சியும், வெள்ளை என்றால் மிதமான பலன்களும் இருக்கும் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.

அழகருக்கு ஆரத்தி!

ழகரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் தாகத் தைப் போக்க நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களால் அமைக்கப்பட்டிருக்கும். 

அழகர் வரும்போது, மக்கள் தங்கள் கைகளில் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல் கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களா கவே அழகருக்கு ஆரத்திக் காட்டி வழிபடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

சுக்கிர யோகம் யாருக்கு ?

சுகபோகங்கள் அருள்வார் சுக்கிரன் ! 

சு
க்கிரனை ஆங்கிலத்தில் ‘வீனஸ்’ என அழைப்பார்கள். சூரியனுக்கு அருகில் புதனும் அதற்கடுத்து சுக்கிரனும் இருக்கின்றன. சுக்கிரனை ‘வெள்ளி’ என்றும் கூறுவார்கள். அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்பாக வானில் தோன்றும் கிரகம்தான் சுக்கிரன். நம் கிராமப்புறங்களில், ‘வெள்ளி முளைக்கும் வேளையில் வயலை நோக்கிப் புறப்பட்டான்’ என்று கூறுவார்களே, அந்த வெள்ளிதான் சுக்கிரன்.  

சூரியனிலிருந்து 6 கோடியே 70 லட்சம் மைல் தொலைவில் சுக்கிரன் இருக்கிறது. இந்தக் கிரகம் ஜோதிடக் கணக்குப்படி, 12 ராசிகளையும் சுற்றி வருவதற்குக் கிட்டத்தட்ட ஏழரை மாதங்கள்... அதாவது, 225 நாள்கள் ஆகும். இது, தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு 23:30 மணி நேரமாகிறது.  

சுக்கிரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: வெள்ளி, கவி, பிருகு, பார்க்கவன், அசுரகுரு, புகர், களத்திரக்காரகன், நேத்திரன், சுகி, போகி மற்றும் மழைக்கோள். 

சுகபோகங்கள் அருள்வதில் சுக்கிர பகவானின் பங்களிப்பு அதிகம். ஒருவருக்கு ஜாதகத்தில் சுக்கிர தசை ஆரம்பிக்கும் காலத்தில், பூர்வஜன்ம புண்ணியமும் சேர்ந்திட, அந்த அன்பர் அதிஅற்புதமான பலன்களை அனுபவிப்பார். அதேபோல், சுக்கிரயோக ஜாதகக்காரர்களும்  சகல வளங்களையும் பெற்று செளபாக்கியத்துடன் வாழ்வார்கள். சரி! எல்லோருக்குமே சுக்கிரதசையைச் சந்திக்கும் வாய்ப்பும், சுக்கிரயோக வாழ்க்கையும் கிடைத்துவிடுமா என்றால், `இல்லை' என்றே சொல்ல வேண்டும். 

பூர்வ ஜன்ம பலாபலன்களுக்கு ஏற்பவே இப்பிறவிக்கான வாழ்க்கை அமைகிறது. அவ்வகையில், ஜாதகத்தில் சுக்கிர பலம் இல்லாதவர்கள், வாழ்வில் சுக்கிர திசையையே சந்திக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்? 

அவர்களுக்கு இறை வழிபாடு கைகொடுக்கும். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்கள். அதற்கேற்ப, இப்பிறவியில் மேலும் பாவ காரியங்களுக்கு ஆளாகாமல், புண்ணியங்கள் சேரும்படியாக அறவழியில் வாழ வேண்டும். வழிபாடுகளால் தெய்வபலம் சேரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தெய்வ அனுக்கிரகத்தால், பூர்வஜன்ம கர்மவினைகளுக்கான அசுப பலன்கள் படிப்படியாகக் குறையும்போது, சுபிட்ச பலன்களும் சுக்கிரயோக வாழ்வும் கைகூடி வரும்.
அதற்கான வழிபாடு களை, சுக்கிரனின் திருவருளைப் பெற்றுத் தரும் துதிப்பாடல்களைப் பற்றி அறியுமுன், அவரின் மகிமைகள் குறித்து விரிவாக அறிந்துகொள்வோம்.  
சுக்கிர பகவானைத் தெரிந்துகொள்வோம் 

கு
ரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுமே மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். நவகிரகங்களில் பூரண சுப கிரகம் குரு. குருவுக்கு நிகரான மிகுந்த அதிர்ஷ்டமுள்ள சுப கிரகம் சுக்கிரன். தேவர்களின் குரு பிரகஸ்பதி. அசுரர்களின் குரு சுக்கிரன். குரு, சுக்கிரன் இருவருக்குமே ஜோதிட சாஸ்திரத்தில்  தனித்தனி தன்மைகள் உண்டு. 

சுக்கிரன் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் அதிபதி. மாந்த்ரீக - தாந்த்ரீக, வசிய மந்திரங்களுக்கு உரியவர்.

சுக்கிரன் என்றாலே யோகம்தான். ‘வறிய நிலையில் இருப்பவரைக்கூட மாட மாளிகையில் தங்கவைத்து, மூன்று வேளையும் அறுசுவை உணவு கிடைக்கும்படியும், எந்த நேரமும் கையில் பணம் இருக்குமாறும் செய்வார். சேவை செய்ய ஆட்கள், சொகுசு வீடு, வாகனம், துயரப்படாத மனம்,  பெண்கள் ஆதரவு,  வைர-வைடூரிய ஆபரணங்கள் அணிதல், அரசனுக்கே உதவி செய்தல், ஊரே மெச்சும் அளவில் வாழ்தல் ஆகியவற்றுக்கு சுக்கிரனே காரகத்துவம் பெற்றவர்.  
சுக்கிரன், தனது சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் ஆட்சி நிலையில் இருப்பார். தனக்கு நட்பு கிரகமான சனி ஆட்சி செய்யும் மகரம் மற்றும் கும்ப ராசிகளிலும், புதனின் ராசியான மிதுனத்திலும் நட்பு நிலையையும் கன்னி ராசியில் நீசமும் அடைகிறார். 

னக்குச் சம பலமுள்ள செவ்வாய் ஆட்சி செய்யும் மேஷம், விருச்சிகம் ராசிகளில் சம நிலையில் இருக்கிறார். சூரியன் ஆட்சி செய்யும் சிம்ம ராசியிலும் சந்திரன் ஆட்சி செய்யும் கடக ராசியிலும் பகை நிலையை அடைகிறார்.
 
னக்கு நிகரான பலம் வாய்ந்த, அதே தருணத்தில் தனக்குப் பகை கிரகமான குருவின் ஆட்சி வீடுகளில் ஒன்றான தனுசு ராசியில் நட்பாகவும், மீன ராசியில் உச்சமாகவும் காணப் படுகிறார். எதிரியின் வீட்டில் உச்சம் பெறும் ஒரே கிரகம் என்ற சிறப்பும் சுக்கிரனுக்கு உண்டு. 

சுக்கிரன் பகை, நீசம் பெற்றிருக்கும் ஜாதகத்தில், குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்மம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்து, தன்னுடைய 5 அல்லது 9-ம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தால், பகை அல்லது நீசம் பெற்ற சுக்கிரனால் ஏற்பட்ட தோஷங்கள் விலகுவதுடன், சுக்கிரன் தனக்கு உரிய சுப பலன்களைத் தந்துவிடுவார்.  

குரு, பகை ராசிகளான ரிஷபம், மிதுனம், துலாம் ஆகிய ராசிகளிலிருந்து, பகை அல்லது நீசம் பெற்ற சுக்கிரனை 5 அல்லது 9-ம் பார்வையால் பார்த்தால், சுக்கிரனால் 50 சதவீதப் பலன்கள் கிடைக்கும். 

னக்குச் சம ராசியான கும்பத்திலிருக்கும் குரு, 5,9-ம் பார்வையால் சுக்கிரனைப் பார்த்தால், சுக்கிரன் 75 சதவீதப் பலன்களைத் தருவார்.

குரு நீச ராசியான மகரத்தில் நின்று 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், கால் பங்கு மட்டுமே சுக்கிரன் சுப பலனைத் தருகிறார். 

குரு-சுக்கிரன் இருவரும் 7- ம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்ததுக் கொண்டால், இருவரும் எந்த ராசியில் எந்த நிலையில் இருந்தாலும், முழுமையான சுபயோக பலனையே தருகிறார்கள். பொதுவாக குருவும் சுக்கிரனும் ஒருவரையொருவர் பார்க்கும் வகையில் ஜாதகம் அமைந்த அன்பர்களுக்கு மிக மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.     
சுக்கிரனுக்கு உரிய காரகத்துவங்கள்  

தானியம் - மொச்சை
அங்கம் - இந்திரியங்கள்
தத்துவம் - பெண்
வஸ்திரம் - வெண்பட்டு
வாகனம் - மாடு
மொழி - தெலுங்கு 
பஞ்சபூதம் - அப்பு - நீர்
திசை - தென்கிழக்கு
ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒரு மாதம்
தன்மை - ஸ்திரம்
ஆட்சி -  துலாம், ரிஷபம்
உச்சம் - மீனம்
நீசம் - கன்னி
நட்பு - மகரம், கும்பம்
பகை - கடகம், சிம்மம்
மூலத்திரிகோணம் - துலாம்
எண் - 6
சுக்கிர திசை - 20 ஆண்டுகள்
சுக்கிரனுக்கு உரிய நட்சத்திரங்கள் - பரணி, பூரம், பூராடம். 
பார்வை   - ஏழாம் பார்வை
மலர் - வெள்ளைத் தாமரை
நிறம் - வெண்மை
உலோகம் - வெள்ளி
ரத்தினம் - வைரம்
தூப தீபம் - லவங்கம்
சமித்து - அத்தி
சுவை - புளிப்பு
நாடி - சிலேத்துமம்
அதிதேவதை - லட்சுமி, இந்திரன், வருணன்
குணம் - ராட்சஸம் 
குருவும் சுக்கிரனும் சேர்க்கை பலன்கள் 

கு
ருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்றிருந்தால், சுப பலனைத் தருகிறார். 

குருவும் சுக்கிரனும் 5, 9, 11-ம் இடங்களில் நின்றிருந்தால் அவரவர்க்கு உரிய சுப பலனைத் தருவார்கள். 
குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8, 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்றிருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால், பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை. 

மற்ற கிரகங்களுடன்...

ருவருக்கு சுக்கிர தசை 20 ஆண்டுகள் நடைபெறும். இந்தச் சுக்கிர தசை ஒருவரின் இளமைப் பருவத்திலேயே வருவது மிகவும் சிறப்பானது. 

குறிப்பாக சனி தசையின் இறுதியில் பிறப்பவர்களுக்கும், புதன் தசையில் பிறப்ப வர்களுக்கும் சுக்கிர தசை இளமையிலேயே வந்து, அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும். சுகங்களை அள்ளித் தருவதில் சுக்கிரனுக்கு நிகர் சுக்கிரன்தான்.  
சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும்போது பலன்கள் மாறுபடும். எந்த கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்திருந்தால், என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சுக்கிரன் - சூரியன்  

சு
க்கிரனுடன் சூரியனின் சேர்க்கை நல்ல இடத்தில் அமைந்திருந்தாலும், அந்த இடத்துக்கு குருவின் பார்வை இருந்தாலும், செல்வச் செழிப்பான வாழ்க்கை அமையும். இப்படி சுக்கிரனும் சூரியனும் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபட்டால், நற்பலன்களைப் பெறலாம். 

சுக்கிரன் - சந்திரன் 

சு
க்கிரனுடன் சந்திரன் சேர்ந்திருக்கப் பெற்றவர்கள், நிறைந்த கல்வியறிவும், புத்தி சாதுர்யமும் கொண்டவர்களாகத் திகழ்வர். சகல சுக செளகர்யங்களையும் பெற்றிருப்பார்கள். பிறருக்கு உதவி செய்யத் தயங்க மாட்டார்கள். சுக்கிரனுடன் தேய்பிறை சந்திரன் இருந்தால், திங்கள்கிழமைகளில் சிவபெருமானை நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

சுக்கிரன் - செவ்வாய் 

செ
வ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கும் அமைப்பைப் பெற ஜாதகர்கள், தோற்றப் பொலிவுடன் திகழ்வார்கள். தேக ஆரோக்கியமும், தைரியமும் மிகுந்தவர்களாக விளங்குவர். 
எதையும் சாமர்த்தி யமாகத் திட்டமிட்டுச் செய்து, வெற்றிபெறக் கூடியவர்கள்.  கலைகளில் பிரியம் உள்ள இவர்கள் பொறுமைசாலிகளும்கூட. சுக்கிரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பவர்கள் முருகப்பெருமானை வழிபடுவதும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.

சுக்கிரன் - புதன் 

சு
க்கிரன் புதனுடன் சேர்ந்திருக்கும் அமைப்பு இருந்தால், அந்த ஜாதகர்கள் அன்பும் பாசமும் நிறைந்தவர்களாகத் திகழ்வர். இவர்கள், மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். எப்போதும் நேர்மையுடன் நடந்துகொள்வார்கள். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டு, வெற்றிவாகை சூடுவார்கள். சுக்கிரனுடன் புதன் சேர்ந்திருப்பவர்கள் விஷ்ணுவை வழிபடுவதும், விஷ்ணுசஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். 

சுக்கிரன் - குரு 

ந்த இரு கிரகங்களும் இணைந்திருக்கும் ஜாதகக் காரர்கள், ஒரு கருத்தை ஆதரித்தும் பேசுவார்கள்; அந்தக் கருத்தையே மறுத்தும் பேசுவார்கள். இரக்க மனம் கொண்ட இவர்களிடம் பிடிவாத குணமும் சேர்ந்தே இருக்கும். இவர்களுடைய வாழ்க்கை எப்போதும் போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தாலும் தெய்வபலம் இவர்களுக்குத் துணை நிற்கும். சுக்கிரனுடன் குரு சேர்ந்திருப்பவர்கள் தட்சிணாமூர்த்தியையும், மகாலட்சுமியையும் வழிபட்டு நற்பலன் களைப் பெறலாம். 

சுக்கிரன் - சனி 

சு
க்கிரனுடன் சனி சேர்ந்திருந்தால், அந்த அன்பர்கள் கம்பீரத் தோற்றத்துடன் காணப்படுவர். இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்று பகுத்துப் பார்க்கத் தெரியாது. 

இவர்கள் உண்மையானவர் களாகவும், நீதி நேர்மையைக் கடைப்பிடிப்பவர் களாகவும் நடந்து கொள்வார்கள். இந்தச் சேர்க்கை அமையப் பெற்ற அன்பர்கள் ஆஞ்சநேயரை வழிபடுவதால் நற்பலன்கள் கிட்டும்.

சுக்கிரன் - ராகு 

ந்தக் கிரகங்கள் சேர்ந்திருக்க பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணைவரிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருப்பார்கள். எண்ணிய காரியங்களை எண்ணியபடியே முடிப்பதில் வல்லவர்கள். வீடு, நிலங்கள், மாடு- கன்றுகள், செல்வம், செல்வாக்கு அனைத்தும் பெற்றிருப்பார்கள். இந்தச் சேர்க்கை சரியான இடத்தில் அமையப் பெறாதவர்கள், ராகுகாலத்தில் துர்கையை வழிபட்டு நலன் பெறலாம்.

சுக்கிரன் - கேது 

ஜா
தகத்தில் சுக்கிர பகவானும் கேது பகவானும் சேர்ந்திருக்கும் அமைப்பு, ஆன்மிகத்தில் ஈடுபாட்டையும், திருக்கோயில்களைத் தரிசிப்பதில் ஆர்வத்தையும் தரும். இந்த அன்பர்கள் கவிஞர்களாகவும் ஆசிரியர் களாகவும் பெரும்புகழுடன் திகழ்வார்கள். 

இவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

பன்னிரு ராசிகளும் சுக்கிர பலனும் 

ஜா
தகத்தில் சுக்கிர யோகம் நிரம்பப் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். ஏனெனில், வாழ்வில் சகல சுகபோகங்களும் அமைவதற்கு அருள்பாலிப்பவர் சுக்கிர பகவான். ஆகவே, ஜாதகத்தில் அவருடைய நிலையை அறிந்துகொள்வதில் அதீத ஆர்வம் காட்டுவார்கள். இங்கே, 12 ராசிகளில் சுக்கிரன் இருக்கும்போது உண்டாகும் பலாபலன்கள் உங்களுக்காக! 
மேஷம்: மேஷ ராசியில் சுக்கிரன் இடம்பெற்றால், இல்லற வாழ்வில் சஞ்சலங்கள் ஏற்படும். வேலை விஷயமாக அலைச்சல் அதிகமாக இருக்கும். குறைவான வசதி படைத்தவராக இருந்தாலும் அரசன் போன்ற ஆளுமைத்திறன் பெற்றிருப்பார்.
ரிஷபம்: புத்திக் கூர்மையுடன் செயல்படுபவர். நல்ல இல்லற வாழ்கை அமையப் பெறும். வறியவருக்கு உதவும் மனம் கொண்டவராக இருப்பார். வேலை செய்யும் நிறுவனத்தின் நன்மதிப்பை பெற்றிருப்பார்.
மிதுனம்: செல்வச் செழிப்பு வாய்க்கப்பெற்றவர். ஒரே நேரத்தில் பல தொழில் களில் வெற்றிகரமாக வேலை செய்யும் அளவுக்கு சாதுர்ய புத்தி கொண்டவராக இருப்பார். அயல்நாட்டுத் தொடர்பு மற்றும் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.  
கடகம்: செய்யும் செயலில் மிகுந்த கவனம் கொண்டவராகவும், பலவிதமான வழிகளில் வாழ்க்கை நடத்துபவராகவும் திகழ்வர்; நற்குணம் கொண்டவர்.
சிம்மம்:  அளவான குடும்பத்தோடு வளமான வாழ்க்கை அமையும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் நன்மைகள் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகள் இருக்கும். 
கன்னி: பரம்பரைத் தொழிலில் ஈடுபாடு இருக்காது. அலைபாயும் மனமும், வெளிநாடு செல்லும் ஆர்வமும் ஏற்படும். இல்லற வாழ்வில் சச்சரவுகள் நிலவும்.
துலாம்: பேரும் புகழும் பெற்றுத் திகழ்வர். விவசாயம், கால்நடை, தானியங்கள் தொடர்புடைய தொழில்கள் மூலம் செல்வம் உண்டாகும். அறிவாளிகளின் தொடர்பு நன்மை தரும். 
விருச்சிகம்: அலைச்சல் மிக்க வாழ்க்கையைக் கொண்டவர். அதிகமாகப் பேசுபவர். பிறரது செயல்களில் ஆர்வம் காட்டுபவர்; சண்டைகளைத் தூண்டிவிடுபவர். இவர்களில் பலர், பெரிய கடனாளியாகத் திகவர்.
தனுசு: எதிரிகளை வீழ்த்துவார். தன் குலத்துக்கு தலைவராகத் திகழ்வார். மிகவும் மதிக்கப்படுபவர். நல்ல கவிஞராகவும் திகழ்வார். அரசாங்கத்துக்குப் பிரியமானவராக விளங்குவார். குடும்பத்துடன் இன்பமாக வாழ்வார். 
மகரம்: மகிழ்ச்சியான வாழ்க்கை அமையப் பெற்றவர். எந்தத் துக்கத்தையும் தாங்கும் திறன் பெற்றவர். கபம் மற்றும் வாதம் தொடர்பான நோய்களுக்கு ஆளாவார். வாழ்க்கைத் துணைவர் வழியில் பிரச்னைகள் உண்டு.
கும்பம்: உணர்ச்சிவசப் படுபவர். அடிக்கடி நோய் வாய்ப்படுவார். தீய செயல்-பழக்கவழக்கங்களுக்கு ஆளாகும் வாய்ப்பும் உண்டு. சமுதாயத்தில், எப்போதும் எதிர்மறை சிந்தனை கொண்டவராகத் திகழ்வார்.
மீனம்: தன் வம்சத்திலேயே மிக முக்கிய நபராகத் திகழ்வார். இவர்களுக்கு, விவசாயம் மூலம் பெரும்பொருள் சேரும். எல்லாவற்றிலும் மேன்மை நிலையை அடைபவர். மீனத்தில் சுக்கிரன் வர்க்கோத்தமம் பெற்றால், இவர்களது சுயமரியாதைக்கு 
இழுக்கு நேரிடலாம்.

சுக்கிர யோகம் பெற எளிய வழிபாடுகள் 

ஜா
தகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றவர்கள், சகல லட்சணங்களுடன் அழகாக இருப்பார்கள். முகம் களை பொருந்தியதாக இருக்கும். சுக்கிரன் இந்திரியங்களுக்கும் அதிபதி என்பதால், இவரது ஆதிக்கத்துக்குத் தக்கபடியே ஒருவரது இல்லற வாழ்வும், வாழ்க்கைத்துணையும் அமையும்.  
சுக்கிரன் பூரண சுப கிரகம் என்பதால், அவர் அசுபர்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் சேரக்கூடாது. அப்படிச் சேர்ந்தால், அதற்கு உரிய பரிகாரங்களைச் செய்ய வேண்டும். 

சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமை வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் விலகும்.

குரு வழிபாடு, ஏழைகளுக்கு தானம் செய்தல், மகாலட்சுமி வழிபாடு ஆகியவற்றைச்செய்தால், சுக்கிரனால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஜாதகத்தில் சுக்கிரன் பகை அல்லது நீசம் பெற்று திகழ்கிறார் எனில், அந்த ஜாதகக்காரர்கள் வெள்ளிக்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்ததும், பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் துதிப் பாடலைப் பாராயணம் செய்து பூஜித்து வந்தால், அவர்களின் வாழ்வு மேம்படும்.  

துதிப்பாடல்... 

சுக்கிர மூர்த்தி சுகமிக ஈவாய் 
வக்கிரமின்றி வரம் பல தருவாய் 
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே!


சுக்கிரனுக்கு உரிய மந்திரம்

ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் ஸ: 
சுக்ராய நம: 

 
சுக்கிர காயத்ரீ 

ஓம் ப்ருகுபுத்ராய வித்மஹே
ஸ்வேத வாகனாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்:


*** 
பரிகாரத் தலங்கள் 

சு
க்கிரனுக்கு உரிய ஸ்தலமாக கஞ்சனூர் விளங்குகிறது. இந்தத் தலம், சூரியனார்கோவிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கஞ்சனூரில் சிவபெருமான் குளிர் நிலவாகக் காட்சி தருகிறார்.  
மேலும் திருவரங்கம் சென்று ஸ்ரீரங்கநாத பெருமாளையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் தரிசித்து வழிபடுவதும் சுக்கிரனுக்கு உரிய சிறப்பான பரிகாரமாகும். 

பொதுவாக, சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலோ, அவற்றின் பார்வை பட்டாலோ மோசமான பலன்கள் விளையும், இதைப் போக்குவதற்கு நவகிரக ஹோமத்தில் சுக்கிரனுக்கு கிரக சாந்தி செய்யவேண்டும். இதற்குப் பெயர் ‘சுக்கிர சாந்தி’ என்று இருந்தாலும், நிஜத்தில் சுக்கிரனுக்கு மட்டும் சாந்தி செய்வதில்லை. எந்தப் பாவ கிரகம் தொந்தரவு தருகிறதோ, அதற்கும் சேர்த்தே சாந்தி செய்வார்கள்.

பொதுவாக, சின்னப் பிரச்னைகளுக்கு சுக்கிர சாந்தி செய்வது இல்லை. தாள முடியாத அளவு உபத்திரவம் இருந்தால் மட்டுமே செய்கிறார்கள்.

சுக்கிர தசையில் சூரிய புக்தி இருந்தால், அது மோசமான பலன்களைத் தரும். தலை, வயிறு, கண் தொடர்பான நோய்கள் வரும். 

சுக்கிர தசையில் சந்திர புக்தி இருந்தால், பணத்துக்குக் கஷ்டம் இருக்காது. ஆனால், உடம்பு பாடாய்ப் படுத்தும். வாத, பித்த ரோகங்கள் வரும். அதேபோல், செவ்வாய் புக்தி இருந்தால், குடும்பத்தில் கலகம் விளையும். கேது புக்தி இருந்தாலும் உடல்நலம் கெடும். எதிர்பாராத வகைகளில் உபத்திரவம் நேரிடும்.

இதுபோன்ற பிரச்னை களிலிருந்து மீள்வதற்காக சாந்தி செய்வார்கள். 

சுக்கிர சாந்தியை வெள்ளிக்கிழமைகளிலும், பூச நட்சத்திரத்திலும் செய்யலாம். இரண்டும் இணைந்து வரும் நாளாக இருந்தால் ரொம்ப விசேஷம்.  

சுக்கிர சாந்தி செய்யும் போது, மகாலட்சுமியை வணங்குவது சிறப்பானது. ‘நமஸ்தேஸ்து மகாமாயே’ எனத் தொடங்கும் மகா லட்சுமி அஷ்டகத்தைத் தவறாமல் 41 வெள்ளிக் கிழமைகள் படித்து, மகா
லட்சுமியை வணங்கி வந்தால் சங்கடங்கள் விலகி, நீங்காத செல்வம் கிடைக்கும்.

சுக்கிரனே போற்றி!

ஸ்ரீ
ஸ்காந்த புராணத்தில் சுக்கிர பகவானின் மகிமையை விவரிக்கும் மிக அற்புதமான ஸ்தோத்திரம் உள்ளது. அதன் கருத்துகளை விளக்கும் போற்றிப் பாடல் இங்கே உங்களுக்காக!

இந்தத் துதிப்பாடலைப் பக்தியோடு படித்து, சுக்கிரபகவானை வழிபடுபவர்களுக்கு சுக்கிரயோகம் வாய்க்கும். நீண்ட ஆயுள், பொருள், சுகம், புத்திர சம்பத்து, லட்சுமிகடாட்சம் ஆகிய அனைத்தும் ஸித்திக்கும். 

வெண்மை நிறத்தவரே
வெளுப்பு வஸ்திரம் தரித்தவரே 
சுக்கிரனே போற்றி!

வெள்ளை ஆபரணங்களும்
வெண்கிரணங்களும்
கொண்டவரே சுக்கிரனே போற்றி!

பார்கவனே போற்றி
காவ்யனே போற்றி
கருணைக்கடலே போற்றி

ஞானத்தால் அறியத்தக்கவரே 
ஆத்ம சொரூபத்தை அறிந்தவரே
சுக்கிரனே போற்றி போற்றி! 

தொகுப்பு: எஸ்.கதிரேசன்

கங்கைக்குப் புனிதம் தந்த தீர்த்தம் !


றைவன், தான் படைத்த ஜீவராசி களிடம் எந்த பேதமும் பார்ப்பதில்லை. ஆறறிவு பெற்ற மனிதர்களுக்கு மட்டு மல்லாமல், தன்னை உள்ளன்போடு வழிபடும் அனைத்து ஜீவன்களுக்கும் அருள்புரிபவர். 

மனிதர்கள் மட்டுமின்றி ஜீவராசிகள்  பலவும் இறைவனை வழிபட்டு பேறு பெற்றிருக்கின்றன. அந்த வகையில், பூனை ஒன்று வழிபட்டு பேறு பெற்ற தலம்தான், ஸ்ரீமுத்தாம்பிகையுடன்  ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் கொண்டிருக் கும் வில்லியப்பாக்கம். 
இந்தத் தலத்தில் பூனை மட்டுமின்றி, வேடன் ஒருவனும் வழிபட்டு சிவனரு ளைப் பெற்று மகிழ்ந்திருக்கிறான்.

அந்தத் திருக்கதை...

சிவகணங்களில் முதன்மையானவர் நந்திகேஸ்வரர். சிவபெருமானே இவருக்கு பஞ்சாட்சர உபதேசம் செய்து வைத்ததால், சைவ ஆசார்யர்களில் முதல் குரு என்ற பேறும் பெற்றவர். 

நந்தியெம்பெருமான் நாள்தோறும் செய்யும் சிவபூஜைக்கு அவரின் சீடர்களான காந்தனும் மகா காந்தனும் உதவி செய்வது வழக்கம். 

ஒருநாள், சீடர்கள் இருவரும் சிவ பூஜைக்கு மலர் பறிப்பதற்காகச் சென் றனர். நந்தவனத்தின் அருகிலிருந்த தாமரைக் குளத்தில் பூத்திருந்த வெண் தாமரை மலர்களைப் பறித்து, கூடையில் நிரப்பிக்கொண்டு திரும்பும்போது, ஒரு மலர் குளத்திலும் மற்றொரு மலர் தரையிலுமாக விழுந்தன. குளத்தில் விழுந்தது மீனாகவும், கரையில் விழுந்தது கிளியாகவும் மாறியது. 

இந்த அதிசயத்தைக் கண்ட காந்தனும் மகாகாந்தனும், மீண்டும் மீண்டும் மலர் களைத் தவறவிட்டு, அவை மீனாகவும் கிளியாகவும் மாறுவதைக் கண்டு குதூகலித்தபடி விளையாடத் துவங்கினர். 

மலர் பறிக்கச் சென்ற இருவரும் நீண்டநேரமாகியும் திரும்பி வராததால், நந்திதேவர் அவர்களைத் தேடிக்கொண்டு  அங்கேயே வந்துவிட்டார். சீடர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருப்ப தைக் கண்டவர், கோபம் அவர்களைச் சபித்துவிட்டார். நந்திதேவரைக் கண்டதும் பூனை போல் விழித்துக்கொண்டிருந்த காந்தனைப் பூனையாக மாறும்படியும், கையில் கோலுடன் இருந்த மகா காந்தனை வேடனாக மாறும்படியும் சபித்தார்.

பின்னர், தங்களது தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட சீடர்களிடம் இரக்கம் கொண்டவர், சாப விமோசனத்துக்கான வழியையும் வழங்கினார். ``நீங்கள் இருவரும் காஞ்சி மாநகருக்கு தென்கிழக்கு திசையில் உள்ள புண்டரீக புஷ்கரணியில் நீராடி,  அதன் அருகில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்ற அகத்தீஸ்வரருக்கு பக்தியோடு பூஜை செய்யவேண்டும். இருவரும் ஒருவரை ஒருவர் அறியாதபடி, தனித் தனியாக வழிபடவேண்டும். ஈசன் அருளால் இருவரும் நேருக்குநேர் சந்திக்கும்போது, உங்களின் சாபம் நீங்கி என்னை அடைவீர்கள்’’ என்று கூறினார்.

சாபத்தின்படி பூனையாக மாறிய காந்தனும், வேடனாக மாறிய மகாகாந்தனும் நந்திதேவர் குறிப்பிட்ட தலத்தை அடைந்தனர்.  ஒருவரையொருவர் சந்திக்க வாய்ப்பில்லாதபடி தனித்தனியே அங்கிருந்த சிவலிங்கத்தை அனுதினமும் பூஜித்து வந்தனர். சாப விமோசனத்துக்கான காலமும் கனிந்தது. 

ஒருநாள் புண்டரீக புஷ்கரணியில் நீராடிவிட்டு, சிவனாரைப் பூஜிக்கச் சென்றான் வேடன் (மகாகாந்தன்). அப்போது, தனக்கு முன்பாக வேறு எவரோ சிவனாருக்குப் பலவித புஷ்பங்களைச் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வழிபட்டிருப்பதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.  ‘ஆளரவமற்ற இந்தக் காட்டுப் பகுதியில் தன்னை மீறி யார் பூஜை செய்திருக்க முடியும்?’ என்று யோசித்துப் பார்த்தும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை. 

அன்றிரவு அங்கேயே தங்கியிருந்து பூஜை செய்ய வருவது யார் என்பதைக் கண்டறிய முடிவு செய்தான். அதன்படி இரவு துவங்கியதும் அங்கு வந்து, சிவலிங்கத்துக்கு அருகிலிருந்த சரக் கொன்றை மரத்தின் கிளையில் ஏறி அமர்ந்துகொண்டு கண்காணிக்க ஆரம்பித்தான். அதிகாலைப் பொழுதில் ஒரு பூனை ஈசனுக்கு மலர்களைத் தூவி பூஜை செய்தது. அதைக் கண்ட வேடன், அந்தப் பூனையைப் பிடிப்பதற்காக மரத்திலிருந்து வேகமாக கீழே குதித்தான். அதனால் ஏற்பட்ட சலசலப்புக்கு அஞ்சிய பூனை அங்கிருந்து வேகமாக ஓடத் தொடங்கியது. 

வேடன், பூனையைக் குறிவைத்து அம்பை எய்தான். அந்தத் தருணத்தில் பூனை சற்றே விலகியதால், அம்பானது சிவலிங்கத்தின் மேல் பட்டு, லிங்க மூர்த்தத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. வேடன் பதற்றத்துடன் அலற, அந்தச் சத்தம் கேட்டு பூனை திரும்பிப் பார்த்தது. பூனையும் வேடனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அக்கணமே அவர்களது சாபம் நீங்கியது. காந்தனும், மகாகாந்தனும் சுயரூபம் பெற்று கயிலையைச் சென்றடைந்தனர்.

அவர்களது சாபத்தைப் போக்கிய ஈசன், ‘கிராத மார்ஜாலீஸ்வரர்’ என்ற திருப்பெயரை ஏற்றார். ‘கிராதன்’ என்பது வேடனையும், ‘மார்ஜாலம்’ என்பது பூனையையும் குறிக்கும். இங்கு அருள்பாலிக்கும் அம்பாள், ‘முத்தாம்பிகை’, ‘மௌத்தி காம்பிகை’ ஆகிய திருப்பெயர்களுடன் திகழ்கிறாள். இந்தக் கோயிலின் கல்வெட்டுகளில் இறைவனின் திருநாமம், ‘திருஅகஸ்தீஸ்வரமுடைய நாய னார்’ என்றும்,  ஊர் ‘வில்லிவாக்கம் என்கிற கங்கைகொண்ட சோழ நல்லூர்’ என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. 

கி.பி.1257-ல் வீரபாண்டியன் ஆட்சிக்காலத்தில், கோயிலில் விளக்கேற்றுவதற்கு அளிக்கப்பட்ட தானம் குறித்து ஒரு கல்வெட்டும், விஜயநகர மன்னர் கம்பணன் காலத்தில் `கங்கைகொண்ட சோழ நல்லூர்' என்று வழங்கப்பட்ட இந்தத் தலத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றி ஒரு  கல்வெட்டும் காணப்படுகின்றன.

திருமால்,  பிரம்மா, கங்கை வழிபட்ட தலம்!


‘தங்களில் பெரியவர் யார்?' என்பது குறித்த சர்ச்சையில், `தானே பெரியவர்' என்று பிரம்மன் திருமால் ஆகிய இருவருக்குள்ளும் எழுந்த கர்வத்தால் ஏற்பட்ட தொஷம் நீங்கிட, அவர்கள் இருவரும் வந்து வழிபட்டு அருள்பெற்ற தலம் இது. 

அவர்கள் மட்டுமா? தன்னிடம் சேரும் பாவங்க ளைப் போக்கிக் கொள்வதற்காக, ஈசனின் ஆணையின் படி கங்காதேவியும் இந்தத் தலத்துக்கு வந்தாள். இங்குள்ள புண்டரீக புஷ்கரணியில் நீராடிப் புனிதம் பெற்றாள் என்கிறது தலபுராணம். கோயிலின் ஸ்தல விருட்சமான சரக்கொன்றை கோயிலுக்குள் உள்ளது. அந்த மரத்தினடியில் ஒரு சிவலிங்கம் காட்சி தருகிறது.

மிகவும் புராதனமான இந்தத் திருக்கோயில், இந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஜமீன்தாரராக இருந்த சூணாம்பேடு திவான்பகதூர் அருணாசல முதலியாரின் பரம்பரையில் வந்தவர்களால் மிகவும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞராகப் பணியாற் றும் சி.இராமகிருஷ்ணா, கோயிலின் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.

‘`தேவர்களும், மகரிஷிகளும், மன்னர்களும்பணிந்து வழிபட்ட இறைவன் இவர். இன்றும் தம்மை உள்ளன்போடு வழிபடும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார். குறிப்பாக திருமணத்தடை நீங்கவும், மழலைப்பேறு வாய்க்கவும் பக்தர்கள் பலர் இங்கு வந்து இறைவனை வழிபட்டுப் பலன் பெறுகின்றனர்’’ என்றார், கோயிலின் அர்ச்சகர் சங்கர குருக்கள். நீங்களும் ஒரு முறை இத்தலத்துக்குச் சென்று அகத்தீஸ்வரரைத் தரிசித்து, வாழ்வில் அல்லல்கள் நீங்கிட அருள்பெற்று வாருங்கள். 

துர்கையின் எழில் கோலம்! 

ந்தக் கோயிலின் வடக்குக் கோஷ்டத்தில் அழகுக் கோலத்தில் அருள்பாலிக்கிறாள் ஸ்ரீதுர்கை. 

வெண்கொற்றக் குடைக்குக் கீழே தோரண அலங்காரம் திகழ, சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம் ஆகியவற்றை ஏந்தியபடி ஆறு திருக்கரங் களுடன், கரண்ட மகுடம் தரித்து, மகிஷனின் சிரத்தின் மீது நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறாள் இந்த அம்பிகை. திருவடிகளுக்கு அருகில் சேடியர் இருவர் சாமரம் வீசுகிறார்கள். வேறெங்கும் காண்பதற்கரிய திருவடிவம் இது என்கிறார்கள்.

இந்தத் துர்கையின் திருவடிவம் 12 அல்லது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் துறை அறிஞர்கள் கூறுகிறார்கள். தேவியின் சிற்பம் மட்டுமின்றி, சோழர் கட்டடக் கலைக்குச் சான்றாக மேலும்பல சிற்பங்கள் கோயிலில் நேர்த்தியான முறையில் அமைந்துள்ளன. 

முன் மண்டபத் தூண் ஒன்றில் திகழும் சரப மூர்த்தி, நரசிம்ம மூர்த்தி, கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்திக்கு அருகில் உள்ள ஏகபாத மூர்த்தியின் சிற்பம் ஆகியன மிகுந்த கலைநயத்துடன் காட்சி தருகின்றன.

எங்கிருக்கிறது..? 

கா
ஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், சூணாம்பேடு எனும் ஊரிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வில்லிப்பாக்கம்.சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் 83-ஏ அரசுப் பேருந்தும், சில தனியார் பேருந்துகளும் சூணாம்பேடு வழியாகச் செல்கின்றன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 11 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை. கோயிலின் அருகிலேயே அர்ச்சகரின் வீடும் உள்ளது.